உள்துறை அமைச்சகம்

இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - வங்கதேச எல்லைகளில் காவல் ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் எல்லை பாதுகாப்புப் படையினருடன் ஆய்வு

கோவிட்-19 குறித்து மக்களிடம் விளக்கி யாரும் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தல்

Posted On: 10 APR 2020 5:54PM by PIB Chennai

இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - வங்கதேச எல்லைகளில் காவல் ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, எல்லை பாதுகாப்புப் படை கமாண்ட் மற்றும் செக்டார் தலைமையகங்களுடன் நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.

எல்லைப் பகுதியில், குறிப்பாக பாதுகாப்பு வேலி இல்லாத பகுதிகளில்,  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும், யாரும் எல்லை கடந்து போகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

எல்லைப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கோவிட்-19 பற்றியும், அவர்கள் பகுதியில் இது பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விளக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். மேலும், பொது மக்கள் விவரம் தெரியாமல் எல்லையைக் கடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோவிட்-19 நோய்த் தாக்குதல் நிலையில் ஆற்றி வரும் பணிகளுக்காக எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். முடக்கநிலை காலத்தில் பின்வரும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவுகள் தங்கள் சேவையை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

  • மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்துதல்
  • கிராமங்களில் சாத்தியமான பகுதிகளில் கிருமிநீக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுதல்
  • முகக்கவச உறைகளும், கைகளைக் கழுவ சோப்புகளும் அளிப்பது
  • உதவி தேவைப்படுவோருக்கு ரேஷன் பொருட்கள், குடிநீர் மற்றும் மருந்துகள் வழங்குதல். எளிதில் அணுக முடியாத, தொலை தூரங்களில் உள்ள கிராமங்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் எல்லைப் பகுதியில் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு உதவியது.

 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் திரு. ஜி. கிஷண் ரெட்டி, திரு. நித்யானந்த் ராய் ஆகியோரும் உள்துறைச் செயலர், எல்லைப்புற மேலாண்மை செயலர், எல்லைப் பாதுகாப்புப் படை டைரக்டர் ஜெனரல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

*****



(Release ID: 1613052) Visitor Counter : 120