உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ஏஐ 171 விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு செய்தியாளர் சந்திப்பு - விரிவான பல்நோக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு
Posted On:
14 JUN 2025 6:42PM by PIB Chennai
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் திரு முரளிதர் மொஹோல், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இன்று புதுதில்லியில் உள்ள உதான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார். ஏர் இந்தியா விமானம் ஏஐ 171-ன் துயர விபத்து குறித்தும், அரசின் உடனடி நடவடிக்கைகள், நடந்து வரும் விசாரணைகளின் நிலை, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்தும் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு விளக்கினார்.
உயிர் இழந்தவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது.
இதில் அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு பேசியது:
"ஜூன் 12, 2025 அன்று, அகமதாபாத் - லண்டன் இடையே இயக்கப்படும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் ஏஐ 171, புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தின் மக்கள் தொகை மிகுந்த மேகனி நகர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் பயணம் செய்தனர். இறந்தவர்களில் பயணிகள், இளம் மருத்துவ மாணவர்கள் அடங்குவர்.
உடனடியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்று பார்வையிட்டார். அங்கு காயமடைந்தவர்களுடன் கலந்துரையாடினார். மீட்பு, நிவாரண முயற்சிகளை ஆய்வு செய்தார். விமான நிலையத்தில் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.
சம்பவம் நடந்த உடனேயே உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சம்பவ இடத்திற்கு சென்று, கள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு மத்திய அமைப்புகள், நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
சம்பவம் நடந்த உடனேயே சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, இணையமைச்சர் திரு முரளிதர் மொஹோல் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும், அவசர சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவ ஊழியர்களையும் சந்தித்தனர்.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB- ஏஏஐபி), அதே நாளில் விபத்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியது. ஏஏஐபி-யின் தலைமை இயக்குநர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு உடனடியாக அனுப்பப்பட்டது.
ஜூன் 13 அன்று மாலை 5 மணியளவில் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதன் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. டிகோடிங் செயல்முறை விமானத்தின் இறுதி தருணங்கள் குறித்த முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்பரிமாண மறுஆய்வுக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணையை நடத்துவதற்காக மத்திய உள்துறைச் செயலாளரின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பின்வருவனவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளனர்:
* சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்
* உள்துறை அமைச்சகம்
* குஜராத் அரசு
* டிஜிசிஏ, பிசிஏஎஸ், இந்திய விமானப்படை, புலனாய்வுப் பணியகம்
* மாநில பேரிடர் மீட்பு ஆணையம்
* தேசிய, மாநில அளவிலான தடயவியல் நிபுணர்கள்
இந்தக் குழு ஜூன் 16 திங்கள்கிழமை தனது பணகளைத் தொடங்க உள்ளது.
சரிபார்க்கப்படாத தகவல்களைத் தவிர்க்குமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகம் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. விசாரணைகள் முன்னேறும்போது அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களும் சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் பகிரப்படும். உண்மையை வெளிக்கொணர்வதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது."
******
(Release ID: 2136378)
AD/PLM/SG
(Release ID: 2136399)