பிரதமர் அலுவலகம்

ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் ரூ. 660 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வேத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்


ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டப் பயனாளிகள் 32,000 பேருக்கு அனுமதிக் கடிதங்களை வழங்கி, முதல் தவணையாக ரூ. 32 கோடி உதவியை விடுவித்தார்

46,000 பயனாளிகளின் புதுமனை புகுவிழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்

"ஜார்க்கண்ட் இந்தியாவின் மிகவும் வளமான மாநிலமாக மாறுவதற்கான திறனைக் கொண்டுள்ளது. இந்த அரசு வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் - வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய உறுதிபூண்டுள்ளது"

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரம் நாட்டின் சிந்தனையை சிறப்பாக மாற்றியுள்ளது"

"கிழக்கு இந்தியாவில் ரயில் போக்குவரத்து இணைப்பின் விரிவாக்கம், இந்த முழுப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் உயர்த்தும்"

"பிரதமரின் ஜன்மன் திட்டம், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின் சகோதர சகோதரிகளின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படுகிறது"


Posted On: 15 SEP 2024 12:33PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் ரூ.660 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை யநாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டப் பயனாளிகள் 32 ஆயிரம் பேருக்கு அனுமதிக் கடிதங்களையும் அவர் வழங்கினார். முன்னதாக, டாடாநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆறு வந்தே பாரத் ரயில்களை திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பாபா பைத்யநாத், பாபா பாசுகிநாத்பிர்சா முண்டா பூமியின் முன் தலைவணங்கி பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். இயற்கையை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்மா பர்வ் கொண்டாடப்படும் புனித தருணத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இன்று ராஞ்சி விமான நிலையத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை எடுத்துரைத்தார். அங்கு கர்மா பர்வத்தின் சின்னத்தை ஒரு பெண் அவருக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். கர்மா பர்வத்தின் ஒரு பகுதியாக தங்கள் சகோதரர்கள் வளமான வாழ்க்கையை வாழ பெண்கள் விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். இந்தப் புனித சந்தர்ப்பத்தில் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், ஜார்க்கண்ட் இன்று ஆறு புதிய வந்தே பாரத் ரயில்கள், ரூ. 600 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான வீடுகள் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்றார். இன்றைய திட்டங்களுக்காக ஜார்க்கண்ட் மக்களுக்கும், வந்தே பாரத் இணைப்பைப் பெற்ற பிற மாநிலங்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

நவீன வளர்ச்சி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பின்தங்கியிருந்ததை நினைவுகூர்ந்தார். அனைவரும் இணைவோம்- அனைவரும் உயர்வோம்" என்ற தாரக மந்திரம் நாட்டின் சிந்தனையையும், முன்னுரிமைகளையும் சிறப்பாக மாற்றியமைத்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள், நலிந்தோர், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன் நாட்டின் முன்னுரிமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு மாநிலமும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த வந்தே பாரத் ரயிலை விரும்புகின்றன என்று பிரதமர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கு மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கியதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ரயில் இணைப்பின் விரிவாக்கம் இந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களின் விளைவாக கலாச்சார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவது குறித்து பேசிய பிரதமர், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் உலகின் பல இடங்களில் இருந்தும் காசிக்கு வருகை தரும் ஏராளமான யாத்ரீகர்கள், வாரணாசி தியோகர் வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தியோகரில் உள்ள பாபா பைத்யநாத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார். இது இப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, டாடா நகரின் தொழில் வளர்ச்சியையும் ஊக்குவித்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார். விரைவான வளர்ச்சிக்கு நவீன ரயில்வே உள்கட்டமைப்பு இன்றியமையாதது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இன்றைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசினார். தியோகர் மாவட்டத்தில் மதுபூர் பை பாஸ் பாதைக்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் குறிப்பிட்டார். கிரிதிஹ் - ஜசிதிஹ் இடையேயான பயண நேரத்தை குறைக்க இது உதவும் என்றார். ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஹஸாரிபாக் நகர பயிற்சி மையம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்குர்குரா-கனரோன் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக்குவது ஜார்க்கண்டில் ரயில் ரயில் தொடர்பை மேம்படுத்துவதுடன், எஃகு தொழில்களுக்கான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ஜார்க்கண்டின் ஒட்டுமொத்த முன்னேற்றம், வளர்ச்சியை உறுதி செய்வதற்காக மத்திய அரசு முதலீட்டை முடுக்கிவிட்டுள்ளதாகவும், வளர்ச்சிப் பணிகளின் வேகத்தை அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரூ. 7,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடும்போது 16 மடங்கு அதிகம் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். ரயில்வே பட்ஜெட்டை அதிகரிப்பதன் நன்மைகள் குறித்து அவர் மேலும் மக்களுக்கு எடுத்துரைத்தார். புதிய பாதைகளை அமைப்பது, பாதைகளை மின்மயமாக்குவது, பாதைகளை இரட்டிப்பாக்குவது, ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் போன்றவை துரித கதியில் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார். ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ஜார்க்கண்ட் இருப்பதற்கு திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புத்துயிர் பெறுகின்றன என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின், தவணைத் தொகை இன்று வழங்கப்படுவதை சுட்டிக் காட்டிய பிரதமர், இதன் மூலம் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு பாதுகாப்பான வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் கழிப்பறை, குடிநீர், மின்சாரம், எரிவாயு இணைப்பு போன்ற பிற வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். ஒரு குடும்பத்திற்கு சொந்த வீடு கிடைக்கும்போது, அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். அவர்களின் நிகழ்காலத்தை உறுதிப்படுத்துவதோடு, அவர்கள் தங்கள் சிறந்த எதிர்காலத்திற்காக சிந்திக்கத் தொடங்குகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் ஜார்க்கண்ட் கிராமங்கள், நகரங்களில் உறுதியான வீடுகளுடன் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், நலிவடைந்த, பழங்குடியின குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்க பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். ஜார்க்கண்ட் உட்பட நாடு முழுவதும் பழங்குடியின சமூகத்தினருக்காக பிரதமரின் ஜன்மன் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்தும் அவர் பேசினார். இந்தத் திட்டத்தின் மூலம், மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியினரை அரசுத் திட்டப் பலன்கள் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அத்தகைய குடும்பங்களுக்கு வீடுகள், சாலைகள், மின்சாரம், தண்ணீர், கல்வி ஆகியவற்றை வழங்க உதவுவதாகவும் திரு மோடி நரேந்திர கூறினார். வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான அரசின் தீர்மானங்களின் ஒரு பகுதியாக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்இந்தத் தீர்மானங்கள் நிச்சயமாக நிறைவேறும் என்றும், மக்களின் ஆசீர்வாதத்துடன் ஜார்க்கண்ட்டின் கனவுகள் நனவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் இயக்க முடியாததால், திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடைபெறாததற்கு ஜார்க்கண்ட் மக்களிடம் மன்னிப்பை கோருவதாக அவர் கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்வார், மத்திய வேளாண் - விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

ரூ. 660 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தியோகர் மாவட்டத்தில் மதுபூர் புறவழிச்சாலை, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் ஹசாரிபாக் டவுன் கோச்சிங் டிப்போ ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டியது இந்தத் திட்டங்களில் அடங்கும். மதுபூர் புறவழிச்சாலை பாதை ஹவுரா-தில்லி பிரதான பாதையில் ரயில்கள் நிறுத்தப்படுவதைத் தவிர்க்கவும், கிரிதிஹ் - ஜசிதிஹ் இடையேயான பயண நேரத்தை குறைக்கவும் உதவும். மேலும் ஹசாரிபாக் டவுன் கோச்சிங் டிப்போ இந்த நிலையத்தில் பராமரிப்புக்கு உதவும்.

போண்டாமுண்டா ராஞ்சி ஒற்றை ரயில் பாதையின் ஒரு பகுதியையும், ராஞ்சி, முரி, சந்திரபுரா ரயில் நிலையங்கள் வழியாக ரூர்கேலா கோமோ வழித்தடத்தின் ஒரு பகுதியையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சரக்கு, பயணிகள் போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்க இந்தத் திட்டம் உதவும். இது தவிர, 4 சாலை கீழ் பாலங்கள் பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.

அனைவருக்கும் வீட்டு வசதி என்ற தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, ஜார்க்கண்டைச் சேர்ந்த 32,000 பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு அனுமதிக் கடிதங்களை பிரதமர் வழங்கினார். பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியுதவியை அவர் விடுவித்தார். 46 ஆயிரம் பயனாளிகளின் புதுமனை புகுவிழா (கிரஹப்பிரவேசம்) கொண்டாட்டங்களிலும் பிரதமர் பங்கேற்றார்.

*****

PLM/ KV

 

 



(Release ID: 2055177) Visitor Counter : 18