வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பெருந்திட்டம்: மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2025 10:18AM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களில் நெடுஞ்சாலைகள், ரயில்வே, நீர்வழிகள், விமானப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் தொடர்புகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் உள்ள இடைவெளிகள் குறித்து விவாதிக்க உயர்நிலைப் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் வகையில் விரிவான பெருந்திட்டம் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. எட்டு வடகிழக்கு மாநிலங்கள், மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டம் உருவாக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான கூட்டு நடைமுறையை இது உறுதி செய்யும்.
மேலும், மாநில அளவிலான குறிப்பிட்ட தடைகள் மற்றும் சவால்களை அடையாளம் காண்பது, போக்குவரத்துக்கான இணைப்பை ஏற்படுத்துவத்தில் காணப்படும் முக்கிய இடைவெளிகள், தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கபட வேண்டிய திட்டங்கள், மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் மூலதன உருவாக்கத்திற்கான தேசிய முதலீடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் 2047 - ம் ஆண்டில் வளர்ச்சிக்கான இந்தியாவின் இலக்குகளை எட்டும் வகையில், வடகிழக்கு மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அசாம் மாநில முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில், மத்திய வடகிழக்கு மாநில மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, அருணாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு பெமா காண்டு, மிசோரம் மாநில பொது சுகாதார பொறியியல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேராசிரியர் லால்நிலவ்மா, சிக்கிம் மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு ஷெரிங் தெண்டுப் பூட்டியா மற்றும் மத்திய அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153996
***
(Release ID: 2153996)
VL/SV/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2154080)
வருகையாளர் எண்ணிக்கை : 23