குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஸ்லோவாக்கியாவில் இந்திய சமூகத்தினரிடையே குடியரசுத்தலைவர் நேற்று உரையாற்றினார்

Posted On: 11 APR 2025 6:53PM by PIB Chennai

ஏப்ரல் 10, 2025 அன்று, பிராடிஸ்லாவாவில் ஸ்லோவாக்கியாவுக்கான இந்திய தூதர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  உரையாற்றினார். அவருடன் இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. தவால் படேல், திருமதி சந்தியா ரே ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

உற்சாகமாக திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்தியாவுக்கும் ஸ்லோவாக்கியாவுக்கும் இடையேயான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகளின் அடிப்படையில் அமைந்தவை என்று கூறினார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார உறவுகளில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

அதிபர், பிரதமர் மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய சபையின் தலைவர் ஆகியோருடன் நடத்திய பயனுள்ள சந்திப்புகள்  குறித்து குடியரசுத்தலைவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் தெரிவித்தார். இந்த சந்திப்புகளின் போது பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு உறவுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தக் கலந்துரையாடல்களின்போது, இந்திய சமுதாயத்தினரின் கடின உழைப்பு குறித்தும், ஸ்லோவேகியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பு குறித்தும் அந்நாட்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்ததாக அவர் சமூக உறுப்பினர்களிடம் கூறினார்.

 

இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையேயான நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காக இந்தியாவின் ஸ்லோவாக் நண்பர்களை குடியரசுத்தலைவர் பாராட்டினார். இந்தியாவின் பாரம்பரியம் ஸ்லோவாக் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். யோகா, ஆயுர்வேதம் முதல் இந்திய உணவு வகைகள் வரை, ஸ்லோவாக்கியாவில் இந்திய கலாச்சாரத்தின் மீதான அன்பு, இரு நாட்டு மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் வலுவான உறவுகளுக்கு ஒரு சான்று என்று அவர் கூறினார். உபநிடதங்களை ஸ்லோவாக் மொழியில் மொழிபெயர்ப்பது, ஸ்லோவாக் மக்களுக்கு இந்தியாவின் பண்டைய போதனைகளுடன் இணைவதற்கு மற்றொரு வாய்ப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று காலை, புதுதில்லி புறப்படுவதற்கு முன், இந்திய வர்த்தக குழுவினருடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121032 

 

****

(Release ID: 2121032)

RB/DL


(Release ID: 2121113) Visitor Counter : 21