உள்துறை அமைச்சகம்
புதிய குற்றவியல் சட்டங்களின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடைபெற்ற “நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்” நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
01 JUL 2025 8:00PM by PIB Chennai
புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற "நீதி அமைப்பில் நம்பிக்கையின் பொற்காலம்" நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வி.கே. சக்சேனா, முதல்வர் திருமதி. ரேகா குப்தா, மத்திய உள்துறை செயலாளர் மற்றும் புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மலிவானதாக, எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும், நீதித்துறை செயல்முறையை எளிமையாகவும், நிலையானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் என்றும் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தின் பொற்காலம் தொடங்க உள்ளது என்றும் அவர் கூறினார். வரும் நாட்களில், நமது குற்றவியல் நீதி அமைப்பு ஒரு புதிய சகாப்தத்தில் நுழையும் என்றும், இது நீதி உடனடியாக வழங்கப்படும் என்ற வலுவான நம்பிக்கையை மக்களிடையே நிச்சயமாக ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் நீதி உடனடியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை புதிய சட்டங்கள் ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பொறுப்பு வகிக்கும் மூன்று முக்கிய தூண்களான காவல்துறை, வழக்குத் தொடர்தல் மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் மீது இந்த சட்டங்கள் கடுமையான காலக்கெடுவை விதிக்கின்றன என்று அவர் விளக்கினார். புதிய சட்டங்கள் 90 நாட்களுக்குள் விசாரணைகளை முடித்தல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தல், குற்றச்சாட்டுகளை உருவாக்குதல் மற்றும் தீர்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றுக்கான காலக்கெடுவைக் குறிப்பிடுகின்றன என்றும் திரு. ஷா மேலும் கூறினார்.
புதிய சட்டங்களில் பல தொழில்நுட்ப அடிப்படையிலான விதிகளும் அடங்கும் என்றும், அவை செயல்படுத்தப்பட்டவுடன், குற்றவாளிகள் சந்தேகத்தின் பலனைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க எந்த வாய்ப்பும் இருக்காது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். புதிய குற்றவியல் நீதி அமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, நம் நாட்டில் தண்டனை விகிதம் கணிசமாக மேம்படும் என்றும், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். மூன்று புதிய சட்டங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமது நீதி அமைப்பு உலகின் மிக நவீன நீதி அமைப்பாக மாறும் என்று திரு ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141356
***
AD/RB/DL
(Release ID: 2141395)