பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

ஸ்பெயின் அதிபர்பெட்ரோ சாஞ்சஸின் இந்தியப் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 5:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சாஞ்செஸ், 2026 பிப்ரவரி 18–19 தேதிகளில் நடைபெறும் ஏஐ தாக்கம் உச்சிமாநாடு 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய இந்தியாவிற்கான இரண்டாவது அதிகாரப்பூர்வ பயணமாகும்.  இதற்கு முன் அவர் 2024 அக்டோபர் 27–29 தேதிகளில் இருதரப்பு பயணம்  மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணத்தின் போது, டிஜிட்டல் மாற்றம் மற்றும் குடிமைப் பணித்துறை அமைச்சரான திரு. ஆஸ்கர் லோபெஸ் அகுடா மற்றும் வேளாண்மை, மீன்வளம் மற்றும் உணவு துறை அமைச்சரான திரு. லூயிஸ் புகாடஸ்  ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர்.

பிரதமர் மோடியும், தலைவர் சாஞ்செஸும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், அடிக்கட்டு வசதிகள், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, விண்வெளி, கலாசாரம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில்  இந்தியா–ஸ்பெயின் உறவுகளின் முழு பரப்பையும் மீளாய்வு செய்தனர். இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை அவர்கள் வரவேற்றதுடன், 2024 அக்டோபரில் அவர்களால் இணைந்து திறந்து வைக்கப்பட்ட வதோதரா நிலையத்தில் நடைபெறும் சி-295 போக்குவரத்து விமானங்களுக்கான டாடா –ஏர்பஸ்  இறுதி அமைப்பு வரிசை  திட்டத்தின் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். இணை மேம்பாடு மற்றும் இணை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பே எதிர்கால முன்னேற்றப் பாதை என அவர்கள் வலியுறுத்தினர்.

இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இவ்வாண்டு கொண்டாடப்படும் “இந்தியா–ஸ்பெயின் இரட்டை ஆண்டு: கலாசாரம், சுற்றுலா மற்றும் செயற்கை நுண்ணறிவு” கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இது தொழில்நுட்பம், புதுமை, வணிகம் மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டின் முக்கியத்துவத்தை தலைவர் சாஞ்செஸ் எடுத்துக்காட்டி, அதன் முடிவுகள் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுமைத்திட்டங்களை வடிவமைப்பதில் அர்த்தமுள்ளதாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருப்பதை இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டு, அதன் முழுத் திறனை உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் பயன்படுத்த இந்தியா–ஸ்பெயின் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினர்.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை முன்னிட்டு கல்வித் துறையில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இதன் ஒரு பகுதியாக, 2026 பிப்ரவரி 19–20 தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும் இந்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் ஸ்பெயின் பல்கலைக்கழக ரெக்டர்கள் மாநாட்டை அவர்கள் வரவேற்றனர். இருநாடுகளுக்கிடையிலான சுற்றுலா பரிமாற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொருளாதாரச் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதோடு மக்கள்-மக்கள் உறவுகளையும் வலுப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டனர். STEM மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி ஸ்பெயின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் தங்களது வளாகங்களைத் தொடங்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பரஸ்பர அக்கறைக்குரிய பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியப் பெருங்கடல்–பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் ஸ்பெயின் இணையும் தீர்மானத்தை அவர்கள் வரவேற்றனர். இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தது ஒரு முக்கிய மைல்கல்லாகும்; இது இந்தியா–ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு திறன்களை முழுமையாக வெளிக்கொணரும் என அவர்கள் பாராட்டினர். அனைத்து வகையான மற்றும் வடிவங்களிலான பயங்கரவாதத்தையும் அவர்கள் கடுமையாக கண்டித்து, அதை எதிர்கொள்ள வலுவான சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினர்.

“இரட்டை ஆண்டு” கொண்டாட்டத்தின் மூலம் மேலும் வலுப்பெறும் இருதரப்பு உறவுகள், இந்தியா–ஸ்பெயின் கூட்டாண்மைக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229905) வருகையாளர் எண்ணிக்கை : 10