குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிக்கும் தீய திட்டங்கள் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: குடியரசுத் துணைத்தலைவர்

Posted On: 13 AUG 2024 4:39PM by PIB Chennai

"பாரதத்தை சீர்குலைத்து, நமது முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட தீய சக்திகள்" குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தினார்.

பாரத் மண்டபத்தில் இருந்து இல்லந்தோறும் தேசியக் கொடி இயக்க இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்கு முன்பு உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், "நமது வளர்ச்சியின் விரைவான வேகத்தை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றும், அவர்கள் தடைகளை உருவாக்கி  நிலையற்ற தன்மையைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

மூவர்ணக் கொடியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட மக்கள் இதிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அனைத்து சூழ்நிலைகளிலும் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இல்லந்தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய திரு தன்கர், இந்த முயற்சி அனைத்து இந்தியர்களிடையேயும் ஆழமான தேசபக்தி மற்றும் நாட்டின் பெருமை உணர்வை ஏற்படுத்துவதையும், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த இயக்கம் தற்போது மக்கள் இயக்கமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மூவர்ணக் கொடியின் ஆழமான முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், மூவர்ணக் கொடி என்பது வெறும் கொடி மட்டுமல்ல – அது நமது இறையாண்மை மற்றும் கூட்டு அடையாளத்தின் சின்னம் என்று குறிப்பிட்டார்.

இந்தியர் என்ற அடையாளம் நமது ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், நமது இந்திய அடையாளத்திற்கு சவால் விடுப்பது என்பது, நமது இருப்புக்கு சவால் விடுவதற்கு சமம் என்று உறுதிபடக் கூறினார். மூவர்ணக் கொடியின் கவுரவம், மரியாதை மற்றும் பெருமிதத்தை எப்போதும் பாதுகாக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நமது சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய திரு தன்கர், 1943 டிசம்பர் 30 அன்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேதாஜி இந்திய தேசியக் கொடி ஏற்றியதை எடுத்துரைத்தார்.

தற்போது நடைபெற்று வரும் விடுதலை அமிர்தப் பெருவிழா' கொண்டாட்டங்களின் போது, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரர்களை கௌரவிப்பதற்கான நாட்டின் முயற்சிகளை திரு தன்கர் பாராட்டினார். "நமது சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் நாம் நினைவில் கொள்கிறோம் என்றும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களை அங்கீகரித்து கௌரவித்துள்ளோம் என்றும்  கூறினார். இதில், பிர்சா முண்டா போன்ற முக்கிய நபர்கள் உட்பட, இளம் வயதில் நாட்டிற்காக குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

உலக அரங்கில் இந்தியாவின் மாற்றத்தை நோக்கிய பயணத்தையும், அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் எடுத்துரைத்த திரு தன்கர், வெளிநாட்டு அமைப்புகள் தற்போது இந்தியாவை ஒரு பிரகாசமான உதாரணமாகக் கருதுகின்றன என்றும் தெரிவித்தார்.

இது நாட்டின் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய செல்வாக்கை நிரூபிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தியா இனி வெறும் ஆற்றல்களும், சாத்தியக்கூறுகளும் கொண்ட நாடாக மட்டும் இல்லாமல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று வரும் நாடாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044851

--------------

IR/RS/DL


(Release ID: 2044911) Visitor Counter : 69