பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 18 MAY 2026 5:00AM by PIB Chennai

மேதகு பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் அவர்களே,

மேதகு உர்சுலா வான் டெர் லேயன் அவர்களே,

மேதகு இளவரசர் அவர்களே,

வோல்வோ குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி அவர்களே,

ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை அமைப்பின் தலைவர் அவர்களே,

இங்கு வருகை தந்துள்ள ஐரோப்பாவின் மதிப்புமிக்க வணிகத் தலைவர்களே,

பெரியோர்களே மற்றும் தாய்மார்களே,

நமஸ்காரம்!

முதலாவதாக, இந்த வட்டமேஜை மாநாட்டிற்கு என்னை அழைத்ததற்காகப் பிரதமர் திரு. உல்ஃப் கிறிஸ்டெர்சன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுமைப் புனைவுகளுக்குப் பெயர் பெற்றது மட்டுமின்றி, ஐரோப்பாவின் உற்பத்தித் திறனின் துடிப்பான அடையாளமாகவும் திகழும் கோதன்பர்க் நகரில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை போன்ற ஒரு மதிப்புமிக்க மேடையில் உரையாற்றுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

உங்களில் சிலரை நான் இதற்கு முன்பும் சந்தித்துள்ளேன், சிலரை இன்றுதான் முதன்முறையாகச் சந்திக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி - நீங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் இணைந்திருக்கிறீர்கள்.

சிலரின் உற்பத்திச் செயல்பாடுகள் இந்தியாவில் அமைந்துள்ளன. மற்ற சிலரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. சிலர் தங்களது திறமைக்கான மனிதவளத் தளத்தை இந்தியாவில் கொண்டுள்ளனர், வேறு சிலர் தங்களது விநியோகச் சங்கிலிகளை இந்தியாவுடன் இணைத்துள்ளனர். உங்களில் பலர் இந்தியாவில் பெருமளவில் முதலீடுகளையும் செய்து வருகிறீர்கள். இன்றைய சந்திப்பு இந்த உன்னதக் கூட்டு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

நண்பர்களே,

இன்று, இந்தியா மற்றும் ஐரோப்பா இடையேயான உறவு ஒரு புதிய திருப்புமுனையில் நிற்கிறது. அரசு அளவில், நாம் ஒரு லட்சியமான மற்றும் உத்திசார்ந்த நிகழ்ச்சி நிரலை உருவாக்கியுள்ளோம்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. மேதகு உர்சுலா வான் டெர் லேயன் அவர்கள் குறிப்பிட்டபடி, இது உண்மையிலேயே "அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாயகம்" போன்றதாகும். இதனை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதே நமது முதன்மையான முயற்சியாகும்.

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை கூட்டாண்மையும், அதே போல் நடமாடும் தன்மைக்கான ஒப்பந்தமும் நமது ஒத்துழைப்பிற்கு ஒரு புதிய திசையை வழங்கியுள்ளன. இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் குழுவானது நமது கூட்டு செயல்பாட்டிற்கு  ஒரு புதிய நிறுவன வலிமையை அளித்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் புதுமைப் புனைவுகள் போன்ற துறைகளில் இந்தியாவும் ஐரோப்பாவும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதாரப் பெருவழிப்பாதை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள், பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பையும் பொருளாதார ஒருங்கமைப்பையும் துரிதப்படுத்தி வருகின்றன. பசுமை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை கொண்ட வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் நமது சிந்தனைகளும் முன்னுரிமைகளும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் ஒட்டுமொத்தமாகப் பெரிய அளவில் உற்று நோக்கினால், நமக்கிடையே ஆழமான அரசியல், பொருளாதார மற்றும் உத்திசார்ந்த ஒருங்கிணைவு உள்ளது. சமநிலையான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகை உருவாக்குவதில் இந்தியாவும் ஐரோப்பாவும் உத்திசார் கூட்டாளிகளாகத் திகழ்கின்றன.

ஆனால் நண்பர்களே,

அரசாங்கங்களால் கொள்கை ரீதியான வழிகாட்டுதல்களையும், நிறுவன ரீதியான ஆதரவையும், ஒரு பொதுவான கட்டமைப்பையும் மட்டுமே வழங்க முடியும். கள அளவில் உண்மையான மாற்றத்தை உங்களைப் போன்றவர்களின் கூட்டு முயற்சிகளால் மட்டுமே சாத்தியமாக்க முடியும். அதனால்தான், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு உங்களை அழைப்பதற்காக இன்று நான் இங்கு வந்துள்ளேன்.

நண்பர்களே,

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முதன்மையான பொருளாதார நாடாக, இந்தியா இன்று ஒரு புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியா 1.4 பில்லியன் மக்களின் லட்சியங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். நமது இளைய தலைமுறை, விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கம் மற்றும் அதிவேக உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு புதிய வேகத்தை அளித்து வருகின்றன.

கடந்த 12 ஆண்டுகளில், இந்தியா "சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்" என்ற தாரக மந்திரத்துடன் முன்னேறியுள்ளது. அரசாங்கத்தின் வலுவான அரசியல் விருப்பத்தின் ஆதரவோடு, இந்தச் சீர்திருத்த விரைவு வண்டி முழு வேகத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை வரியானது  "ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை" என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது. நொடித்த நிலை மற்றும் திவால் எல்லைக் குறியீடு வணிகக் கலாச்சாரத்தில் கூடுதல் பொறுப்புணர்வைக் கொண்டுவந்துள்ளது. நிறுவன வரிச் சீர்திருத்தங்கள் உற்பத்தியை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றியுள்ளன; அதே நேரத்தில் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் இணக்க நடைமுறைகளை எளிமையாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளன.

அந்நிய நேரடி முதலீட்டுச் சீர்திருத்தங்கள் உலகளாவிய மூலதனத்திற்காகப் பல துறைகளைத் திறந்துவிட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைத் திட்டங்கள் மின்னணுவியல், மருந்துகள், வாகன உதிரிபாகங்கள், சூரிய ஆற்றல் தொகுதிகள், தொலைத்தொடர்பு மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் வலுவான உற்பத்தி வேகத்தை உருவாக்கியுள்ளன.

நாங்கள் இணக்க நடைமுறைகளின் சுமையைக் குறைத்துள்ளதோடு, ஆயிரக்கணக்கான பழமையான விதிமுறைகளையும் ஒழித்துள்ளோம். எளிதாக வணிகம் செய்தல் என்பது நிர்வாகத்தின் ஒரு அங்கமாக மாற்றப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியானது பொதுச் சேவைகளை மேலும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றியுள்ளது.

இன்று, இந்தியா உலகின் 3-வது பெரிய புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. நமது புத்தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, நிதித் தொழில்நுட்பம், விண்வெளி, ட்ரோன்கள், உயிரித் தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் மற்றும் நடமாடும் தன்மை போன்ற துறைகளில் உலகளாவிய தீர்வுகளை உருவாக்கி வருகின்றன.

இன்று, இந்தியாவிடம் திறமை, அளவுகோல், தேவை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை உள்ளன - எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவிடம் 1.4 பில்லியன் மக்களின் உறுதியும் லட்சியங்களும் உள்ளன. அதனால்தான், நாம் விருப்பத்திலிருந்து முதலீட்டை நோக்கி நகர்வதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது.

இது தொடர்பாக, நான் உங்கள் முன் 5 பரிந்துரைகளை வைக்க விரும்புகிறேன்.

முதலாவது: தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு. வோடஃபோன், எரிக்சன், நோக்கியா மற்றும் ஆரஞ்சு போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளன. 5ஜி-யிலிருந்து 6ஜி-க்கான மாற்றம், செயற்கை நுண்ணறிவு இயக்கப்படும் நெட்வொர்க்குகள், பாதுகாப்பான இணைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக மாற முடியும். இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக மாற்றுவதற்கு நீங்கள் அனைவரும் பங்களிக்க முடியும்.

இரண்டாவது: செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், மின்னணுவியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தி. ஏஎஸ்எம்எல், என்எக்ஸ்பி செமிகண்டக்டர்ஸ், எஸ்ஏபி மற்றும் கேப்ஜெமினி போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் இன்று இங்கு வந்துள்ளனர். இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சூழலமைப்பில் பங்காளிகளாக மாறுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை தெளிவாக உள்ளது: தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் அடுத்த அலை இந்தியாவிலேயே இணைந்து உருவாக்கப்பட வேண்டும்.

மூன்றாவது: பசுமை மாற்றம் மற்றும் தூய்மையான எரிசக்தி. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில், இந்தியா எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், தூய்மையான எரிசக்தி திறனை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இஎன்ஜிஐஇ, டோட்டல்எனர்ஜிஸ், ஷெல் மற்றும் யூமிகோர் போன்ற நிறுவனங்கள் தூய்மையான எரிசக்தி, ஹைட்ரஜன், எரிசக்தி சேமிப்பு, மின்சார வாகனங்கள் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல் ஆகியவற்றில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களாகத் திகழ்கின்றன. நீங்கள் இந்தியாவில் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

நான்காவது: உள்கட்டமைப்பு, நடமாடும் தன்மை மற்றும் நகர்ப்புற மாற்றம். வோல்வோ குழுமம், மெர்ஸ்க், ஏர்பஸ், சாப் ஏபி, ஆர்செலர்மிட்டல் மற்றும் ஹைடெல்பெர்க் ஆகிய அனைத்து நிறுவனங்களின் நிபுணத்துவமும் இந்தியாவின் மாற்றத்தோடு நேரடியாக ஒத்துப்போகின்றன. நிலையான சிமெண்ட், பசுமை எஃகு, நடமாடும் தன்மை, தளவாடங்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியா மற்றும் ஐரோப்பா இடையேயான கூட்டு செயல்பாடு உலகத்தரம் வாய்ந்த முடிவுகளை வழங்க முடியும்.

ஐந்தாவது: சுகாதாரம் மற்றும் உயிரி அறிவியல். ஆஸ்ட்ராஜெனெகா, ரோச், மெர்க், பிலிப்ஸ், நெஸ்லே மற்றும் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டுள்ளன. இப்போது, நாம் இந்தக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

தடுப்பூசிகள், புற்றுநோய் சிகிச்சை, டிஜிட்டல் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் கருவிகள் ஆகியவற்றில் அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் "இந்தியாவுக்காக வடிவமைப்போம், இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வோம்" என்ற மாதிரியுடன் முன்னோக்கிச் செல்லலாம்.

நேரக் குறைபாடு காரணமாக, இங்கு வந்துள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் பெயரையும் என்னால் குறிப்பிட முடியவில்லை, ஆனால் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவானவை; எனது இந்த அழைப்பு உங்கள் அனைவருக்கும் நீட்டிக்கப்படுகிறது.

நண்பர்களே,

இந்த 5 பரிந்துரைகளை உங்கள் முன் வைத்த பிறகு, நான் உங்களிடம் ஒரு சவாலையும் முன்வைக்க விரும்புகிறேன். இங்கு வந்துள்ள ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவுக்காக ஒரு புதிய பெரிய உறுதிப்பாட்டை மேற்கொள்ள முடியுமா? அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தொடங்கப்பட வேண்டிய முதன்மைத் திட்டங்களை நாம் அடையாளம் காண முடியுமா?

இந்த அனைத்துத் திட்டங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செயல் படுத்துவதை உறுதி செய்ய இந்திய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கும். இந்த முன்முயற்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் ஒரு நிறுவன ரீதியான ஏற்பாட்டை நாம் ஏற்படுத்த முடியும்.

நண்பர்களே,

நாம் ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா - ஐரோப்பா முதன்மைச் செயல் அதிகாரிகள் வட்டமேஜை மாநாட்டை ஏற்பாடு செய்யலாம். இந்திய மற்றும் ஐரோப்பியத் தொழில்துறை அமைப்புகள் இந்த மேடையுடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்; அதோடு துறை சார்ந்த பணிக்குழுக்களையும் நாம் நிறுவ முடியும்.

ஐரோப்பிய தொழில்துறை வட்டமேஜை அமைப்பானது, ஒரு 'இந்தியா பிரிவு' அல்லது 'இந்தியா செயல்பாட்டுக் குழுவை' உருவாக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன். அதன் நோக்கம் எளிதானதாக இருக்கலாம்: ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பது; இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் புதிய நிறுவனங்களின் வருகையை எளிதாக்குவது; மற்றும் வணிகம் சார்ந்த கவலைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பது.

நண்பர்களே,

இந்தியா மற்றும் ஐரோப்பா இடையேயான கூட்டாண்மை என்பது வெறும் பொருளாதார எண்களோடு மட்டும் சுருங்கிவிடுவதல்ல. இது பகிரப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு கூட்டு செயல்பாடு ஆகும். இது ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையின் கூட்டு செயல்பாடு. இது நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையின் கூட்டு செயல்பாடு. இது புதுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் கூட்டு செயல்பாடு ஆகும்.

உலகம் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ள, விநியோகச் சங்கிலிகள் அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிற, தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வருகிற, அதே நேரத்தில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகிய இரண்டுமே சவாலுக்கு உள்ளாகியிருக்கிற இந்தச் சூழலில், இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்து ஸ்திரத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் பகிரப்பட்ட நல்வாழ்விற்கான வலுவான தூண்களாக உருவெடுக்க முடியும்.

இந்த உன்னத உணர்வுடன், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்காளிகளாக இணையுமாறு உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன். கோதன்பர்க் நகரில் இன்று தொடங்கும் இந்த உரையாடல், வரும் ஆண்டுகளில் இந்தியா மற்றும் ஐரோப்பா இடையேயான தொழில்துறை கூட்டு செயல்பாடுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்த உச்சிமாநாட்டில் இவ்வளவு பெருந்திரளாகப் பங்கேற்றதற்கும், எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் ஒவ்வொருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

மிக்க நன்றி.

----

(Release ID: 2262098)

AD/VK/KR

 


(रिलीज़ आईडी: 2279811) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , हिन्दी , Urdu , Marathi , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam