பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நாளை பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 9:56AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2026 ஆகஸ்ட் 1) ஆந்திரா,  கர்நாடகா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்தைப் பிரதமர் பார்வையிடுகிறார். காலை 11:30 மணியளவில், அவர் விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3:30 மணியளவில், மைசூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகத்தைப் பிரதமர் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

ஆந்திரப் பிரதேசத்தில் பிரதமர்

ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பொது-தனியார் கூட்டு செயல்பாட்டின் மூலம் ரூ.5,640 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.460 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் உருவாக்கப்படும் ஏஎஸ்ஐபி செமிகண்டக்டர் திட்டத்திற்கு விசாகப்பட்டினத்தில் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த ஆலை, கொரியாவின் ஏபிஏசிடி நிறுவனத்துடன் இணைந்து ஏஎஸ்ஐபி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் அமைக்கப்படுகிறது. இது, இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்தின் முதல் குறைக்கடத்தி உற்பத்தி ஆலையாகும். இந்த ஆலை ஆண்டுக்கு 96 மில்லியன் குறைக்கடத்தி சிப்களை உற்பத்தி செய்து, உயர் திறன் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

சுமார் ரூ.5,550 கோடி முதலீட்டில், பவர்கிரிட் நிறுவனம் சிறப்புத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தும் கர்னூல் 4-வது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டல ஒருங்கிணைப்புக்கான மின் பரிமாற்ற அமைப்புக்கான முதற்கட்ட (4.5 ஜிகாவாட்) திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.1,880 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடகாவில் பிரதமர்

கர்நாடகாவின் மைசூரில், பிரதமர் திரு நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையம் - விவேக ஸ்மரகத்தைத் திறந்து வைக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் ​​1892-ம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூருக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை இந்த விவேக ஸ்மரகம் நினைவுகூர்கிறது. அங்கு தங்கியிருந்தபோது, ​​அவர் சொற்பொழிவுகள் ஆற்றினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நிரஞ்சன மடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த விவேக ஸ்மரகம், 81,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஒரு 4-டி அனுபவ மையம், ஒரு கண்காட்சி அரங்கம், சுமார் 700 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம், வகுப்பறைகள், மாநாட்டு அறைகள், ஒரு நூலகம், ஒரு வாசிப்பு அறை, ஒரு தியான, யோகா கூடம், புத்தகக் கடை ஆகியவை அமைந்துள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக வசதிகளையும் இந்த மையம் கொண்டுள்ளது.

 

இதன்மூலம் அருகிலுள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அத்துடன் நகர்ப்புற, கிராமப்புற இளைஞர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292165&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SH


(रिलीज़ आईडी: 2292357) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam