உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற “அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டுகள்” நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித்ஷா உரையாற்றினார்
Posted On:
24 JUN 2025 9:42PM by PIB Chennai
அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டுகள் நிறைவையொட்டி புதுதில்லியில் ஷியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஜூலை 11 அன்று ஆண்டு தோறும் ஜூன் 25-ம் தேதியை 'அரசியலமைப்பு படுகொலை தினம்' என்று நினைவுகூர முடிவு செய்தபோது, 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் தற்போது என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி எழுந்ததாக கூறினார். ஒரு அரசு சர்வாதிகாரமாக மாறும்போது நாடு எத்தகைய பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை என்றும் நினைவு கொள்ளும் வகையில், திரு மோடி 'அரசியலமைப்பு படுகொலை தினம்' கொண்டாட முடிவு செய்ததாக திரு ஷா கூறினார். நாட்டில் நடைபெற்ற எந்தவொரு நல்லது அல்லது கெட்ட நிகழ்வின் 50 ஆண்டுகள் நிறைவடையும் போது, அதன் நினைவு சமூக வாழ்க்கையில் மறந்துவிடும் என்றும், ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கிய அவசரநிலை போன்ற ஒரு சம்பவம் குறித்து சமூகம் மறந்துவிடுமானால், அது எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் பெரிய ஆபத்து என்றும் அவர் கூறினார்.
உலக ஜனநாயகத்தின் தாயாக இந்தியா கருதப்படுகிறது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது அரசியலமைப்பின் ஆன்மா மட்டுமல்ல, மாறாக அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசியலமைப்பில் உள்ள வார்த்தைகளின் வடிவத்தில் மக்களின் உணர்வை விளக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இது நமது தேசிய தன்மை என்றும் அவர் கூறினார்.
அவசரநிலையின் போது வாழ்ந்த எந்தவொரு விவேகமான குடிமகனும் அதை விரும்பியிருக்க மாட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். யாராலும் தங்களை எதிர்க்க முடியாது என்ற மாயையில் இருந்தவர்கள், அவசரநிலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டனர் என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசு அமைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். அவசரநிலைக்குப் பிறகு 50 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தற்போதும்கூட கோடிக்கணக்கான இந்தியர்களின் மனங்களில் உள்ள அந்த காயம் அவசரநிலையின் போது இருந்ததைப் போலவே புதியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நமது ஜனநாயகத்தின் அடித்தளம் மிகவும் ஆழமானது என்று கூறிய திரு அமித் ஷா, எந்த ஒரு சர்வாதிகாரியும் இந்த அடித்தளத்தை அசைக்க முயன்றால், அவர் தனது எதிர்காலத்தை அழித்துவிடுவார் என்று தெரிவித்தார். அவசரநிலையை அமல்படுத்திய கொடூரமான செயலை கண்டித்து, எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான தீபத்தை இளைஞர்கள் ஏந்த வேண்டிய நாள் இன்றைய நாள் என்று கூறினார். ஷா குழுவின் அறிக்கையை நாட்டின் இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எதிர்காலத்தில் சர்வாதிகார எண்ணங்கள் யாருடைய மனதிலும் தோன்றினால், அது ஜெயப் பிரகாஷ் நாராயண் போன்ற ஒரு தலைவர் உருவாவதற்கான உற்சாகத்தை அளிக்கும், மேலும் அந்த அறிக்கை ஒரு ஒளிமயமான பாதையைக் காட்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார். இந்த உணர்வோடு விளையாடுபவர்களைத் தண்டிப்பது பொதுமக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2139391)
AD/TS/IR/AG/KR
(Release ID: 2139463)