உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, உத்தரப் பிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு லக்னோவில் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாடு முழுவதும் காவல் துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது - திரு அமித் ஷா

Posted On: 15 JUN 2025 5:16PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, இன்று (15.06.2025) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரபிரதேச காவல்துறையில் பணிக்குத் தேர்வான 60,244 சிவில் காவலர்களுக்கு (கான்ஸ்டபிள்கள்) பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உத்தரபிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா,  உத்தரப்பிரதேச காவல்துறை நாட்டில் மிகப்பெரிய காவல் படை என்றும், ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து இருந்ததாகவும் அவர் கூறினார். 2017-ம் ஆண்டில், திரு யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முதலமைச்சரான பிறகு, உத்தரப்பிரதேச காவல்துறை மீண்டும் புதிய உச்சங்களை அடைவதற்கான பாதையில் முன்னேறத் தொடங்கியது என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானவுடன், நாட்டில் காவல் துறையை நவீனமயமாக்கும் பணிகளை விரைவுபடுத்தியதாக அவர் கூறினார்.  ஆனால் உத்தரப்பிரதேசத்தில், அந்த செயல்முறை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொடங்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் எந்த சீர்திருத்த செயல்முறையும் அப்போதைய மாநில அரசால் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 2017-ல்தான் உத்தரப்பிரதேச காவல்துறையிலும் சீர்திருத்த செயல்முறை தொடங்கியது என்று அவர் கூறினார். தற்போது 60,244 இளைஞர்களின் ஆட்சேர்ப்பு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நியாயமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மொத்தம் 48 லட்சம் விண்ணப்பங்களில், 60,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்சம், அரசியல் செல்வாக்கு, பரிந்துரைகள், சாதி அல்லது ஊழல் ஆகியவை எதுவும் இல்லாமல் முற்றிலும் தகுதி அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களில் 12,000 க்கும் மேற்பட்டோர் இளம் பெண்கள் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தர். மத்திய அரசு பெண்களுக்கு விதித்துள்ள இடஒதுக்கீட்டு விதிகள் உத்தரபிரதேசத்தில் 100% பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

 4 லட்சம் பணியாளர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய காவல் துறையில் தற்போது 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்வதாக திரு அமித் ஷா கூறினார். 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கை மீதும் (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீதியை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் கலவரங்களின் மையமாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம், இப்போது முற்றிலும் கலவரமற்றதாக மாறிவிட்டது என்றும், இந்த பாரம்பரியத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 11 ஆண்டுக்கால ஆட்சியில், நாடு பாதுகாப்பானதாக மாறியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். ஒரு காலத்தில் 11 மாநிலங்களில் பரவியிருந்த நக்சலிசம், இப்போது மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2026 மார்ச் 31-க்குள், இந்தியா நக்சலிசத்திலிருந்து முற்றிலும் விடுபடும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார்.

****

(Release ID: 2136472)

AD/TS/PLM/RJ


(Release ID: 2136486)