பிரதமர் அலுவலகம்
செஷெல்ஸ் அதிபருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
28 JUN 2026 2:58PM by PIB Chennai
மேதகு டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி அவர்களே,
இரு நாடுகளின் தூதுக்குழு உறுப்பினர்களே,
ஊடக நண்பர்களே,
நமஸ்காரம்.
எங்களுக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கும், கனிவான உபசரிப்பிற்கும் அதிபர் ஹெர்மினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்" - (நீல அடிவானத்தின் பாதுகாவலர்) விருதைப் பெறுவது, எனக்கும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் அளிக்கும் விஷயமாகும். இந்த கௌரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்; காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வருங்கால சந்ததியினருக்கான தங்கள் கடமையாகக் கருதும் அனைத்து நாடுகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.
நண்பர்களே,
செஷல்ஸ் நாட்டிற்கு நான் வந்துள்ள இந்த தருணம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. செஷல்ஸ் தனது சுதந்திரத்தின் 50-வது ஆண்டைக் கொண்டாடும் அதேவேளையில், இந்தியாவிற்கும் செஷல்ஸிற்கும் இடையிலான தூதரக உறவின் 50-வது ஆண்டையும் நாம் இணைந்து கொண்டாடுகிறோம்.
கடந்த ஐந்து தசாப்தங்களாக, நாம் நம்முடைய நட்பை நம்பிக்கையாகவும், அந்த நம்பிக்கையை ஆக்கபூர்வமான ஒத்துழைப்பாகவும், அந்த ஒத்துழைப்பை நம் நாட்டு மக்களின் நலனாகவும் மாற்றியுள்ளோம்.
சகோதர, சகோதரிகளே,
பல நூற்றாண்டுகளாகவே, இந்தியப் பெருங்கடல் இந்தியாவிற்கும் செஷல்ஸிற்கும் இடையிலான உறவை வளர்த்து வந்துள்ளது. அதன் அலைகள் நம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையேயான பிணைப்பைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.
இந்தியப் பெருங்கடல் என்பது நம் அனைவருக்குமான பொதுவான இல்லம் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் வளம் ஆகியவை நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இந்த உணர்வே நமது பெருங்கடல் திட்ட தொலைநோக்குப் பார்வையின் அடித்தளமாக விளங்குகிறது.
சகோதர, சகோதரிகளே,
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாண்புமிகு அதிபர் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தபோது வெளியிடப்பட்ட கூட்டுத் தொலைநோக்குத் திட்டம், நமது எதிர்காலத்தில் கூட்டாக செயல்படுவதற்கான ஒரு திட்டத்தை வழங்கியுள்ளது. அந்தத் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், ஒவ்வொரு துறையிலும் நமது ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது.
இன்று, நமது பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலிமையாகவும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்றுவதற்கான வழிகள் குறித்து நாம் விவாதித்தோம். நமது இரு நாட்டுத் தொழில்துறைகளுக்கும் புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து கண்டறிவோம்.
இந்தியாவிற்கும் செஷல்ஸிற்கும் இடையிலான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பினை மேம்படுத்தவும் நாம் பணியாற்றுவோம். இது நமது இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன், கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடனான நமது பிணைப்பையும் வலுப்படுத்தும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது நமது இரு நாடுகளுக்கு இடையே உள்ள தொலைவைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த கருவி என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு சார்ந்த வெற்றிகரமான அனுபவங்களை செஷல்ஸுடன் பகிர்ந்துகொள்வோம். செஷல்ஸில் யுபிஐ முறையைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
நீண்ட காலமாகவே நமது உறவின் மிக முக்கியத் தூணாக மேம்பாட்டு ஒத்துழைப்பு இருந்து வருகிறது. செஷல்ஸின் முன்னுரிமைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை அதன் மையமாகக் கொண்டே இந்தியா எப்போதும் இந்த உறவை முன்னெடுத்து வருகிறது.
மாண்புமிகு அதிபர் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, 175 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பை நாங்கள் அறிவித்தோம். இத்திட்டத்தின் கீழ், சமூக வீட்டுவசதி, போக்குவரத்து, திறன் மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. செஷல்ஸின் மனித வள மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பது, இந்தியாவின் ஒரு சிறப்பான முன்னுரிமையாக எப்போதும் இருந்து வந்துள்ளது.
செஷல்ஸின் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியில் நாம் பங்களிப்பது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். இன்று தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா காணொலி வாயிலாக நடைபெறுகிறது. வரும் ஆண்டுகளில், இந்த மையம் செஷல்ஸ் இளைஞர்களின் திறன், வேலைவாய்ப்பு மற்றும் தன்னம்பிக்கையை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
சகோதர, சகோதரிகளே,
சுகாதாரத் துறையில் நமது கூட்டாண்மை காலத்தின் சோதனைகளைத் தாங்கி உறுதியாக நின்றுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று என்ற இக்கட்டான காலகட்டத்தில், ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகத் தடுப்பூசிகளை வழங்கி எங்களது கடமையை நாங்கள் நிறைவேற்றினோம்.
இன்று கையெழுத்தான 'மக்கள் மருந்தகம்' தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், செஷல்ஸ் மக்கள் தரமான மருந்துகளை குறைந்த விலையில் பெறுவதற்கு உதவும். திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியின் மூலம் செஷல்ஸின் மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த எங்களது முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.
ஆற்றல் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறைகளில் நமது ஒத்துழைப்பு சீராக முன்னேறி வருகிறது. பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட தூய எரிசக்தி சார்ந்த புதிய துறைகளில், இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையில் நமது கூட்டு செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம். நீலப் பொருளாதாரம் என்பது நமது உறவின் இயற்கையான மற்றும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தூணாகும்.
கடல் கண்காணிப்பு, கடல்சார் அறிவியல் மற்றும் கடற்கரை மேலாண்மை ஆகியவற்றில் இந்தியாவின் அனுபவங்களை செஷல்ஸுடன் பகிர்ந்துகொள்வோம். விண்வெளித் துறையிலும் நாம் இணைந்து முன்னேறி வருகிறோம்; இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவிற்கும் செஷல்ஸிற்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு என்பது பிரிக்க முடியாதவை என்று நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பாக நமது நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
சகோதர, சகோதரிகளே,
இந்தியா-செஷல்ஸ் உறவின் உண்மையான வலிமை என்பது நம் மக்களிடையே நிலவும் பிணைப்பில்தான் உள்ளது. இன்றைய விவாதங்கள் இந்த உறவை மேலும் வலுப்படுத்தும். நமது இருநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த, நாம் நிறுவன ரீதியாக முன்னேறிச் செல்வோம்.
செஷல்ஸில் யோகா மற்றும் இந்தியத் திரைப்படத் துறை பெற்றுள்ள வரவேற்பு, நம் மக்களிடையே உள்ள ஆழமான கலாச்சாரத் தொடர்பைப் பிரதிபலிக்கிறது. அதே உணர்வுடன், குறிப்பாக நமது இரு நாட்டு இளைஞர்களிடையே மக்கள் பரிமாற்றத்தை மேம்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.
சகோதர, சகோதரிகளே,
செஷல்ஸிற்கு நான் வந்துள்ளதன் நோக்கம் மிகத் தெளிவானது: கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளம் ஆகியவை கைகோர்த்துச் செல்லும் ஒரு இந்தியப் பெருங்கடலை இந்தியா தொலைநோக்காகக் கொண்டுள்ளது. அங்கு நமது கூட்டாண்மை என்பது நாடுகளின் அளவைப் பொறுத்ததல்ல, மாறாக பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அங்கு நாம் ஒருவருக்கொருவர் பக்கவாட்டில் மட்டுமல்லாமல், இணைந்து முன்னேறிச் செல்வோம்.
இந்தியப் பெருங்கடலை 'வாய்ப்புகளின் பெருங்கடலாக' மாற்ற வேண்டும் என்பதே எங்களது தொலைநோக்குப் பார்வையாகும்.
மாண்புமிகு அதிபர் அவர்களே,
நமது உறவின் கடந்த ஐம்பது ஆண்டுகள் ஆழமான நம்பிக்கையாலும், கூட்டு முன்னேற்றத்தாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஐம்பது ஆண்டுகள் புத்தாக்கம், நிலைத்தன்மை மற்றும் பகிரப்பட்ட செழிப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படும்.
இந்தியா மீதான உங்கள் நட்பிற்கும், நமது இருதரப்பு உறவின் மீதான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை ஹிந்தியில் வழங்கப்பட்டது.
(Release ID: 2278595)
***
AD/VK/PD
(रिलीज़ आईडी: 2284740)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam