ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது

Posted On: 30 JUL 2024 2:25PM by PIB Chennai

உரக் கட்டுப்பாடு ஆணை, 1985ன் கீழ் குறிப்பிட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி ஆகியவை பற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு 26.62 கோடி பாட்டில்கள் (ஒவ்வொன்றும் 500 மில்லி) திறன் கொண்ட ஆறு நானோ யூரியா ஆலைகள் மற்றும் ஆண்டுக்கு 10.74 கோடி பாட்டில்கள் (ஒவ்வொன்றும் 500 / 1000 மில்லி) திறன் கொண்ட நான்கு நானோ டிஏபி ஆலைகள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், நாட்டில் நானோ யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், உரத் துறை அதன் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய உரங்கள் லிமிடெட், ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட் ஆகியவற்றை நானோ யூரியா ஆலைகளை அமைக்க ஊக்குவித்துள்ளது.

 

விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

· விழிப்புணர்வு முகாம்கள், வெபினார்கள், நாடகங்கள், கள செயல் விளக்கங்கள், கிசான் மாநாடுகள் மற்றும் பிராந்திய மொழிகளில் திரைப்படங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் நானோ யூரியா பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

 

· நானோ யூரியா பிரதம மந்திரி கிசான் சம்ரிதி கேந்திரங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் கிடைக்கிறது.

 

· உரத்துறை தொடர்ந்து வெளியிடும் மாதாந்திர விநியோகத் திட்டத்தில் நானோ யூரியா சேர்க்கப்பட்டுள்ளது.

 

· போபாலில் உள்ள இந்திய மண் அறிவியல் நிறுவனம் மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில்"உரங்களின் திறமையான மற்றும் சமச்சீர் பயன்பாடு(நானோ உரங்கள் உட்பட)" குறித்த தேசிய பிரச்சாரத்தை ஏற்பாடு செய்தது.

 

· நவம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்ட வளர்ந்த பாரத லட்சிய யாத்திரையின் போது நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கப்பட்டது.

 

· 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்கும் நோக்கத்துடன், இந்திய அரசு 'நமோ ட்ரோன் சகோதரி' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆளில்லா விமானங்கள் மூலம் நானோ உரங்களின் பயன்பாடு அதிகரிப்பதை உறுதி செய்யும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு உர நிறுவனங்களால் 1094 ஆளில்லா விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

· உரத் துறை, உர நிறுவனங்களுடன் இணைந்து, ஆலோசனைகள் மற்றும் கள அளவிலான செயல் விளக்கங்கள் மூலம் நாட்டின் அனைத்து 15 வேளாண் காலநிலை மண்டலங்களிலும் நானோ டிஏபியை பின்பற்றுவதற்கான மகா அபியான் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், உர நிறுவனங்களுடன் இணைந்து, நாட்டின் 100 மாவட்டங்களில் நானோ யூரியா பிளஸ் குறித்த கள அளவிலான செயல்விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

*****



(Release ID: 2038959)
PKV/RR/KR



(Release ID: 2038974) Visitor Counter : 22