பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீ நாராயண குருவுக்கும் காந்திஜிக்கும் இடையிலான உரையாடல் பற்றிய நூற்றாண்டு விழா கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 24 JUN 2025 1:25PM by PIB Chennai

பிரம்மரிஷி சுவாமி சச்சிதானந்தா அவர்களே, ஸ்ரீமத் ஸ்வாமி சுபங்கா-நந்தா அவர்களே சுவாமி சாரதானந்தா அவர்களே, அனைத்து மரியாதைக்குரிய துறவிகளே, மத்திய அரசில் எனது நண்பர் திரு ஜார்ஜ் குரியன் அவர்களே, பாராளுமன்றத்தில் எனது நண்பர் திரு அடூர் பிரகாஷ் அவர்களே, இதர மூத்த பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே.

 

இன்று இந்த வளாகம் நாட்டின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத நிகழ்வைக் காண்கிறது. நமது சுதந்திர இயக்கத்திற்கு ஒரு புதிய திசையை கொடுத்தது மட்டுமின்றி, சுதந்திரத்தின் குறிக்கோளுக்கும் சுதந்திர இந்தியாவின் கனவுக்கும் உறுதியான அர்த்தத்தையும் கொடுத்த வரலாற்று நிகழ்வு. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ நாராயண குரு மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் சந்திப்பு இன்றும் சமமாக ஊக்கமளிக்கிறது மற்றும் பொருத்தமானது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சந்திப்பு, இன்றும் சமூக நல்லிணக்கத்திற்கும், வளர்ந்த இந்தியாவின் கூட்டு இலக்குகளுக்கும் ஒரு சிறந்த சக்தியாக உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில், நான் ஸ்ரீ நாராயண குருவின் பாதங்களை வணங்குகிறேன். காந்திஜிக்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

 

சகோதர சகோதரிகளே,

ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகள், முழு மனிதகுலத்திற்கும் ஒரு பெரிய சொத்து. நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுபவர்களுக்கு ஸ்ரீ நாராயண குரு ஒரு கலங்கரை விளக்கம் போன்றவர். சமூகத்தின் சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருடன் எனக்கு என்ன மாதிரியான உறவு இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதனால்தான் இன்றும் கூட, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்காக நான் பெரிய முடிவுகளை எடுக்கும் போதெல்லாம், குருதேவை நிச்சயமாக நினைவில் கொள்கிறேன். 100 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக நிலைமைகள், பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனத்தால் ஏற்பட்ட சிதைவுகள், அந்தக் காலங்களில் அந்த தீமைகளுக்கு எதிராகப் பேச மக்கள் பயந்தார்கள். ஆனால் ஸ்ரீ நாராயண குரு எதிர்ப்பைப் பற்றி கவலைப்படவில்லை, சிரமங்களுக்கு பயப்படவில்லை, ஏனென்றால் அவர் நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் உண்மை, சேவை மற்றும் நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த உத்வேகம் 'அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்’ என்ற பாதையை நமக்குக் காட்டுகிறது. இந்த நம்பிக்கைதான், கடைசி நிலையில் நிற்பவர் நமது முதல் முன்னுரிமையாக இருக்கும் ஒரு இந்தியாவை உருவாக்க நமக்கு பலத்தை அளிக்கிறது.

 

நண்பர்களே,

சிவகிரி மடத்துடன் தொடர்புடைய மக்களுக்கும் துறவிகளுக்கும் ஸ்ரீ நாராயண குரு மற்றும் சிவகிரி மடத்தின் மீது எனக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பது தெரியும். எனக்கு மொழியைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் பூஜ்ய சச்சிதானந்த ஜி சொல்லிக்கொண்டிருந்த விஷயங்கள், அவர் பழைய விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்திருந்தார். மேலும் நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த எல்லா விஷயங்களிலும் அவருடன் இணைந்திருப்பதையும் நான் பார்த்தேன். மேலும் மடத்தின் மரியாதைக்குரிய துறவிகள் எப்போதும் எனக்கு தங்கள் பாசத்தைக் கொடுத்திருப்பது எனக்கு அதிர்ஷ்டம். 2013 ஆம் ஆண்டு, நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​கேதார்நாத்தில் இயற்கை பேரழிவு ஏற்பட்டபோது, ​​சிவகிரி மடத்தின் மரியாதைக்குரிய பல துறவிகள் அங்கு சிக்கிக்கொண்டனர், சில பக்தர்களும் சிக்கிக்கொண்டனர் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அங்கு சிக்கிய மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சிவகிரி மடம் இந்திய அரசைத் தொடர்பு கொள்ளவில்லை. பிரகாஷ் அவர்களே, கவலைப்பட வேண்டாம். நான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தேன், சிவகிரி மடம் எனக்கு உத்தரவிட்டது, இந்த ஊழியர் இந்த வேலையைச் செய்வார் என்று  நம்பியது. மேலும் கடவுளின் அருளால், அனைத்து துறவிகளையும் பக்தர்களையும் பாதுகாப்பாக அழைத்து வர முடிந்தது.

 

நண்பர்களே,

எப்படியிருந்தாலும், கடினமான காலங்களில், நமது முதல் கவனம் நம்முடையது என்று நாம் கருதும், நமக்கு உரிமை இருப்பதாக உணரும் விஷயங்களில் செல்கிறது. நீங்கள் என்னை உங்களுடையது என்று கருதுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சிவகிரி மடத்தின் துறவிகளுடனான இந்த நெருக்கத்தை விட எனக்கு ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் வேறு என்ன?

 

நண்பர்களே,

காசி வழியாக உங்கள் அனைவருடனும் எனக்கு உறவு உள்ளது. வர்க்கலா பல நூற்றாண்டுகளாக தெற்கின் காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசி வடக்கின் காசியாக இருந்தாலும் சரி, தெற்கின் காசியாக இருந்தாலும் சரி, எனக்கு ஒவ்வொரு காசியும் எனது காசி.

 

நண்பர்களே,

இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தை, அதன் முனிவர்கள் மற்றும் துறவிகளின் பாரம்பரியத்தை அறிந்து நெருக்கமாக வாழும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. நமது நாடு பிரச்சனைகளின் சுழலில் சிக்கிக் கொள்ளும் போதெல்லாம், நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு சிறந்த ஆளுமை பிறந்து சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டுவது இந்தியாவின் சிறப்பு. சிலர் சமூகத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்காக பாடுபடுகிறார்கள். சிலர் சமூகத் துறையில் சமூக சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். ஸ்ரீ நாராயண குரு அத்தகைய ஒரு சிறந்த துறவி. அவருடைய படைப்புகளான ‘நிவிருத்தி பஞ்சகம்’ மற்றும் ‘ஆத்மோபதேச சதகம்’ போன்றவை அத்வைதம் மற்றும் ஆன்மிகத்தின் எந்த ஒரு மாணவருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.

 

நண்பர்களே,

யோகா மற்றும் வேதாந்தம், சாதனா மற்றும் முக்தி ஆகியவை ஸ்ரீ நாராயண குருவின் முக்கிய பாடங்களாக இருந்தன. ஆனால் தீய பழக்கவழக்கங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சமூகத்தின் ஆன்மீக மேம்பாடு அதன் சமூக மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, ஆன்மீகத்தை சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக நலனுக்கான ஒரு ஊடகமாக அவர் மாற்றினார். மேலும் காந்திஜியும் ஸ்ரீ நாராயண குருவின் இத்தகைய முயற்சிகளிலிருந்து உத்வேகம் பெற்று, அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற்றார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் போன்ற அறிஞர்களும் ஸ்ரீ நாராயண குருவுடனான கலந்துரையாடல்களிலிருந்து பயனடைந்தனர்.

 

நண்பர்களே,

ஒருவர் ஸ்ரீ நாராயண குருவின் ஆத்மோபதேச சதகத்தை  ரமண மகரிஷிக்கு தெரிவித்திருக்கிறார் . அதைக் கேட்ட பிறகு, ரமண மகரிஷி “அவருக்கு எல்லாம் தெரியும்!”, என்று கூறினார். மேலும் வெளிநாட்டுக் கருத்துக்களின் செல்வாக்கின் கீழ் இந்திய நாகரிகம், கலாச்சாரம் மற்றும் தத்துவத்தை இழிவுபடுத்த சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட நேரத்தில், தவறு நமது அசல் மரபில் இல்லை என்பதை ஸ்ரீ நாராயண குரு நமக்கு உணர்த்தினார். நாம் நமது ஆன்மீகத்தை உண்மையான அர்த்தத்தில் உள்வாங்க வேண்டும். மனிதர்களில் ஸ்ரீநாராயணரையும், உயிரினங்களில் சிவனையும் காணும் மக்கள் நாம். இருமையில் இருமையின்மையைக் காண்கிறோம். வேற்றுமையில் கூட வேறுபாடு இல்லாததைக் காண்கிறோம். வேற்றுமையில் கூட ஒற்றுமையைக் காண்கிறோம்.

 

நண்பர்களே,

ஸ்ரீ நாராயண குருவின் மந்திரம் , “ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம், மனுஷ்யனு।” என்பது  உங்கள் அனைவருக்கும் தெரியும். அதாவது, முழு மனிதகுலத்தின் ஒற்றுமை, அனைத்து உயிரினங்களின் ஒற்றுமை! இந்தக் கருத்துதான் இந்தியாவின் வாழ்க்கை கலாச்சாரத்தின், அதன் அடித்தளத்தின் வேர். இன்று இந்தியா அந்தக் கருத்தை உலகளாவிய நலனுக்கான உணர்வோடு விரிவுபடுத்துகிறது. சமீபத்தில்தான் நாம்  சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினோம். இந்த முறை யோகா தினத்தின் கருப்பொருள் - ஒரு பூமி, ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா. இதற்கு முன்பே, இந்தியா ஒரு உலகம், உலக நலனுக்கான ஒரு ஆரோக்கியம் போன்ற முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இன்று, நிலையான வளர்ச்சியின் திசையில் ஒரு சூரியன், ஒரு பூமி, ஒரு தொகுப்பு போன்ற உலகளாவிய இயக்கங்களையும் இந்தியா வழிநடத்துகிறது. 2023 இல் இந்தியா ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தியபோது, ​​அதன் கருப்பொருளை "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்று வைத்திருந்தோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 'வசுதைவ குடும்பகம்' என்ற உணர்வு நமது இந்த முயற்சிகளுடன் தொடர்புடையது. ஸ்ரீ நாராயண குரு போன்ற துறவிகளின் உத்வேகம் இதனுடன் தொடர்புடையது.

 

நண்பர்களே,

ஸ்ரீ நாராயண் குரு பாகுபாடு இல்லாத ஒரு சமூகத்தைக் கனவு கண்டார்! இன்று நாடு ஒரு நிறைவுற்ற அணுகுமுறையைப் பின்பற்றி, பாகுபாட்டிற்கான அனைத்து வாய்ப்புகளையும் நீக்குகிறது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். ஆனால் 10-11 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலையை நினைவில் கொள்ளுங்கள், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும் கோடிக்கணக்கான நாட்டு மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது? கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு தலைக்கு மேல் கூரை கூட இல்லை! லட்சக்கணக்கான கிராமங்களில் சுத்தமான குடிநீர் இல்லை, சிறிய நோய்களுக்கு கூட சிகிச்சை பெற வழி இல்லை, ஒரு கடுமையான நோய் ஏற்பட்டால், உயிரைக் காப்பாற்ற வழி இல்லை, கோடிக்கணக்கான ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் அடிப்படை மனித கண்ணியத்தை இழந்தனர்! மேலும், இந்த கோடிக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக இவ்வளவு சிரமங்களில் வாழ்ந்து வருகின்றனர், சிறந்த வாழ்க்கைக்கான நம்பிக்கை கூட அவர்களின் மனதில் இறந்து விட்டது. நாட்டின் இவ்வளவு பெரிய மக்கள் இவ்வளவு வேதனையிலும் விரக்தியிலும் இருக்கும்போது நாடு எப்படி முன்னேற முடியும்? எனவே, முதலில் அரசின் சிந்தனையில் உணர்திறனை விதைத்தோம்! சேவையை நமது தீர்மானமாக மாற்றினோம்! இதன் விளைவாக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏழைகள், தலித்துகள், துன்பத்தால் சுரண்டப்பட்ட, வறுமையில் வாடும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகளை வழங்க முடிந்தது. ஒவ்வொரு ஏழைக்கும் அவரவர் நிரந்தர வீட்டை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்த வீடு வெறும் செங்கல் மற்றும் சிமெண்டால் ஆன ஒரு அமைப்பு மட்டுமல்ல, இது ஒரு வீட்டின் கருத்தை உள்ளடக்கியது மற்றும் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்டுள்ளது. நாங்கள் நான்கு சுவர்களைக் கொண்ட ஒரு கட்டிடத்தை வழங்கவில்லை; கனவுகளை தீர்மானங்களாக மாற்றும் ஒரு வீட்டை நாங்கள் வழங்குகிறோம். அதனால்தான் , பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகளில் எரிவாயு, மின்சாரம், கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளும் உறுதி செய்யப்படுகின்றன. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. அரசு ஒருபோதும் சென்றடையாத பழங்குடிப் பகுதிகளில், இன்று வளர்ச்சிக்கான உத்தரவாதம் சென்றடைகிறது. பழங்குடியினர் மத்தியில், குறிப்பாக மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் மத்தியில், அவர்களுக்காக பிரதமரின் ஜன்மன் திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இதன் காரணமாக, இன்று பல பகுதிகளின் பிம்பம் மாறி வருகிறது. இதன் விளைவாக, சமூகத்தின் கடைசி நிலையில் நிற்கும் நபரிடமும் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. அவர் தனது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் தனது வலுவான பங்கைக் காண்கிறார்.

 

நண்பர்களே,

ஸ்ரீ நாராயண குரு எப்போதும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்தி வந்தார். நமது அரசும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற மந்திரத்துடன் முன்னேறி வருகிறது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நம் நாட்டில் பெண்கள் நுழைவது தடைசெய்யப்பட்ட பல பகுதிகள் இருந்தன. இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கினோம், புதிய துறைகளில் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்தன, இன்று விளையாட்டு முதல் விண்வெளி வரை ஒவ்வொரு துறையிலும் மகள்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள். இன்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு வகுப்பினரும் வளர்ந்த இந்தியாவின் கனவுக்கு நம்பிக்கையுடன் பங்களித்து வருகின்றனர். தூய்மை இந்தியா இயக்கம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சாரங்கள், அமிர்த நீர்நிலைகளின் கட்டுமானம், சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றில், பொதுமக்களின்  பங்கேற்பு உணர்வோடு நாம் முன்னேறி வருகிறோம், 140 கோடி நாட்டு மக்களின் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம்.

 

நண்பர்களே,

"கல்வி மூலம் ஞானம், அமைப்பின் மூலம் வலிமை, தொழில்துறை மூலம் செழிப்பு", என்று ஸ்ரீ நாராயண குரு கூறுவார். இந்த தொலைநோக்கை உணர முக்கியமான நிறுவனங்களுக்கு அவரே அடித்தளம் அமைத்தார். குருஜி சிவகிரியிலேயே சாரதா மடத்தை நிறுவினார். சரஸ்வதி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மடம், கல்வி என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கான ஊடகமாக இருக்கும் என்ற செய்தியை அளிக்கிறது. குருதேவின் அந்த முயற்சிகள் இன்றும் தொடர்ந்து விரிவடைந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குருதேவ் மையங்களும் ஸ்ரீ நாராயண் கலாச்சார மிஷனும் நாட்டின் பல நகரங்களில் மனிதகுலத்தின் நலனுக்காக பாடுபடுகின்றன.

 

நண்பர்களே,

இன்று நாட்டின் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் கல்வி, அமைப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் மூலம் சமூக நலன் என்ற தொலைநோக்குப் பார்வையின் தெளிவான முத்திரையை நாம் காணலாம். பல தசாப்தங்களுக்குப் பிறகு, நாட்டில் ஒரு புதிய தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். புதிய கல்விக் கொள்கை கல்வியை நவீனமாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், தாய்மொழியில் படிப்பதையும் ஊக்குவிக்கிறது. பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இதன் மூலம் மிகப்பெரிய பலனைப் பெறுகிறார்கள்.

 

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் பல புதிய ஐஐடிகள், ஐஐஎம்கள், எய்ம்ஸ்கள் திறக்கப்பட்டுள்ளன, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 60 ஆண்டுகளில் பல திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, உயர்கல்வியில் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், பழங்குடியினர் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட ஏகலைவ உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்ட பழங்குடி சமூகங்களின் குழந்தைகள் இப்போது முன்னேறி வருகின்றனர்.

 

சகோதர சகோதரிகளே,

கல்வியை திறன்கள் மற்றும் வாய்ப்புகளுடன் நேரடியாக இணைத்துள்ளோம். திறன் இந்தியா போன்ற திட்டங்கள் நாட்டின் இளைஞர்களை தன்னிறைவு பெறச் செய்கின்றன. நாட்டின் தொழில்துறை முன்னேற்றம், தனியார் துறையில் பெரிய சீர்திருத்தங்கள், முத்ரா திட்டம், ஸ்டாண்ட்அப் இந்தியா, முதலியவை அனைத்தும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு மிகவும் பயனளிக்கின்றன.

 

நண்பர்களே,

ஸ்ரீ நாராயண குரு ஒரு வலுவான இந்தியாவை விரும்பினார். இந்தியாவின் அதிகாரமளிப்புக்கு, பொருளாதாரம், சமூகம் மற்றும் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் நாம் முன்னணியில் இருக்க வேண்டும். இன்று நாடு இந்தப் பாதையில் நகர்கிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்தியா என்ன திறன் கொண்டது என்பதையும் உலகம் கண்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான கொள்கையை ஆபரேஷன் சிந்தூர் உலகிற்கு முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியர்களின் ரத்தத்தை சிந்தச் செய்யும் பயங்கரவாதிகளுக்கு எந்த இடமும் பாதுகாப்பானது அல்ல என்பதை நாங்கள் காட்டியுள்ளோம்.

 

நண்பர்களே,

இன்றைய இந்தியா, தேசிய நலனில் சாத்தியமான மற்றும் சரியானவற்றின் படி நடவடிக்கைகளை எடுக்கிறது. இன்று, ராணுவத் தேவைகளுக்காக இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. பாதுகாப்புத் துறையில் நாம் தன்னிறைவு பெற்று வருகிறோம். மேலும், சிந்தூர் நடவடிக்கையின் போதும் அதன் விளைவைக் கண்டோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு நமது படைகள் எதிரியை 22 நிமிடங்களில் சரணடையச் செய்தன. வரும் காலங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகம் முழுவதும் பிரபலமடையும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்ற, ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும். நமது அரசும் இந்த திசையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிவகிரி சுற்று உருவாக்குவதன் மூலம் ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையுடன் தொடர்புடைய புனித யாத்திரைத் தலங்களை இணைக்கிறோம். அமிர்த காலத்தை நோக்கிய நமது பயணத்தில் அவரது ஆசிகளும் போதனைகளும் தொடர்ந்து தேசத்தை வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவின் கனவை நாம் ஒன்றாக நிறைவேற்றுவோம். ஸ்ரீ நாராயண குருவின் ஆசி நம் அனைவரின் மீதும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், சிவகிரி மடத்தின் அனைத்து துறவிகளை மீண்டும் ஒருமுறை தலைவணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! வணக்கம்!

 

****

(Release ID: 2139151)

AD/RB/DL


(Release ID: 2139394)