ரெயில்வே அமைச்சகம்

23.5 லட்சம் பயணிகளை ``ஷ்ராமிக் சிறப்பு'' ரயில்கள் மூலம் 20 நாட்களில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளது இந்திய ரயில்வே

Posted On: 20 MAY 2020 3:34PM by PIB Chennai

நாட்டின் பல பகுதிகளில் சிக்கித் தவித்து வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் பிற மக்களை சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ``ஷ்ராமிக் சிறப்பு'' ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 2020 மே 20ஆம் தேதி வரை (காலை 10.00 மணி வரை) மொத்தம் 1773 ``ஷ்ராமிக் சிறப்பு'' ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. 23.5 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த 1773 ரயில்கள் ஆந்திரப்பிரதேசம், பிகார், சண்டிகார் யூனியன் பிரதேசம், டெல்லி, கோவா, குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, புதுவை யூனியன் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்க மாநிலங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஆந்திரப்பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம்,  நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில்கள் சென்று சேர்ந்தன.

ரயில்களில் ஏறுவதற்கு முன்னதாக பயணிகளுக்கு உரிய மேலோட்டப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. பயணத்தின்போது, பயணிகளுக்கு இலவச உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
 



(Release ID: 1625656) Visitor Counter : 195