தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கொவிட்-19 பரவலின் போது வருங்கால வைப்பு நிதி சந்தாவை 10சதவீதம் ஆக இபிஎப்ஓ குறைத்து அறிவித்திருப்பது ஊழியர்கள் மற்றும் வேலை கொடுப்போரின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

Posted On: 19 MAY 2020 6:32PM by PIB Chennai

கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் தொற்று காரணமாக ஏற்பட்ட இதர சிரமங்களால், 1952-ஆம் ஆண்டின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வழிவகைகள் சட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களும், வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளர்களும் அடைந்துள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

1952-ஆம் ஆண்டின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வழிவகைகள் சட்டத்தின் கீழ் வரும் அனைத்துப் பிரிவு நிறுவனங்களுக்கும் இபிஎப் சந்தாவை 2020 மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்து மத்திய அரசு கடந்த 13.05.2020 அன்று அறிவித்தது. தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக, இந்த அறிவிக்கை இந்திய அரசிதழில் எஸ்ஓ எண். 1513 () –ன்படி 18.05.2020 –ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் TAB- COVID-19-ன் கீழ் காணலாம்.

இந்த சந்தா குறைப்பானது, மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது மத்திய அரசு அல்லது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது அவற்றுக்கு சொந்தமான நிறுவனங்களுக்குப் பொருந்தாது. இந்த நிறுவனங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தைத் தொடர்ந்து சந்தாவாக அளிக்கும்.

இந்தக்  குறைப்பு விகிதம் பிரதமர் ஏழைகள் மறுவாழ்வு திட்டப் பயனாளிகளுக்கும் பொருந்தாது. ஏனெனில், ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் அனைத்து ஊழியர்கள் ( ஊதியத்தில் 12%) மற்றும் வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளர்களுக்கும், ஊழியர் ஓய்வூதிய பங்களிப்பு ( ஊதியத்தில்12%) என மாத ஊதியத்தில் மொத்தம் 24 சதவீதம் மத்திய அரசால் பங்களிக்கப்படுகிறது.

வருங்கால வைப்பு நிதி சந்தாவை, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கும் நடவடிக்கை 4.3 கோடி ஊழியர்கள், உறுப்பினர்கள் மற்றும் 6.5 லட்சம் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்குப் பயனளிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு ஓரளவுக்கு உடனடி பணப்புழக்கத்துக்கு வழி ஏற்படும்.

12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக சட்டபூர்வ சந்தா குறைப்பின் பயனாக, இபிஎப் சந்தா விகிதத்தில் குறைப்பின் மூலமாக, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர ஊதியம் அதிகரிப்பதுடன், வேலை கொடுக்கும் நிறுவன உரிமையாளருக்கும் பொறுப்பு செலவில் 2 சதவீதம் குறையும். ரூ.10,000 இபிஎப் மாத ஊதியம் பெறும் ஊழியரிடமிருந்து, ரூ.1200க்குப் பதிலாக ரூ.1000 மட்டுமே குறைக்கப்படும். அதே போல நிறுவன உரிமையாளர்கள் இபிஎப் பங்களிப்பாக ரூ. 1200க்குப் பதிலாக ரூ.1000 செலுத்தினால் போதும்.

சிடிசி மாதிரி நிறுவனங்களில் இபிஎப் மாத ஊதியம் ரூ. 10,000-த்திலிருந்து நிறுவனத்திடம் இருந்து ஊழியர் ரூ.200 கூடுதலாகப் பெறுவார். அதேபோல நிறுவன உரிமையாளர் செலுத்தும் பங்களிப்பில் ரூ.200 கழிக்கப்படும்.

1952 இபிஎப் திட்டத்தின் கீழ், அதிகாரப்பூர்வ விகிதத்தை (10%) விடக் கூடுதலாக செலுத்துவது ஊழியரின் விருப்பமாகும். அதே சமயம் உரிமையாளர் தனது பங்களிப்பை 10 சதவீதம் அளவுக்கு (அதிகாரபூர்வ விகிதம்) குறைத்துக் கொள்ளலாம்.

 



(Release ID: 1625188) Visitor Counter : 251