பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

புதுச்சேரியில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்-இன்று, வாழ்க்கையை எளிமைப்படுத்தவும், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் பல மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படுகின்றன: பிரதமர்

நான் முன்பு இங்கு வந்தபோது, சிறந்த புதுச்சேரி என்ற மந்திரத்தை கூறியிருந்தேன் - கடந்த நான்கரை ஆண்டுகளில் அந்த தொலைநோக்குப் பார்வை நனவாகியுள்ளது: பிரதமர்

புதுச்சேரி நல்லாட்சி மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது: பிரதமர்

வலுவான மற்றும் அதிகாரம் பெற்ற இளைஞர்களே நமது வளர்ச்சியின் அடித்தளம் - அவர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் பாடுபடுகிறோம்: பிரதமர்

காரைக்காலில் உள்ள என்ஐடி-யில், புதிய, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொறியியல் வளாகம் மற்றும் நவீன விடுதி வசதிகள் பல மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை வலுப்படுத்தும்; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: பிரதமர்

சுகாதாரப் பராமரிப்பு அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், குறைந்த செலவிலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்; ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏற்கெனவே இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றி வருகிறது: பிரதமர்

புதுச்சேரி ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். புதுச்சேரியில் ஏற்கனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ளன; ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல் சுகாதாரத் திறனை மேலும் விரிவுபடுத்தும்: பிரதமர்

மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு, பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 2:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.03.2026) புதுச்சேரியில் 2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் திட்டங்கள் அடங்கியுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதுச்சேரி சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பூமி எனவும், இங்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தேசியவாதத்தின் தீயை மூட்டினார் எனவும், ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் உலகிற்கு ஆன்மீகப் பார்வையை வழங்கினர் என்றும் குறிப்பிட்டார்.

வணிகம், கல்வி, ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 'சிறந்த' புதுச்சேரிக்கான தமது மந்திரத்தை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்தார். "கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த தொலைநோக்குப் பார்வை நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது எனவும் தனிநபர் வருமானம் அதிகரிப்பதாலும், நாட்டின் மிக உயர்ந்த சமூக முன்னேற்றக் குறியீட்டு மதிப்பெண்ணாலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

நாடு முழுவதும் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை எடுத்துரைத்த பிரதமர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். "முன்னர் மாநிலங்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்ட 'மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி இப்போது சேர்க்கப்பட்டுள்ளது எனவும் இது சாலைகள், நீர் வழங்கல், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதை உறுதி செய்யும்" என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

வலிமையான மற்றும் அதிகாரம் பெற்ற இளைஞர்கள் நமது வளர்ச்சியின் அடித்தளம்" என்று பிரதமர் கூறினார். அவர்களின் கனவுகளை ஆதரிக்க நாங்கள் பாடுபடுகிறோம் என்றும் காரைக்காலில் புதிதாக திறக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பொறியியல் வளாகம் மற்றும் நவீன விடுதி வசதிகள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன், தொழில்நுட்பக் கல்வியை கணிசமாக வலுப்படுத்தி ஏராளமான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

உலகம் தற்போது தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், மின்சார வாகனங்கள் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாக மாறி வருவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். புதுச்சேரி போன்ற சுற்றுலாதல பகுதியில், பிரதமர் மின்சார பேருந்து சேவையின் கீழ் இன்று வழங்கப்படும் மின்சார பேருந்துகள் மாசுபாட்டைக் குறைப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, குடும்பங்களுக்கு ஸ்திரத்தன்மை மற்றும் கண்ணியத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட வீட்டு வசதித் திட்டங்களுடன், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் முழுவதும் பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். சுத்தமான குடிநீரை உறுதி செய்வதற்கான கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மழைக்காலங்களில் வெள்ளம் மற்றும் நீர் தேங்குவதைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான பணிகள் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும் என்று அவர் கூறினார். "புதுச்சேரி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு எங்கள் அனைத்து முயற்சிகளும் உள்ளன" என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நாடும் அதன் மனித மூலதனம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்றும், சுகாதாரப் பராமரிப்பை அரசின் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுகிறது என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். சுகாதாரப் பராமரிப்பு அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும், மலிவு விலையிலும் இருக்க வேண்டும் என்று அவர் வெளிப்படுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு வரும் இந்த தொலைநோக்குப் பார்வை இதுவாகும். புதுச்சேரியின் எந்தவொரு நபரும் சிகிச்சைக்காக வெகுதூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்திய அவர், ஏற்கனவே ஒன்பது மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட இந்தப் பகுதி மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். சுகாதாரத் திறனை மேலும் விரிவுபடுத்துவதற்காக, ஜிப்மரில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது எனவும், மேலும் அவசர சேவைகளை மேம்படுத்துவதற்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் மூன்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கூடுதலாக, காரைக்காலில் உள்ள புதிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவம் மற்றும் முழுமையான சுகாதாரப் பராமரிப்புக்கு இந்தப் பிராந்தியத்தில் சேவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார். "புதுச்சேரி ஒரு மருத்துவ சுற்றுலா மையமாக மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், போக்குவரத்து இணைப்புதான் முன்னேற்றத்தின் முதுகெலும்பு என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மாணவர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கான அணுகலை மேம்படுத்த நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் கட்டப்பட்டு வருவதாக அவர் எடுத்துரைத்தார். "ஒரே நேரத்தில், புதுச்சேரி நகர நெரிசலைக் குறைக்க 1,000 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யப்படுகிறது எனவும் இதில் 440 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலம் அடங்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். கிழக்கு கடற்கரை மற்றும் கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலைகள் வழியாக சென்னைக்கான இணைப்பும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் பயண நேரம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படுவதாகவும் அவர் மேலும் எடுத்துரைத்தார். "கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை வழித்தடத்தில் 30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், இந்தத் திட்டங்கள் புதுச்சேரியை பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய பொருளாதார மையங்களுடன் இணைக்கின்றன எனவும், இது சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறையை கணிசமாக மேம்படுத்துகிறது" என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

சுற்றுலாவை புதுச்சேரியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக பிரதமர் எடுத்துரைத்தார். இது ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகளை முதன்மையான வார இறுதி இடமாக ஈர்த்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிக்கு உள்ளூர் மக்களின் அரவணைப்பும் காரணம் என்றும், இப்பகுதிக்கான ரயில்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். ஆன்மீகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சுற்றுலாவில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். பிரசாத் திட்டத்தின் கீழ் பல்வேறு கோயில்களில் புனித யாத்திரை வசதிகளை மேம்படுத்துவது உட்பட, இந்தத் துறையை அரசு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது்என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் ஆரோவில்லை உலகளாவிய நகரமாகக் கருதினர் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். இன்று அங்கு ஒரு உலகளாவிய ஆன்மீக மஹோத்ஸவம் தொடங்குவதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இத்தகைய கூட்டங்கள் பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்க உதவுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக புதுச்சேரி இருந்து வருகிறது எனவும் இது பல சிறந்த தலைவர்களின் பிறப்பிடமாகவோ அல்லது பணியிடமாகவோ செயல்பட்டுள்ளது என்றும் பிரதமர் நினைவு கூர்ந்தார். 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இந்த நிலம் மிக முக்கியமானதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தை நோக்கி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த புதுச்சேரி மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இரட்டை இன்ஜின் அரசு இந்த இலக்கை அடைய உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். சிறந்த புதுச்சேரிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறிப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

(Release ID: 2234157)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234200) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam