சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

கொரோனோ தொற்று சவால்களைக் கருத்தில் கொண்டு புனித ரமலான் மாத நோன்பின் போது தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்திய இஸ்லாமியர்களுக்கு முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள்

Posted On: 13 APR 2020 5:07PM by PIB Chennai

கொரோனோ தொற்று சவால்களைக் கருத்தில் கொண்டு, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ள புனித ரமலான் மாத நோன்பின் போது, இந்திய இஸ்லாமியர்கள் ஊரடங்கு விதிமுறைகளைக் கடுமையாகவும், நேர்மையாகவும் பின்பற்றி, தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து, வீடுகளுக்குள்ளேயே தங்கி, தொழுகைகளையும், மதச்சடங்குகளையும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.முக்தார் அப்பாஸ் நக்வி கேட்டுக்கொண்டுள்ளார்,

இந்தியாவில் உள்ள மாநில வக்ப் வாரியங்களின் ஒழுங்குபடுத்தும் அமைப்பான, மத்திய வக்ப் கவுன்சிலின் தலைவராகவும் உள்ள திரு. நக்வி, நாடு முழுவதும் உள்ள மாநில வக்ப் வாரியங்களின் கீழ், 7 லட்சத்துக்கும் அதிகமான மசூதிகள், ஈத்காக்கள், தர்ஹாக்கள் மற்றும் மத நிறுவனங்கள் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் வழிபாட்டுத் தலங்களில் கூட்டமாகக் கூடுவதை சவூதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனோ தொற்று சவால்களைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாத நோன்பின் போது, இந்திய இஸ்லாமியர்கள் ஊரடங்கு விதிமுறைகளைக் கடுமையாகவும், நேர்மையாகவும் பின்பற்றி, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பபதை உறுதி செய்யவேண்டும் என பல்வேறு இஸ்லாமிய மதத்தலைவர்கள், பல்வேறு சமூக, மத அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தாம் பேச்சு நடத்தி, வேண்டுகோள் விடுத்ததாக திரு. நக்வி கூறினார். வீடுகளுக்குள்ளேயே தங்கி, தொழுகைகளையும், அனைத்து மதச்சடங்குகளையும் பின்பற்றுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டார்..

புனித ரமலான் மாதத்தின் போது, எந்தச் சூழ்நிலையிலும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர இடங்களில் மக்கள் கூடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர அணுகுமுறையைப் பின்பற்றுமாறு, மத்திய வக்ப் கவுன்சில் மூலமாக, மாநில வக்ப் வாரியங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக திரு. நக்வி கூறினார். இதனை நடைமுறைப்படுத்த, பல்வேறு மத மற்றும் சமூக அமைப்புகள், மக்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றின் உதவி அவசியம். புனித ரமலான் மாதத்தில் தனி நபர் இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதற்கு, மத, சமூக அமைப்புகள், பிரபலமான நபர்கள் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைப்பது அவசியமாகும்..

 

***
 



(Release ID: 1614042) Visitor Counter : 204