அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
“நவீன போர் என்பது முற்றிலும் தொழில்நுட்பத்தால் நடத்தப்படுகிறது - இதில் இந்தியாவின் உயர்நிலைத்திறன் கடந்த 4 நாட்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது - மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
கடந்த பத்து ஆண்டுகளில், உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது: திரு ஜிதேந்திர சிங்
Posted On:
11 MAY 2025 6:09PM by PIB Chennai
நவீன போர் என்பது முற்றிலும் தொழில்நுட்பத்தால் நடத்தப்படுகிறது எனவும் இதில் இந்தியாவின் உயர்நிலைத்திறன் கடந்த நான்கு நாட்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
புதுதில்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் விரைவான முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார். பாதுகாப்புத் திறன்களை கணிசமாக மேம்படுத்த, உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கி பயன்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய தொழில்நுட்ப தினத்தின் தோற்றத்தை நினைவுகூர்ந்த அவர், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பொக்ரான் அணு ஆயுத சோதனைகளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் முதன்முதலில் 1998 இல் கொண்டாடப்பட்டது என்று குறிப்பிட்டார்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், பல முக்கிய சாதனைகளையும் எடுத்துரைத்தார். உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இந்தியா 81-வது இடத்திலிருந்து 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். 27-வது தேசிய தொழில்நுட்ப தினம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைக் குறிக்கிறது எனவும் இது 2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவிற்கான பயணத்தின் முக்கிய படி என்றும் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்தார். .
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் திரு அபய் கரண்டிகர், துறையின் மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
****
(Release ID: 2128151)
TS/PLM/RJ
(Release ID: 2128165)