குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் போர்ச்சுக்கல் பிரதமர், அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் ஆகியோரைச் சந்தித்தார்
Posted On:
09 APR 2025 1:31PM by PIB Chennai
போர்ச்சுகல் பயணத்தின் இறுதிக் கட்டமாக (ஏப்ரல் 8, 2025), குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் ஜோஸ் பெட்ரோ அகுயர் - பிராங்கோவை சந்தித்துப் பேசினார். லிஸ்பனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது இரு நாட்டு நாடாளுமன்றங்களுக்கு இடையேயான வழக்கமான பரிமாற்றங்கள், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அந்நாட்டு பிரதமர் திரு லூயிஸ் மொண்டிநீக்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
முன்னதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அந்நாட்டு அதிபர் மார்செலோ ரெபெலோ டி சௌசாவுடன் இணைந்து, லிஸ்பனில் உள்ள சாம்பலிமோட் அறக்கட்டளைக்கு சென்று பார்வையிட்டார். இங்கு நரம்பியல், புற்றுநோயியல், பரீட்சார்த்த மருத்துவ ஆராய்ச்சி, தானியங்கி மருந்து விநியோகம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி, மேம்பாட்டு முயற்சிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த அறக்கட்டளை மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் உள்ள இதர நிறுவனங்களில் பணியாற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா-போர்ச்சுகல் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்திய அறிஞர்களின் பங்களிப்பிற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
பின்னர், லிஸ்பனில் உள்ள மகாத்மா காந்தி, கஸ்தூரிபா காந்தி ஆகியோரின் சிலைகளுக்குக் குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராதா-கிருஷ்ணா கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120316
----
TS/SV/KPG/KR
(Release ID: 2120410)