தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2026 3:42PM by PIB Chennai

சாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல்கள் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான கால அட்டவணையை, தேர்தல் ஆணையம் 2026 மார்ச் 15 அன்று அறிவித்தது. இக்கால அட்டவணையின்படி, சாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அறிவிக்கைகள் 2026 மார்ச் 16 அன்று வெளியிடப்பட்டன.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 60(c)-ன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் எனப் பதிவு செய்யப்பட்டவர்களும் தபால் வாக்குச்சீட்டு மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தகைய வாக்காளர்கள், 'படிவம் 12 டி'-ஐப் பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள், தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாயிலாகத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து, இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் வாக்குகள் சேகரிக்கப்படும்.

வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அத்தியாவசியச் சேவைப் பணிகளில் ஈடுபடும் வாக்காளர்கள், தங்கள் துறை சார்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர் வாயிலாக தபால் வாக்குச்சீட்டு வசதியைப் பெற விண்ணப்பிக்கலாம். தீயணைப்புத் துறை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமானப் போக்குவரத்து, நீண்ட தூர அரசுப் போக்குவரத்துக் கழகச் சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளன்று செய்திகளைச் சேகரிக்கத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும், அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடக் கூடிய பணியாளர்களும் நேரடியாக வாக்களிக்க இயலாத வாக்காளர்கள் எனும் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கும் தபால் வாக்குச்சீட்டு வசதி வழங்கப்படுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் தனது அஞ்சல் வாக்குச்சீட்டைப் பெற்று, அதில் தங்களது வாக்கைப் பதிவு செய்து, அதனைப் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மையத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அந்த மையத்தில் அவர்கள் தங்களது வாக்கை முழுமையான ரகசியத்தன்மையுடன் பதிவு செய்வதை உறுதிசெய்யும் வகையில், தேர்தல் ஆணையம் இது தொடர்பான வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட உடனேயே, மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குச்சீட்டு முறை வாயிலாக, தேர்தல் நடத்தும் அலுவலரால், சேவை வாக்காளர்களுக்கு அவர்களின் தபால் வாக்குச்சீட்டுகள் மின்னணு வடிவில் அனுப்பி வைக்கப்படும். இத்தகைய வாக்காளர்கள் அஞ்சல் சேவைகளுக்கான கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

அஞ்சல் வாக்குச்சீட்டுகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2026 மே 4 அன்று காலை 8:00 மணிக்குள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை சென்றடைய வேண்டும்.

மேற்கூறிய விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விளக்கமளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

***

(Release ID: 2242483)

AD/PLM/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2242655) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Gujarati , हिन्दी , Bengali , Assamese , Malayalam