பிரதமர் அலுவலகம்
பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை
Posted On:
07 JUL 2025 9:53AM by PIB Chennai
உயர்மதிப்பாளர்களே,
மேன்மை தங்கியவர்களே,
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.
நண்பர்களே,
பிரிக்ஸ் அமைப்பின் பலதரப்புவாதத்தின் மீதான நம்பிக்கை இந்த அமைப்பிற்கு மிகப்பெரிய வலிமையை அளிக்கிறது. இன்று, உலக நாடுகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. மேலும் உலக அளவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றச் சூழலை திறம்பட எதிர்கொள்வதன் மூலம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வரும் காலங்களில் பிரிக்ஸ் அமைப்பு பல்வேறு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக உருவாகும் வகையில் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது தொடர்பான சில பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்:
முதலாவதாக, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கீழ், பொருளாதார ஒத்துழைப்பு சீராக வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த அமைப்பின் வர்த்தக குழு மற்றும் பெண்கள் வர்த்தக கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரேசிலின் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின், சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்கிறது.
பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் மூலம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆதரிக்க ஒரு வலுவான மற்றும் நம்பகமான மாற்று நிலையை இந்தியா வழங்கியுள்ளது. திட்டங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், புதிய வளர்ச்சி வங்கியின் தேவை சார்ந்த அணுகுமுறைகள், நீண்டகால நிதிசார் நிலைத்தன்மை, கடன் மதிப்பீடு ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பன்முகத்தன்மை மீதான நம்பிக்கை மேம்படும்.
இரண்டாவதாக, இன்று உலக அளவில் உள்ள வளரும் நாடுகள் பிரிக்ஸ் அமைப்பிடமிருந்து சில எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் வகையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பிரிக்ஸ் வேளாண் ஆராய்ச்சித் தளம், விவசாயத்தில் ஆராய்ச்சிப் பணிகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். வேளாண் - உயிரியல் தொழில்நுட்பம், துல்லியமான விவசாய நடைமுறைகள், பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் உலக அளவில் வேளாண் பணிகளில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாக உருவெடுக்கச் செய்ய முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு இதன் நன்மைகளை விரிவுபடுத்த முடியும்.
இதேபோல், கல்வி இதழ்களுக்கான நாடு தழுவிய அணுகுமுறையை உறுதி செய்வதற்காக இந்தியா 'ஒரே நாடு, ஒரே சந்தா' என்ற முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதர பிரிக்ஸ் நாடுகளிலும் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக அளவில் தென்பகுதியில் உள்ள நாடுகளில் இத்தகைய முயற்சிகள் மதிப்பு வாய்ந்த நடவடிக்கையாக செயல்படும். பிரிக்ஸ் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி களஞ்சியத்தை உருவாக்குவது குறித்து உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன்.
மூன்றாவதாக, அரியவகை கனிமங்கள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்தவொரு நாடும் இத்தகைய வளங்களை அதன் சுயநலத்திற்காகவோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகவோ பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
நான்காவதாக, 21-ம் நூற்றாண்டில், மக்களின் முன்னேற்றம் மற்றும் நலவாழ்வு ஆகியவை பெரும்பாலும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளன. குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருபுறம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அன்றாட வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்த முடியும். மறுபுறம், இது தொடர்பான அபாயங்கள், நெறிமுறைகள், சார்பு நிலை தொடர்பான கவலைகளும் எழுந்துள்ளன. இந்தியாவின் அணுகுமுறை மற்றும் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. மனித குலத்தின் மாண்புகள் ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்தியா கருதுகிறது. "அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்" என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், இன்று இந்தியாவில் விவசாயம், சுகாதாரம், கல்வி, நிர்வாகம் போன்ற பல்வேறு துறைகளில் அதன் பயன்பாடு விரிவடைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய நிர்வாக கட்டமைப்புகள் சவால்களுக்கு தீர்வு காண்பதிலும், புதுமைகளை ஊக்குவிப்பதிலும் சம அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தும் வகையில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். டிஜிட்டல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கக்கூடிய அளவில் தரநிலைகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உள்ளமுக்கிய அம்சங்களை அடையாளம் காணவும் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கவும் தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் இது உதவிடும்.
இன்றைய அமர்வில் வெளியிடப்படும் "செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் நிர்வாகம் மற்றும் நடைமுறைகள் குறித்த உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் அறிக்கை" இதற்கான ஒரு நேர்மறையான செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே மேம்பட்ட ஒத்துழைப்புக்காக, அடுத்த ஆண்டு இந்தியாவில் "செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சிமாநாட்டை" நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
நண்பர்களே,
உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகள் இந்தியா மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அவற்றை நிறைவேற்ற, "முன்மாதிரி நாடாக செயல்படுவது என்ற கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் பொதுவான இலக்குகளை அடைய உறுப்பு நாடுகள் அனைத்துடனும் இணைந்து செயல்பட இந்தியா உறுதியுடன் உள்ளது.
மிக்க நன்றி.
****
(Release ID: 2142789)
AD/TS/SV/KPG/KR/DL
(Release ID: 2142954)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam