நிதி அமைச்சகம்

கடந்த பத்து நிதியாண்டுகளில் பெண்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 218.8 சதவீதம் அதிகரிப்பு

Posted On: 22 JUL 2024 2:43PM by PIB Chennai

2014-15-ம் நிதியாண்டில் இருந்ததைவிட, 2024-25-ம் நிதியாண்டில் பெண்களின் நலனுக்கும் அதிகாரமளித்தலுக்கும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 218.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-15 ஆம் நிதியாண்டில் இந்த ஒதுக்கீடு ரூ. 97,134 கோடியாக இருந்தது.  2024-25-ல் ரூ. 3.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. பெண்களின் வளர்ச்சியிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா மாறி வருகிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை  கூறுகிறது.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியப் பொருளாதாரம் கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் மீட்சியை உறுதிப்படுத்தி, வலுவான, நிலையான அடித்தளத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மகளிர் சக்திக்குரிய தெளிவான அழைப்பை நிறைவேற்ற, பல்வேறு தொழில்களில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை உறுதி செய்வதில் இருந்துதான் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி தொடங்குகிறது என்று ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. தேசிய அளவில் பிறப்பு பாலின விகிதம் 2014-15-ல் 918 என்பதிலிருந்து 2023-24-ல் 930 ஆக மேம்பட்டுள்ளது, மேலும் பேறுகாலத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம் 2014-16 ல் ஒரு லட்சத்திற்கு 130 என்ற விகிதம் 2018-20-ல் ஒரு லட்சத்திற்கு 97 –ஆக குறைந்துள்ளது.

"பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை நேசித்தல், கல்வி அளித்தல், அவர்களுக்காக சேமித்தல் ஆகியவற்றை உணர்த்துவதாக பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

பிரதமரின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் உதவியுடன் மருத்துவமனையில் மகப்பேறுகளின் பாதிப்பு 2015-16-ம் ஆண்டில் 78.9 சதவீதத்திலிருந்து 2019-21-ம் ஆண்டில் 88.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள் பெண்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பாலின-குறைபாடுகளைச் சமாளிப்பதற்கும் உதவுவதில் கவனம் செலுத்தியுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டுதல், உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குதல், ஜல் ஜீவன் திட்டத்தின்  கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மகளிர் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஊட்டச்சத்து 2.0 திட்டம், பெண்களின் ஊட்டச்சத்து தன்னிறைவு மூலம் மேம்பட்ட ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. பெண்களுக்கு அதிகாரமளித்தலின் மையமாக பெண் கல்வி உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக உயர்கல்வியில், பெண்கள் சேரும் விகிதம் ஆண்களை விட அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034930

***

PKV/KV/KR/DL



(Release ID: 2035181) Visitor Counter : 60