பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை - மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 4:15PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை வழங்கல்' என்ற தலைப்பில் ஒரு பிராந்தியப் பயிலரங்கை இன்று (29.05.2026) குவஹாத்தியில் ஏற்பாடு செய்து நடத்தியது. இந்தப் பயிலரங்கானது, பொது சேவை மைய சிறப்புத் திட்டம், அசாம் அரசின் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பயிலரங்கில், அசாம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கிராம அளவிலான தொழில்முனைவோர் மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தப் பயிலரங்கிற்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு எஸ் பி சிங் பாகேல், தேசிய வளம் என்பது கிராமப்புற வாழ்வாதாரங்கள் மூலமாகவே அமைகிறது என்றும், தனிநபர்களுக்கு உண்மையான அதிகாரமளித்தலே தன்னிறைவு பெற்ற தேசத்தின் அடித்தளம் என்றும் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பொது சேவை மையங்கள், பெருமளவிலான கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மையங்கள் கோடிக்கணக்கான மக்களுக்கு ஓய்வூதியங்கள், சான்றிதழ்கள், காப்பீட்டுத் திட்டங்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பெறவும் வழிவகுத்துள்ளன என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆதார், வங்கி, நிலப் பதிவேடுகள் ஆகியவற்றில் உள்ள தரவுகளின் துல்லியத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
பொது சேவை மையங்கள், கிராம பஞ்சாயத்துகளுடன் திறம்பட ஒருங்கிணைக்கப்படும்போது, அவை ஒவ்வொரு நபரின் வீடுகளுக்கும் அரசின் சேவைகளை வழங்கும் சக்திவாய்ந்த மையங்களாக மாறுகின்றன என்று அவர் தெரிவித்தார். டிஜிட்டல் தளங்களுக்கும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார். இதன்மூலம், தகுதியுள்ள ஒவ்வொரு நபரும் உரிய நேரத்தில் பலன்களைப் பெறுவதோடு, 'சேவையின் மூலம் செழிப்பு' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266611®=3&lang=1
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266789)
வருகையாளர் எண்ணிக்கை : 14