கலாசாரத்துறை அமைச்சகம்
140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்த ஒரு தலைவரின் வாழ்க்கையை ‘நமோத்சவம்’ நிகழ்ச்சி சித்தரிக்கிறது திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
29 DEC 2025 3:18PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு புகழ் சேர்க்கும் விதமாக, மெய்சிலிர்க்கச் செய்யும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியான “நமோத்சவம்” அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்க்கை, தலைமைத்துவப் பண்பு, தொலைநோக்குப் பார்வையைச் சித்தரிக்கும் வகையில், நமோத்சவ் என்ற பிரமாண்டமான இசை நிகழ்ச்சி, நாட்டின் பெருமை, கலாச்சாரம் மற்றும் உத்வேகம் நிறைந்த மறக்க முடியாத மாலைப் பொழுது வேளையில் நேற்று அகமதாபாத் நகரில் அரங்கேறியது. சன்ஸ்கார்தாம் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மூன்று நாள் கலாச்சார நிகழ்ச்சியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இது கலை, இசை, தொழில்நுட்பம் மற்றும் கதைசொல்லல் போன்ற பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து, சேவை, உறுதிப்பாடு மற்றும் நாட்டைக் கட்டமைப்பதில் வேரூன்றியுள்ள அசாதாரணமான பயணத்தை விவரித்தது.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா ‘நமோத்சவம்’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, “நமோத்சவம் என்பது ஒரு தலைவரின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. அவர் கடந்த 11 ஆண்டுகளாக, 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்து,140 கோடி இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். ஒரு நபர் தனது முழு வாழ்க்கையையும் ஒரு குறிப்பிட்ட தேசிய நோக்கத்திற்காக அர்ப்பணித்து, அதனை அடைவதற்காகத் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, பின்னர் அதே கனவைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பெரிய குழுவை நாடு முழுவதும் உருவாக்கினால் மட்டுமே இது சாத்தியமாகும்,” என்று கூறினார்.
நமோத்சவம் என்பது ஒரு பிரம்மாண்டமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இசை நிகழ்ச்சியாகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் தரும் வாழ்க்கை முறை குறித்தும், குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகரில் அவரது எளிமையான வாழ்க்கைப் பயணம், குஜராத் மாநில முதலமைச்சராகவும் பின்னர் நாட்டின் பிரதமராகவும் அவர் ஆற்றிய பணிகள், தலைமைத்துவம் வரை கலைநயத்துடன் சித்தரிக்கிறது என்று கூறினார். நேரலை நிகழ்ச்சிகள், இசை, நடனம், கதைசொல்லல் மற்றும் அதிநவீன பல்லூடகக் காட்சிகள் ஆகியவற்றின் தடையற்ற கலவையின் மூலம், இந்த நிகழ்ச்சி அவரது தனிப்பட்ட பயணத்தையும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையையும் வடிவமைத்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்துக்காட்டியது.
இந்த நிகழ்வில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள், கலாச்சாரப் பயிற்சியாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2209426®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2209521)
आगंतुक पटल : 9