மத்திய அமைச்சரவை

தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் மற்றும் இந்த இயக்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட திட்டக்குழு, இயக்க வழிகாட்டுதல் குழு ஆகியவற்றின் முடிவுகள் பற்றி மத்திய அமைச்சரவையில் எடுத்துரைக்கப்பட்டது

Posted On: 09 OCT 2019 2:44PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் தேசிய சுகாதார இயக்கத்தின் முன்னேற்றம் மற்றும் இந்த இயக்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட திட்டக்குழு, இயக்க வழிகாட்டுதல் குழு ஆகியவற்றின் முடிவுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சங்கள்:

தேசிய சுகாதார இயக்கம் / தேசிய ஊரக சுகாதார இயக்கம் தொடங்கப்பட்ட பின், தாய் மரண விகிதம், சிசு மரண விகிதம், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை மரண விகிதம் குறைவது அதிகரித்துள்ளது. தற்போதைய குறைவு விகிதப்படி, நீடித்த வளர்ச்சி இலக்குகளை,  நிர்ணயிக்கப்பட்ட 2030-க்கு முன்பாகவே இந்தியா அடைந்துவிடும்.

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் குறிப்பிடத்தக்க அளவு வலுப்பட்டுள்ளது; தீவிரமடைந்துள்ளது. காசநோயைத் துல்லியமாகக் கண்டறியும் 1,180 சிபிஎன்ஏஏடி கருவிகள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம், இத்தகைய கருவிகளின் பயன்பாடு கடந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. தீவிரமாக்கப்பட்ட முயற்சிகள் காரணமாகவே ஒரே ஆண்டில் காசநோய் கண்டறிதல் 16% அதிகரித்துள்ளது.

2018-19-ல் 52,744 ஆரோக்கிய மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இலக்கு அளவான 15,000 என்பதைக் கடந்து, 17,149 ஆரோக்கிய மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 2018-19-ல் ஆஷா ஊழியர்கள், பன்நோக்கு சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள், பொது சுகாதார மையங்களின் ஊழியர்கள் உட்பட 1,81,267 சுகாதார ஊழியர்களுக்கு தொற்று அல்லாத நோய்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

2018-ல் தட்டம்மைக்கான தடுப்பூசி இயக்கம் கூடுதலாக 17 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இதில் மார்ச் 2019 வரை 30.50 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2018-19-ல் ரோட்டா வைரஸ் தடுப்பூசி மேலும் இரண்டு மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ரத்தசோகை ஒழிப்புத் திட்டம் 2018 ஏப்ரலில் ஊட்டச்சத்துத் திட்டத்தின்கீழ் தொடங்கிவைக்கப்பட்டது.

வரும்முன் காத்தல், நோய் அறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கான தேசிய மஞ்சள் காமாலை கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 கோடி பேர் பயனடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

                                        ********



(Release ID: 1587600) Visitor Counter : 153