புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
புள்ளியியல் தினத்தை மத்திய புள்ளியியல் அமைச்சகம் கொண்டாடியது - மத்திய இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் பங்கேற்றார்
Posted On:
29 JUN 2025 7:03PM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் பொருளாதார திட்டமிடல் பிரிவில், மறைந்த பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, மத்திய அரசு அவரது பிறந்த நாளான ஜூன் 29 ஆம் தேதியை புள்ளியியல் தினமாக அறிவித்தது. தேசிய வளர்ச்சிக்கான கொள்கை வகுப்பில் புள்ளிவிவரங்களின் முக்கிய பங்கு குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளை கொண்டாடுவதன் முதன்மை நோக்கமாகும்.
19-வது புள்ளியியல் தினத்திற்கான கொண்டாட்டம் இன்று (29.06.2025) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்றது. 19வது புள்ளியியல் தினத்திற்கான கருப்பொருள் 'தேசிய மாதிரி ஆய்வுக் கணக்கெடுப்பின் 75 ஆண்டுகள்' என்பதாகும். இது நாட்டின் புள்ளிவிவர அமைப்பை வலுப்படுத்துவதில் தேசிய மாதிரி ஆய்வின் நீடித்த மரபு மற்றும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்வின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங், தமது உரையில், தரவு கண்காணிப்புக்கான தொழில்நுட்ப கருவிகள் மூலம் புள்ளியியல் அமைப்பின் மாற்றம் குறித்துப் பேசினார். புதுப்பிக்கப்பட்ட மாதிரி நுட்பங்கள், ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச தரங்களுடன் ஒத்திசைவு போன்ற சீர்திருத்தங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மாநில அரசுகளுடன் ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் உள்ளடக்கிய ஈடுபாட்டிற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். புள்ளியியல் வல்லுநர்கள் மற்றும் அமைச்சகத்தின் களப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
வரவேற்பு உரையை நிகழ்த்திய புள்ளியியல் அமைச்சக செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், புள்ளியியல் நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களை எடுத்துரைத்தார். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராஜீவ லக்ஷ்மன் கரண்டிகர் தமது உரையில், இந்திய புள்ளியியல் அமைப்பின் வரலாற்றையும், அதன் வளர்ச்சிக்கு டாக்டர் பி.சி. மஹாலனோபிஸின் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், புள்ளிவிவரத் துறையில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்ததற்காக ஐஐஎம் கொல்கத்தாவின் உதவிப் பேராசிரியர் டாக்டர் பிரஜாமித்ர பூயனுக்கு புள்ளியியல் துறையில் சிறந்த பணிகளுக்காக 2025-ம் ஆண்டிற்கான பேராசிரியர் சி.ஆர். ராவ் தேசிய விருது வழங்கப்பட்டது.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள், ஐநா நிறுவனங்கள் போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 700 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட்டது.
*****
(Release ID: 2140622)
AD/TS/PLM/RJ
(Release ID: 2140658)