மத்திய அமைச்சரவை

நலிந்த அல்லது இழப்பு ஏற்படுத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களை காலக்கெடுவுடன் மூடவும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை விற்பனை செய்வதற்குமான புதிய நெறிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2018 3:13PM by PIB Chennai

நலிந்த அல்லது இழப்பு ஏற்படுத்தும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களை காலக்கெடுவுடன் மூடவும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை விற்பனை செய்வதற்குமான பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் மாற்றியமைக்கப்பட்ட  நெறிமுறைகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) மூடிவிடும் திட்ட அமலாக்கத்தில் காலதாமதத்தை குறைப்பது இந்த நெறிமுறைகளின் நோக்கமாகும். 2016 செப்டம்பர் மாதம் பொதுத்துறை நிறுவனங்கள் துறை வெளியிட்ட நெறிமுறைகளுக்குப் பதிலாக இந்த புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்படும்.

சிபிஎஸ்இ-க்களை மூடிவிடும் நடைமுறைகள் மற்றும் அது தொடர்பான செயல்முறைகளை விரைவாக முடிப்பதற்கான விரிவான கட்டமைப்பை இந்த நெறிமுறைகள் தன்னகத்தே கொண்டுள்ளன. இந்த நெறிமுறைகளில் மூடிவிடும் நடைமுறைக்கான முக்கிய அம்சங்களான  காலக்கெடு பட்டியல், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் / சிபிஎஸ்இ-க்கள் ஆகியவற்றின் பொறுப்புக்களை வரையறுப்பது போன்றவை அடங்கியிருக்கும். சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகம்  / துறை மற்றும் சிபிஎஸ்இ-க்கள் முன்கூட்டிய தயாரிப்பு செயல்களை மேற்கொள்ளவும் இந்த நெறிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மூடுவதற்கான திட்ட தயாரிப்பு, மூடப்படவுள்ள சிபிஎஸ்இ-க்களின் சட்ட ரீதியிலான மற்றும் இதர கடன்களை தீர்க்கும் நடைமுறை, அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை காலக்கெடுவுடன்  விற்பனை செய்வதற்கான வழிவகைகள் ஆகியவற்றுக்கும் இந்த நெறிமுறைகள் வழிவகை செய்கிறது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட நெறிமுறைகளின்படி மூடப்படவுள்ள சிபிஎஸ்இ-க்களின் நிலத்தை வீட்டு வசதி திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தவும் இந்த நெறிமுறைகள் வாய்ப்பளிக்கின்றன. இத்தகைய சிபிஎஸ்இ-க்களில் பணியாளர்கள் இருப்பதால் இவர்களுக்கு இந்த நடவடிக்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென இதன் பணியாளர்களுக்கு தற்போது அவர்களது ஊதிய விகிதாச்சாரத்தை பொருட்படுத்தாமல் 2007-ஆம் ஆண்டு நிர்ணய கால ஊதிய அளவில் தாமாக முன்வந்து ஓய்வு வழங்கும் சீரான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

நலிந்த / நஷ்டத்தில் இயங்கும் சிபிஎஸ்இ-க்கள் ஆகியவற்றுக்கு கீழ்கண்ட நிபந்தனைகளின் பேரில் இந்த நெறிமுறைகள் பொருந்தும்.

  1. சம்பந்தப்பட்ட நிர்வாக அமைச்சகம் / துறை இந்த நிறுவனத்தை மூடிவிடுவதற்கு ஒப்புதல் / கொள்கைகள் ஒப்புதலை அமைச்சரவை / பொருளாதார விஷயங்களுக்கான அமைச்சரவைக் குழு ஆகியவற்றிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.
  2. நிர்வாக அமைச்சம்/ துறை சிபிஎஸ்இ-யை மூடிவிடுவதற்கு உரிய அதிகார அமைப்பின் அனுமதியை பெறுவதற்கான நடைமுறை தொடங்கி நடைபெற்று வரவேண்டும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிர்வகித்து வரும் அரசின் முக்கிய திட்டமான கட்டுப்படியாகும் விலையில் வீட்டு வசதி என்ற திட்டத்திற்கு மூடப்படும் சிபிஎஸ்இ-க்களின் நிலத்தை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டும்.

                             -------


(வெளியீட்டு அடையாள எண்: 1534563) வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Assamese , Gujarati , Kannada , Malayalam