கனரகத் தொழில்கள் அமைச்சகம்
பிரதமரின் மின்சார வாகன இயக்கத் திட்டத்தின் கீழ் தேசிய மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றக் கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2025 3:42PM by PIB Chennai
பிரதமரின் மின்சார வாகன இயக்கத் திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உள்கட்டமைப்பு வசதிகளை மறுஆய்வு செய்து அதற்கான பணிகளை விரைவுபடுத்துவதற்காக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி தலைமையில் இன்று ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தூய்மையான போக்குவரத்தைச் செயல்படுத்தவும், புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், நாடு தழுவிய அளவில் மின்சார வாகனங்களுக்கு ஏற்ற சூழல் சார் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரூ 2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 72,000 மின்சார வாகனங்களுக்கான பொது மின்னேற்ற நிலையங்களை அமைக்க வகை செய்கிறது. இவை தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் உள்ள பெருநகரங்கள், சுங்கச்சாவடிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் போன்ற அதிக போக்குவரத்து கொண்ட 50 நெடுஞ்சாலை வழித்தடங்களில் உத்திசார் ரீதியாக அமைக்கப்படும்.
இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்தியா நிலையான போக்குவரத்திற்கான உலகளாவிய மாதிரி நாடாக உருவெடுப்பதற்கான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது என்று கூறினார். இத்திட்டம் நாட்டு மக்களுக்கு சுத்தமான, குறைந்த செலவில், வசதியான போக்குவரத்து சேவைகள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும் என்று அவர் தெரிவித்தார். மேலும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன்,எரிசக்தி பாதுகாப்பு, பசுமை பொருளாதார வளர்ச்சிக்கான அடித்தளமும் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.”
இத்தகைய முயற்சியை செயல்படுத்துவதில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியம் என்பதை அமைச்சர் அங்கீகரித்தார். பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம், தேவைகளை ஒருங்கிணைத்து, நாடு முழுவதிலும் உள்ள மின்சார வாகனப் பயன்பாட்டாளர்களுக்கு ஒரே தளமாக செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சூப்பர் செயலியை உருவாக்குவதற்கும் முக்கிய முகமையாகவும் செயல்படவுள்ளது.
இந்த செயலியில் நிகழ்நேர மின்னேற்றத்திற்கான முன்பதிவு, கட்டண ஒருங்கிணைப்பு, மின்னேற்றி கிடைக்கும் நிலை மற்றும் பிரதமரின் மின்சார வாகன இயக்கத் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் அதன் பயன்பாடு குறித்து கண்காணிப்பதற்கான தகவல் பலகை ஆகியவை இடம்பெறும். மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற்கானத் திட்டங்களைத் தொகுத்து மதிப்பீடு செய்ய பெல் நிறுவனம் மாநிலங்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அமைச்சர் திரு குமாரசாமி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130225
******
TS/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2130258)
வருகையாளர் எண்ணிக்கை : 29