கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கோவிட்-19 தொற்று நடவடிக்கைகளுக்குப் பின்னர் வர்த்தக வாய்ப்புகள் மீண்டு வருவதற்கான வழி முறைகள் குறித்து கடல்சார் தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசித்தார் மன்சுக் மாண்டவியா
இடுகை இடப்பட்ட நாள்:
24 APR 2020 8:37PM by PIB Chennai
மத்திய கப்பல் போக்குவரத்து (தனிபொறுப்பு) துறை இணையமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா, இந்திய கடல்சார் தொழில் துறை பிரதி நிதிகளுடன் காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.
கோவிட்-19 தொற்று சவாலுக்கு பின்னர் வர்த்தகத்தைத் தொடர்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசித்து அதற்கேற்ப தயாராவதுதான் இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்த சிக்கலான நேரத்தில், துறைமுகங்கள் சுமூகமாக செயல்பட கப்பல் போக்குவரத்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் எடுத்த சாதகமான நடவடிக்கைகளுக்குத் தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
விநியோகச் சங்கிலித் தொடரில் உள்ள பிரச்னைகளான, சரக்குகள் மற்றும் லாரிகள் இயக்கம் ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட்ட தொழில்துறையினர், இது தொடர்பாக அரசு தலையிட வேண்டும் என்றனர். மேலும், கடற்கரைப் பகுதிகளுக்கான கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், சர்வதேச அளவில் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
திரு.மன்சுக் மண்டாவியா தொழில் துறையினருக்கு அளித்த வாக்குறுதியில், ‘‘இந்திய துறைமுகங்கள் வழக்கம்போல் முழுவீச்சில் இயங்க தயாராக இருக்கின்றன என்றும், ஆனால், கோவிட்-19 தொற்றினால் சில சவால்கள் இருக்கின்றன என்றும் கூறினார். ஆனால், அவை கொள்கை முடிவுகள் மூலம் சரிசெய்யப்படும் என்றும், அந்த கொள்கைகள் சீரிய நோக்கத்துடன் செயல் படுத்தப்படும் என்றும் கூறினார். திரு. மன்சுக் மாண்டவியா தொழில் துறையினரிடம், ‘‘கடல் சார் தொழில் துறையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கான வாய்ப்பாக கோவிட்-19 இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கப்பல் போக்குவரத்துதுறை தொடர்ந்து, தொய்வின்றி பிரச்னைகளை தீர்க்க செயல்பட்டு வருகிறது. இந்த கோவிட்-19 தொற்று காரணமான சூழ்நிலையில், துறைமுகங்கள் மற்றும் கடற்சார் தொழில் துறையினர் மீண்டு வந்து சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆலோசனைகளை தொழில் துறையினர் தொடர்ந்து என்னிடம் வழங்கலாம்’’ என்றும் கூறினார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1618123)
வருகையாளர் எண்ணிக்கை : 191