பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடி வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றினார்


இந்த பிரச்சாரத்தின் கீழ், நமது விஞ்ஞானிகள் குழு ஆய்வகத்திலிருந்து நிலத்திற்குச் சென்று, பருவம் தொடங்குவதற்கு முன்பு விவசாயிகளுக்கு உதவ அனைத்து தரவுகளுடன் நவீன விவசாயம் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்கும்: பிரதமர்

இந்த பிரச்சாரம் இந்திய விவசாயத்தை வளர்ந்த பாரதத்தின் முக்கிய தூணாக மாற்ற உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

இந்தியா தனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய உணவு வழங்குநராகவும் உருவாக வேண்டும்: பிரதமர்

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கம் விவசாயத்தில் நவீனமயமாக்கலை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும்: பிரதமர்

Posted On: 29 MAY 2025 7:45PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம்  வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது, விவசாயிகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்றும், வேளாண் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார். பருவமழை நெருங்கி, வருவதுடன் காரீஃப் பருவத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கும் வேளையில், ​​அடுத்த 12 முதல் 15 நாட்களில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் அடங்கிய 2000 குழுக்கள் 700க்கும் மேற்பட்ட  மாவட்டங்களுக்குப் பயணம் செய்து கிராமங்கள் முழுவதும் லட்சக் கணக்கான விவசாயிகளைச் சென்றடையும் என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவின் விவசாயத் துறையை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்தக் குழுக்களின் பங்கேற்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

விவசாயம் பாரம்பரியமாக ஒரு மாநிலம் சார்ந்த துறையாக இருந்து வருகிறது, ஒவ்வொரு மாநிலமும் விவசாயிகளின் நலனுக்கான கொள்கைகளை வகுத்து முன்முயற்சிகளை எடுக்கிறது என்பதை எடுத்துரைத்த திரு. மோடி, இருப்பினும் வேகமாக மாறிவரும் காலங்களுடன், இந்தியாவின் விவசாயத் துறைக்கும் குறிப்பிடத்தக்க மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தினார். இந்திய விவசாயிகள் சாதனை அளவிலான  உற்பத்தியை அடைந்துள்ளனர், தானிய இருப்புக்களை நிரப்புகிறார்கள், எனினும் சந்தை இயக்கவியல் மற்றும் நுகர்வோர் விருப்பத்தேர்வுகள் வளர்ந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். மாநிலங்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து விவசாய முறைகளில் நவீன சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். இந்தப் பிரச்சாரத்தின் கீழ், அறிவியல் குழுக்கள் ஆய்வகத்திலிருந்து நிலத்திற்கு மாறி, விவசாயிகளுக்கு விரிவான தரவுகளைக் கொண்டு வந்து, மேம்பட்ட விவசாய அறிவை அவர்களுக்கு வழங்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார். காரீஃப் பருவம் தொடங்குவதற்கு முன்பு விவசாயிகளுக்கு உதவ இந்தக் குழுக்கள் தயாராக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

பல தசாப்தங்களாக இந்தியாவின் வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி முன்னேற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், வேளாண் விளைச்சலில் அவற்றின் நேர்மறையான தாக்கத்தை வலியுறுத்தி, புதிய நுட்பங்களை வெற்றிகரமாக பரிசோதித்து, அற்புதமான விளைச்சலைப் பெற்ற முற்போக்கான விவசாயிகளைப் பாராட்டினார். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வெற்றிகரமான விவசாய நடைமுறைகள் பரந்த வேளாண் சமூகத்தை சென்றடைவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் இந்த முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார். "வேளாண் தீர்மான இயக்கம் இந்த அறிவுசார் இடைவெளியைக் குறைப்பதற்கான ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது, இது விவசாயிகள் அதிநவீன விவசாய நுண்ணறிவுகளிலிருந்து பயனடைய உதவுகிறது" என்று பிரதமர் கூறினார்.

 

ஒரு வெற்றிகரமான பாரதத்திற்கு, இந்தியாவின் விவசாயமும் வளர்ச்சியடைய வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார், வேளாண் துறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் பல முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளை எடுத்துக்காட்டினார். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல், விவசாயப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் தேசியத் தேவைகளுடன் பயிர் உற்பத்தியை இணைப்பது உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். "இந்தியா தனது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய உணவு வழங்குநராகவும் உருவெடுக்க வேண்டும்" என்று திரு மோடி கூறினார், காலநிலை மாற்ற சவால்களைச் சமாளித்தல், குறைந்தபட்ச நீர் பயன்பாட்டுடன் தானிய உற்பத்தியை மேம்படுத்துதல், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களிலிருந்து மண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், விவசாய நுட்பங்களை நவீனப்படுத்துதல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை வயல்களுக்கு எடுத்துச் செல்வது அவசியம் என்று குறிப்பிட்டார். கடந்த 10-11 ஆண்டுகளில், அரசு இந்தத் துறைகளில் விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். பிரச்சாரத்தில் பங்கேற்கும் அனைவரும் விவசாயிகளிடையே  விழிப்புணர்வை அதிகரிக்கவும், நவீன வேளாண் முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார்.

 

பாரம்பரிய விவசாயத்திற்கு அப்பால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமான ஆதாரங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், விவசாயிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளை எடுத்துரைத்தார். வயல் எல்லைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவுவது, கூடுதல் வருவாயை ஈட்டும் என்று அவர் குறிப்பிட்டார். இனிப்புப் புரட்சியின் தாக்கத்தைக் குறிப்பிட்ட அவர், தேனீ வளர்ப்பு, விவசாயிகளுக்கு பயனளிக்கிறது என்றும், மேலும் பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தும் வகையில் அதை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார். வேளாண் கழிவுகளை எரிசக்தியாக மாற்றுவதன் அவசியத்தையும், கழிவுகளை செல்வமாக மாற்றுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். 'ஸ்ரீ அன்னா' சாகுபடிக்கு பொருத்தமான பகுதிகளை அடையாளம் கண்டு, விவசாயப் பொருட்களில் மதிப்பு கூட்டலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். பால் கறக்காத கால்நடைகள் கூட கோபர்தன் திட்டம் மூலம் இப்போது பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றன, இது வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார். அதிகபட்ச பங்கேற்பு மற்றும் நன்மைகளை உறுதி செய்வதற்காக இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்து விவசாயிகளுக்கு பரவலான விழிப்புணர்வு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

 

"இந்தியாவின் விவசாயம் வளர்ந்த இந்தியாவின் ஒரு மூலக்கல்லாக மாற வேண்டும்" என்று தெரிவித்த திரு மோடி, இந்த இயக்கத்தின் மகத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். வருகை தரும் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், அவர்கள் கேள்விகள் கேட்கவும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறவும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பணியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று திரு மோடி கேட்டுக் கொண்டார், அவர்களின் அர்ப்பணிப்பு வழக்கமான அரசுப் பணிகளுக்கு அப்பால் சென்று தேசிய சேவையின் உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று கூறினார். விவசாயிகளின் கேள்விகளுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என்றும், அவர்களின் மதிப்புமிக்க பரிந்துரைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கம்  இந்தியாவின் விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும், விவசாயத்தில் நவீனமயமாக்கலை ஊக்குவிக்கும்" என்று திரு மோடி அறிவித்து, அனைத்து பங்குதாரர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

***

AD/RB/DL


(Release ID: 2132546)