நித்தி ஆயோக்

கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் சி.எஸ்.ஓ.க்கள் / என்.ஜி.ஓ.க்கள் / தொழில் துறை / சர்வதேச அமைப்புகளை ஈடுபடுத்தியது அதிகாரம் அளிக்கப்பட்ட 6வது குழு.

Posted On: 04 MAY 2020 4:56PM by PIB Chennai

1. கோவிட்-19 நோய்த் தாக்குதலால் முன் எப்போதும் இல்லாத சவாலான சூழ்நிலையை நாடு சந்தித்து வரும் சூழ்நிலையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, நிட்டி ஆயோக் தலைமை செயல்பாட்டு அதிகாரி தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட 6வது குழு, மக்கள் சமுதாய அமைப்புகள், என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மேம்பாட்டுப் பங்காளர்கள், தொழில் துறை பங்காளர்கள், சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்று, அரசின் முயற்சிகளுடன் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

2. சி.எஸ்.ஓ.க்கள், என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மேம்பாட்டுப் பங்காளர்கள்: ஒட்டுமொத்த சமுதாய அளவிலான முழுமையான அணுகுமுறை:

            அதிகாரம் அளிக்கப்பட்ட 6வது குழு, 92 ஆயிரம் சி.எஸ்.ஓ.க்கள் / என்.ஜி.ஓ.க்கள்  ஆதரவை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இது சிறப்புமிக்க எண்ணிக்கையாகும். சத்துணவு, ஆரோக்கியம், கழிவுநீர் அகற்றல், கல்வி மற்றும் சமுதாய செயல்பாடுகளை அதிகம் கொண்டு போய் சேர்ப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்த அமைப்புகளின் ஆதரவை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. நோய்த் தாக்குதல் அதிகமாக உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளை அடையாளம் காண்பதிலும், அங்கு தன்னார்வலர்களை சேவையில் ஈடுபடுத்துவதிலும் மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவியாக இருக்குமாறு இந்த அமைப்புகள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன. பாதிப்பு வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளும், வீடு இல்லாதவர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், குடி பெயர்ந்தவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைக்க உதவியாக இருக்க வேண்டும் என்றும், நோய்த் தடுப்பு, சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்திக் கொண்டிருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த அமைப்புகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3. முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் திட்டம்: ஒன்று திரட்டிய தீர்வுகளை உள்ளூர் அளவில் அமல்படுத்துதல்:

நிதிஆயோக் அமைப்பால் செயல்படுத்தப்படும், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களுக்கான திட்டம், நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 112 மாவட்டங்களில் வாழும் பல மில்லியன் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதில் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் இதுவரை 610 பேருக்கு கோவிட் -19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய சராசரியான 2 சதவீதத்துடன் ஒப்பிடும் போது இது குறைவானதே. இவற்றில் ஆறு மாவட்டங்களில் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குப் பிறகு தான் முதலாவது நோய்த் தாக்குதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. பாரமுல்லா (62), நூஹ் (57), ராஞ்சி (55), ஒய்.எஸ்.ஆர். (55), குப்வாரா (47), ஜெய்சால்மர் (34) ஆகிய மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

4. சர்வதேச அமைப்புகள்: உலகளாவிய தொடர்புகளை உள்ளூர் முயற்சிகளில் பயன்படுத்துதல்:

அதிகாரம் அளிக்கப்பட்ட 6வது குழு பல்வேறு ஐ.நா. ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து, பல்வேறு மாநிலங்கள் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், உரிய காலத்தில் தீர்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள ஐ.நா. ஒருங்கிணைப்பாளர், WHO, UNICEF, UNFPA, UNDP, ILO, ஐ.நா. மகளிர் அமைப்பு, ஐ.நா. வாழ்விடம், FAO, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவற்றின் இந்தியாவுக்கான தலைவர்களுடன் ஒருங்கிணைப்பு செய்வதன் மூலம் உதவிகள் பெறப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஐ.நா. பிரிவு கூட்டு செயல்பாட்டுத் திட்டம் ஒன்றை தயாரித்து அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவிடம் அளித்துள்ளது. நோய்த் தடுப்பு, சிகிச்சை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல் ஆகியவற்றுக்கு அதில் முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.

5. தொழில் துறை மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் ஈடுபாடு: மக்கள் நலன் கருதி தனியார் துறை தலையீடுகள்

கோவிட்-19 நோய்த் தாக்குதலை சமாளிக்கும் முயற்சிகளை வேகப்படுத்துவதற்கு, தனியார் துறையினரின் பலத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, அவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அதிகாரம் அளிக்கப்பட்ட 6வது குழு மற்றும் நிதி ஆயோக் அமைப்பு ஆகியவை இடைமுகத் தொடர்பு நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. சுகாதாரத் துறை கண்காணித்தல் மற்றும் தடமறிதல், சுகாதாரத் துறை அல்லாத வழியிலான தீர்வுகள், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள், தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பிரச்சாரம் செய்தல் ஆகியவற்றில் தனியார் துறையினரின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும். அத்துடன் தொழில் துறை மற்றும் பொருளாதாரத் துறையில் எழுந்துள்ள பல சவால்களை முறியடிக்கவும் தனியார் துறையின் ஒத்துழைப்பு பெறப்படும்.

6. ஆரோக்கிய சேது: டெலி மருத்துவ அம்சத்துடன் கூடிய, மிகப் பெரிய அளவிலான பங்கேற்புடன் கூடிய ஆபத்து வாய்ப்பு மதிப்பீட்டுக்கான கைபேசி செயலி வசதி

அனைத்து சி.எஸ்.ஓ., என்.ஜி.ஓ., சர்வதேச அமைப்புகள் மற்றும் தொழில் துறை பங்காளர்களும் தங்களது செயல்பாடுகளில் ஆரோக்கியசேது செயலி வசதியை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, அதிகாரம் அளிக்கப்பட்ட 6வது குழு வலியுறுத்தியுள்ளது. பிறருடன் தங்களுக்கு உள்ள தொடர்புகளின் அடிப்படையில், ஒருவருக்கு கோவிட் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து வாய்ப்பை மதிப்பிடுவதாக இந்தச் செயலி உள்ளது. ப்ளூடூத் தொழில்நுட்பம், செயற்கைத் தொழில்நுட்ப வசதிகள் இதில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்திருப்பதன் மூலம், உலக அளவில் வேகமாக வளர்ச்சி காணும் கைபேசி செயலியாக இது இருக்கிறது.

7. தனிப்பட்ட முழு உடல் கவச உடை மற்றும் பரிசோதனைக் கருவிகள் தொகுப்பு

கோவிட் தொடர்பான சாதனங்களை இலவசமாக வழங்க பல்வேறு அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்வதில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு முக்கிய பங்காற்றியுள்ளது. பின்வரும் சாதனங்கள் இலவசமாகப் பெறப்பட்டுள்ளன:

  • RTPCR பரிசோதனைக் கருவிகள் - TEMASEK அறக்கட்டளை மூலம் 70,000 கருவித் தொகுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
  • RTPCR பரிசோதனைக் கருவிகள் - BMGF அறக்கட்டளை மூலம் 30,000 பரிசோதனை உபகரணத் தொகுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன (உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டன)
  • மேம்பாட்டுப் பங்காளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலமாக 3 லட்சம் N95 முகக் கவச உறைகளும், 5 இலட்சம் அறுவை சிகிச்சை முகக்கவச உறைகளும் அளிக்கப் பட்டுள்ளன.


(Release ID: 1621022) Visitor Counter : 328