பிரதமர் அலுவலகம்
48வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
சுரங்கங்கள், ரயில்வே மற்றும் நீர்வளத் துறைகளில் முக்கிய திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார்; காலக்கெடுவுடன் செயல்படுத்த அழைப்பு விடுத்தார்
சுகாதார சமத்துவத்தில் கவனம் செலுத்துதல்: தொலைதூர மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் சுகாதார உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துமாறு மாநிலங்களை பிரதமர் வலியுறுத்தினார்
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவின் உத்திசார் பங்கை பிரதமர் எடுத்துக்காட்டினார்; நாடு தழுவிய அளவில் சிறந்த நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தார்
Posted On:
25 JUN 2025 9:11PM by PIB Chennai
மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகளை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், செயல்மிகு நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்தலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பன்முக தளமான பிரகதியின் 48வது கூட்டம் சவுத் பிளாக்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தின் போது, சுரங்கங்கள், ரயில்வே மற்றும் நீர்வளத் துறைகளில் உள்ள சில முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார். பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டங்களின் காலக்கெடு, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஆய்வு செய்யப்பட்டன.
திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் நிதி செலவுகள் அதிகரிப்பதுடன், குடிமக்கள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை சரியான நேரத்தில் அணுகுவது தடைபடுகிறது என்பதை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க, முடிவு சார்ந்த அணுகுமுறையை பின்பற்றுமாறு மத்திய மற்றும் மாநில மட்டங்களில் உள்ள அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் ஆய்வின் போது, அனைத்து மாநிலங்களும் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என்றும், குறிப்பாக தொலைதூர, பழங்குடி மற்றும் எல்லைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஏழைகள், ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு தரமான சுகாதாரப் பராமரிப்புக்கான சமமான அணுகல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், இந்தப் பிராந்தியங்களில் முக்கியமான சுகாதார சேவைகளில் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்க உடனடி மற்றும் நிலையான முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்குவதற்காக, தொகுதி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் தங்கள் முதன்மை, மூன்றாம் நிலை மற்றும் சிறப்பு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமரின்-ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை வளர்ப்பதற்காக பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரியான நடைமுறைகளை பிரதமர் ஆய்வு செய்தார். இந்த முயற்சிகளின் உத்திசார் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு சூழல் முழுவதும் புதுமைகளை ஊக்குவிக்கும் திறன் ஆகியவற்றிற்காக அவர் பாராட்டினார். அவற்றின் பரந்த பொருத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், உள்நாட்டு திறன்களுடன் செயல்படுத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் வெற்றி, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முன்னேற்றகரமான தன்னம்பிக்கைக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும் என்று குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைவதில் பங்களிப்பை வழங்கவும் மாநிலங்கள் எவ்வாறு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
***
AD/RB/DL
(Release ID: 2139731)