உள்துறை அமைச்சகம்
திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பயங்கரவாத நிதி விநியோகத்தைத் தடுக்க இந்தியா நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 4:15PM by PIB Chennai
பயங்கரவாத நிதி விநியோகத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், மத்திய ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் புது தில்லியில் நடத்தப்பட்டது. "கிரிப்டோகரன்சி, கிரவுட் ஃபண்டிங் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்கள் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதைத் தடுத்தல்" என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சி குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. திரு. நித்யானந்த் ராய் இன்று மக்களவையில் விளக்கமளித்தார்.
மத்திய வருவாய்த் துறை, வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை ஒருங்கிணைத்தன. இதில் இணைய வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிதல், தீவிரவாத நடவடிக்கைகளுக்காக சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டுவதைத் தடுத்தல் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்களை கண்காணிப்பதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்தியப் புலனாய்வு அமைப்புகளான நிதிப் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவற்றின் நிபுணர்கள் இதில் கலந்துகொண்டு நேரடிப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
டிஜிட்டல் வழியிலான புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிம்ஸ்டெக் நாடுகளுக்கும் இதுபோன்ற கருப்பொருள் சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
****
TV/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222823)
வருகையாளர் எண்ணிக்கை : 14