பிரதமர் அலுவலகம்
நியூசிலாந்தில் அரசு விருந்தின் போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2026 12:32PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அவர்களே,
இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளே,
வணக்கம்!
கியா ஓரா !
எனக்கும் எனது குழுவினருக்கும் அளித்த மனமார்ந்த வரவேற்பிற்கும், உபசரிப்பிற்கும் எனது நண்பர் பிரதமர் லக்ஸன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழங்கிய இந்த அன்பான வரவேற்பால், ஆக்லாந்தின் குளிர்காலம் கூட இன்று சற்றே குறைவாக உணரப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது நியூசிலாந்து மக்களிடமிருந்து நான் பெற்ற அன்பும் அரவணைப்பும் எப்போதும் எங்கள் இதயங்களில் நிலைத்திருக்கும்.
கடந்த ஆண்டு பிரதமர் லக்ஸன் இந்தியா வந்திருந்தது, நமது இருதரப்பு உறவின் அனைத்துப் பரிமாணங்களிலும் ஒரு புதிய ஆற்றலை உருவாக்கியது. அவரது தலைமை, தெளிவான பார்வை மற்றும் வலுவான அர்ப்பணிப்பின் கீழ், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான நட்பு ஒரு புதிய வேகத்தையும் புதிய திசையையும் பெற்றுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்திற்கு வருகை தருவது இன்றுதான் முதன்முறை. நான் அடிக்கடி சொல்வது போல, எனக்கு முன் இருந்தவர்களால் பல நல்ல பணிகள் விட்டுச் செல்லப்பட்டுள்ளன; அவற்றை நிறைவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
நண்பர்களே,
இது நமது இருதரப்பு உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
நண்பர்களே,
ஜனநாயக மாண்புகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை, நாம் இணைந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு இயற்கையான அடித்தளத்தை நமக்கு வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில், நமது இருதரப்பு உறவிற்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு வேகத்தை வழங்கியுள்ளோம்.
இன்றைய கூட்டத்தில், நமது கூட்டு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டோம். இந்தியா - நியூசிலாந்து இடையேயான உறவை உத்திசார்ந்த கூட்டு செயல்பாடு' நிலைக்கு உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளோம். இந்த அமைப்பின் கீழ், தெளிவான இலக்குகள் மற்றும் உண்மையான பலன்களுடன் நாம் ஒவ்வொரு துறையிலும் முன்னோக்கிச் செல்வோம்.
இந்த ஆண்டில், மிகக் குறைந்த சாதனைக் காலத்தில் நாம் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளோம். இந்த சாதனை இரு நாடுகளின் தொழில்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும். வர்த்தகத்துடன் சேர்த்து, நம்பிக்கை, தொழில்நுட்பம் மற்றும் திறமைக்கான ஒரு வழியை நாம் ஏற்படுத்தி வருகிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நமது இருதரப்பு வர்த்தகம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதாக நியூசிலாந்து அளித்துள்ள உறுதியை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இது இந்திய வளர்ச்சிக் கதையில் நீண்டகாலப் பங்காளிகளாக மாறுவதற்கான வாய்ப்பை நியூசிலாந்து நிறுவனங்களுக்கு வழங்கும்.
நண்பர்களே,
நமது உத்திசார்ந்த கூட்டு செயல்பாட்டை அர்த்தமுள்ளதாக்க, இரு நாடுகளின் வலிமைகளை நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பாக மாற்றி வருகிறோம். நிதியியல் தொழில்நுட்பத் துறையில், இந்தியாவின் யு.பி.ஐ அமைப்பை நியூசிலாந்தின் கட்டண முறைகளுடன் இணைப்பதை நோக்கி நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.
வேளாண்மை, பால் வளம் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைகளில், ஒத்துழைப்புக்கான வலுவான வழிமுறையை நாம் உருவாக்கியுள்ளோம். இது நமது விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் பயனளிக்கும்.
நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பாரம்பரிய மருத்துவத்தில் வளமான மற்றும் துடிப்பான மரபுகளைக் கொண்டுள்ளன. இன்று, நமது சுகாதார ஒத்துழைப்பில் பாரம்பரிய மருந்துகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம்.
பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுத் துறையில் அதிகரித்து வரும் நமது ஒத்துழைப்பு, நமது ஆழமான உத்திசார்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும். கடந்த ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், நமது கூட்டாண்மைக்கு ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது. இன்று, இந்தோ-பசிபிக் பகுதியில் கடல்சார் ஒத்துழைப்புக்கான ஒரு திட்ட வரைவிற்கு நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். இருதரப்பு கடற்படை பயிற்சிகள், தளவாட ஆதரவு மற்றும் நீரியல் துறை ஒத்துழைப்பு ஆகியவை நமது ஒருங்கிணைப்பையும் இயங்கும் தன்மையையும் மேலும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
நமது உறவின் மிகவும் வலுவான தூண், நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான பிணைப்பு ஆகும். இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையின் மூலம் நியூசிலாந்தில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்களை அன்புடன் பராமரித்து வரும் பிரதமர் லக்ஸன், நியூசிலாந்து அரசு மற்றும் நியூசிலாந்து மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று கையெழுத்தான கலாச்சார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் படைப்புத் தொழில்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களுக்கு மேலும் வேகத்தை அளிக்கும். இந்திய மாணவர்களுக்கு நியூசிலாந்து ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்களது வளாகங்களைத் திறக்குமாறு நியூசிலாந்து பல்கலைக்கழகங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
இந்த ஆண்டில், நமது இரு நாடுகளுக்கு இடையிலான விளையாட்டு உறவுகளின் நூற்றாண்டைக் கொண்டாடுகிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மேஜர் தியான் சந்த் தலைமையிலான ஹாக்கி அணி இங்கு வந்து வரலாறு படைத்தது; அந்தப் பாரம்பரியம் இன்றளவும் நமது விளையாட்டுத் துறை கூட்டாண்மைக்கு ஊக்கமளித்து வருகிறது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், இரு நாடுகளிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நாங்கள் நடத்தி வருகிறோம். கிரிக்கெட்டுடன் இணைந்து, விளையாட்டு கூட்டு நடவடிக்கை திட்டத்தின் மூலம் பிற விளையாட்டுகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். புவனேஸ்வரில் நியூசிலாந்து ரக்பி மற்றும் ரக்பி இந்தியா இடையே சமீபத்தில் நடந்த பயிற்சி திட்டம், இந்த திசையில் ஒரு நம்பிக்கையளிக்கும் தொடக்கமாக அமைந்துள்ளது.
நண்பர்களே,
உலகளாவிய அரங்கிலும், இந்தியாவும் நியூசிலாந்தும் நம்பகமான கூட்டாளிகளாகவும் நெருங்கிய நண்பர்களாகவும் திகழ்கின்றன. தற்போதைய காலத்தின் சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் நம்புகிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தோளோடு தோள் நின்று முன்னோக்கிச் செல்ல, இன்று ஒரு கூட்டு பணிக்குழுவை அமைத்துள்ளோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
நண்பர்களே,
மாவோரி புத்தாண்டுப் பண்டிகையான "மடாரிகி" நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு "மடாரிகி" என்று அழைக்கப்படும் அந்த விண்மீன் கூட்டம், நீங்கள் குறிப்பிட்டது போல, இந்தியாவில் பழங்காலம் தொட்டே "கார்த்திகை நட்சத்திரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த "மடாரிகி" திருவிழா, நட்சத்திரங்களைப் போல நமது உறவும் பிரகாசமாக மிளிர ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.
பிரதமர் லக்ஸன் அவர்களே,
உங்களது நட்புக்கும், அர்ப்பணிப்புக்கும், நியூசிலாந்திற்கான எனது இந்த பயணத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியதற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரக்பி விளையாட்டில் கூட்டு உழைப்பும் நம்பிக்கையும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல நாமும் பரஸ்பர நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம். நாம் இருவரும் ஒரே அணியில் இருக்கிறோம்; எனவே, சவால்களை மட்டுமே நாம் வீழ்த்துவோம்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான தமிழாக்கமாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2283577)
***
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2289783)
வருகையாளர் எண்ணிக்கை : 32
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
हिन्दी
,
Urdu
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam