உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 மேலாண்மையில் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆய்வு.

Posted On: 10 MAY 2020 2:51PM by PIB Chennai

கோவிட்-19 மேலாண்மையில் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு ராஜீவ் கௌபா இன்று காணொளி மூலம் ஆய்வு நடத்தினார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 3.5 இலட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக, 350-க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்தார். கூடுதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதில் ரயில்வே நிர்வாகத்துடன் மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருப்பி அழைத்து வருவதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

டாக்டர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவ அலுவலர்கள் பணிக்குச் செல்வதற்கு தடைகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்று அமைச்சரவைச் செயலர் வலியுறுத்தினார். கொரோனா நோய்க்கு எதிராகப் போரிட்டு வரும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகள்  எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் மாநிலங்களில் உள்ள நிலைமைகள் குறித்து, மாநில தலைமைச் செயலாளர்கள் தகவல்களைத் தெரிவித்தனர். கோவிட் -19 நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு தேவைப்படும் அதேநேரத்தில், திட்டமிட்ட படிப்படியான நிலைகளில் பொருளாதார செயல்பாடுகளையும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

 

*****



(Release ID: 1622712) Visitor Counter : 154