நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உணவு தானியங்களை நாடு முழுவதும் அனுப்புவதில் இந்திய உணவுக் கழகம் புதிய சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2020 6:39PM by PIB Chennai

இந்திய உணவுக் கழகம், கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று 2.8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 102 சரக்கு ரயில்களில் அனுப்பி புதிய சாதனையை படைத்தது. பஞ்சாபில் இருந்து அதிகபட்சமாக 46 சரக்கு ரயில்கள் சென்ற நிலையில், தெலங்கானாவில் இருந்து 18 சரக்கு ரயில்கள் சென்றன. பஞ்சாபில் இருந்தும் ஹரியானாவில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கோதுமையும் பச்சரசியும் எடுத்து செல்லப்பட்டன. தெலங்கானாவில் இருந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இடங்களுக்கு வேகவைத்த அரிசி எடுத்து செல்லப்பட்டது. இதோடு சேர்த்து, பொது முடக்க காலத்தில் இந்திய உணவுக் கழகத்தால் எடுத்து செல்லப்பட்ட உணவு தானிய சரக்குகளின் அளவு 5 மில்லியன் மெட்ரிக் டன்னைக் கடந்துள்ளது. இது நாளொன்றுக்கு  சராசரியாக 1.65 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.

இதே காலத்தில் 4.6 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை இறக்கிய இந்திய உணவுக் கழகம், அவற்றை பிரதமர் ஏழைகள் மறுவாழ்வு உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் மாநில அரசுகளுக்கு அனுப்பியது. பிரதமர் ஏழைகள் மறுவாழ்வு உணவு திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 80 லட்சம் பயனாளிகளுக்கு இலவசமாக அளிப்பதற்காக, 4.23 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் ஏற்கனவே மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

ஏப்ரல் 15க்குப் பிறகு கோதுமை கொள்முதலும் சூடு பிடித்துள்ளது. ஏப்ரல் 22ம் தேதி வரை, 3.38 மில்லியன் மெட்ரிக் டன்கள் கோதுமை மத்திய தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1617806) வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu , Kannada