பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் சூரத் நகரில் ரூ. 18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 05 JUN 2026 8:25PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் சூரத் நகரில் 18,800 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். சாலை, மின்சாரம், தொழிற்துறை சார்ந்த இந்த திட்டங்கள் அந்தப் பிராந்திய வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாகச் சூரத்திற்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், மக்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். இந்த மாபெரும் வெற்றி தங்களுக்குக் கிடைத்துள்ள ‘மக்கள் ஆணை’ எனவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் மேலும் அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். ‘வளர்ச்சியடைந்த குஜராத், வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை எட்ட ஒவ்வொரு கிராமமும், நகரமும் முன்னேற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, நாட்டின் மிகத் தூய்மையான நகரங்களில் ஒன்றான சூரத்தில் இருப்பது பெருமையளிப்பதாகப் பிரதமர் கூறினார். ஒரு காலத்தில் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சூரத் நகரைத் தற்போது தூய்மையான நகரமாக மாற்றிய மக்கள், அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்களின் கடந்த கால் நூற்றாண்டு கால உழைப்பை பிரதமர் பாராட்டினார். இயற்கை வளங்களைச் அழிக்காமல் முன்னேற்றப் பாதையில் செல்வதே இந்தியாவின் கொள்கை என்றும், கடந்த 12 ஆண்டுகளாகத் தேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவிலிருந்து செல்வம் உருவாக்கும் மக்கள் இயக்கம் நகர்ப்புறத் தூய்மைக்கு முக்கியப் பங்காற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் நாடு நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் ஐந்தில் ஒரு பங்கை குஜராத் கொண்டுள்ளதுடன் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் முகவரியாகவும் திகழ்கிறது. நவீனப் போக்குவரத்து, மின்சார வாகனங்கள், பழங்குடியினப் பகுதிகளுக்கான சாலை இணைப்புகள் ஆகியவை பொருளாதார வளர்ச்சியை உள்ளடக்கியதாக மாற்றி வருகின்றன. மக்களின் கடும் உழைப்பும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் இருக்கும்போது எட்ட முடியாத இலக்கு என்று எதுவுமில்லை என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

(Release ID: 2269528)

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269528&reg=3&lang=2

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2269632) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati