பிரதமர் அலுவலகம்

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமரின் பதிலுரை


“10 ஆண்டுகளாக நாட்டுக்குத் தொண்டாற்ற எங்கள் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்து ஆசி வழங்கியுள்ளனர்”
“பாபா சாஹேப் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனமே, அரசியல் பின்புலம் சிறிதும் இல்லாத என்னைப் போன்றவர்கள் அரசியலில் நுழைந்து இந்த உயரத்தை எட்டுவதற்கு அனுமதித்துள்ளது”
“நமது அரசியல் சாசனம் நமக்கு கலங்கரை விளக்கம் போல வழிகாட்டுகிறது”
“இந்தியாவின் பொருளாதாரத்தை 3-வது பெரிய பொருளாதாரமாக நாங்கள் மாற்றுவோம் என்ற உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் எங்களுக்கு 3-வது முறையாக ஆதரவளித்துள்ளனர்”
“அடுத்த 5 ஆண்டுகள் நாட்டுக்கு மிகவும் முக்கியமாகும்”
“நல்லாட்சி உதவியுடன் இந்த சகாப்தத்தை அடிப்படை வசதிகளின் சகாப்தமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம்”
“நாங்கள் இத்துடன் நிற்க விரும்பவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய துறைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஆய்வு மேற்கொண்டு நாங்கள் முயற்சித்து வருகிறோம்”
"ஒவ்வொரு கட்டத்திலும் நுண் திட்டமிடல் மூலம் விதை முதல் சந்தை வரை விவசாயிகளுக்கு ஒரு வலுவான அமைப்பை வழங்க நாங்கள் பெருமுயற்சி மேற்கொண்டோம் "
“பெண்கள் தலைமையி

Posted On: 03 JUL 2024 3:06PM by PIB Chennai

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.

அவையில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத்தலைவரின்  ஊக்கம் அளிக்கும்  உரைக்கு  நன்றி தெரிவித்தார். குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட சுமார் 70 உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் வாக்காளர்கள் ஒரு அரசுக்கு 3-வது முறையாக ஆதரவளித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை என பிரதமர் குறிப்பிட்டார்.   வாக்காளர்களின் முடிவை அவமதிக்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையைக் கண்டித்த திரு மோடி, கடந்த சில நாட்களாக, அவர்கள் தங்கள் தோல்வியையும் நமது வெற்றியையும் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்வதைத் தாம் கவனித்து வருவதாகக் கூறினார்.

தற்போதைய அரசு தனது ஆட்சிக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே, அதாவது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்று கூறிய பிரதமர், இன்னும் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 20 ஆண்டுகள் எஞ்சியிருப்பதாக நம்பிக்கைத் தெரிவித்தார். “10 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்குத் தொண்டாற்ற எங்கள் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்து ஆசி வழங்கியுள்ளனர் என்று பிரதமர் கூறினார். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து, செயல் திறனுக்கு முன்னுரிமை அளித்து, கற்பனையான அரசியலைப் புறக்கணித்து நம்பிக்கை அரசியலுக்கு வெற்றியை வழங்கி மக்கள் தீர்ப்பளித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டில் இந்தியா நுழைவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்திய நாடாளுமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்வது சிறப்பான, மகிழ்ச்சி அளிக்கும் இணை நிகழ்வுகள் என்று தெரிவித்தார். பாபா  சாஹேப் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனத்தைப் புகழ்ந்த திரு மோடி,  இந்திய அரசியலில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சாராதவர்கள் நாட்டுக்குத் தொண்டாற்ற வாய்ப்பைப் பெறுவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளால் தான் என்று கூறினார். பாபா  சாஹேப் அம்பேத்கர் அளித்த  அரசியல் சாசனமே, அரசியல் பின்புலம் சிறிதும் இல்லாத என்னைப் போன்றவர்கள் அரசியலில் நுழைந்து இந்த உயரத்தை எட்டுவதற்கு அனுமதித்துள்ளதுஎன்று அவர் கூறினார். தற்போது மக்கள் அளித்த அங்கீகார முத்திரையால் அரசு தொடர்ந்து 3-வது முறையாக இங்கு அமைந்துள்ளது என்று அவர் கூறினார். இந்திய அரசியல் சாசனம் என்பது வெறும் சட்டப்பிரிவுகளின் தொகுப்பு மட்டுமல்ல, அதன் வீழ்ச்சியும் முத்திரையும் பெரும மதிப்பிற்குரியவை என்று பிரதமர் தெரிவித்தார்.

நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக தமது அரசு அறிவித்த போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை திரு மோடி நினைவுகூர்ந்தார். அரசியல் சாசன தினத்தை நினைவுகூரும் தங்களது முடிவு அதன் எழுச்சியை மேலும் பரவச் செய்ய உதவியது என்று அவர் தெரிவித்தார். அரசியல் சாசனத்தின் சில பிரிவுகள் ஏன் சேர்க்கப்பட்டன, எவ்வாறு நீக்கப்பட்டன என்பது குறித்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளைஞர்களிடையே  விவாதிக்க வழி ஏற்பட்டது என அவர் கூறினார். கட்டுரைப் போட்டிகள், விவாதங்கள், உரைகள் போன்ற போட்டிகளில் நமது மாணவர்களிடையே ஏற்பாடு செய்வதன் மூலம் அரசியல் சாசனத்தின் பல்வேறு முகங்கள் பற்றிய புரிந்துணர்வையும் நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்த முடியும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார். அரசியல் சாசனம் நமது மிகப் பெரிய உந்து சக்தியென கூறிய திரு மோடி, 75-வது ஆண்டில் நுழையும் அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் மக்கள் விழாவாகக் கொண்டாட தமது அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். அரசியில் சாசனத்தின் எழுச்சியையும், நோக்கத்தையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொண்டு சென்று அது பற்றி தெரிந்து கொள்வதை உறுதி செய்ய  உள்ளதாகவும் அவர் கூறினார்.

வாக்காளர்களைப் புகழ்ந்துரைத்த பிரதமர் இந்திய மக்கள் 3-வது முறையாக தமது அரசுக்கு வாக்களித்துள்ளனர் என்றும் வளர்ச்சி அடைந்த பாரதம், தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் மூலம் வளர்ச்சி இலக்குகளை அடைய இது உதவும் என்றும் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் வெற்றி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமது அரசு எடுத்த முடிவுகளுக்கு கிடைத்துள்ள மக்களின் அங்கீகார முத்திரை மட்டுமல்லாமல், மக்களின் எதிர்கால விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்றுவதற்கான அங்கீகாரமாகும் என்று அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் தங்களது எதிர்கால முடிவுகள் பலனைப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை தங்களுக்கு வழங்கியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பெருந்தொற்று, உலகளாவிய இடையூறுகள் போன்ற சவால்களுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியதை நாடு கண்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.  இந்த வெற்றி தற்போதைய 5-வது இடத்திலிருந்து பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு செல்ல வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இதனை நிறைவேற்ற முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சியின் அளவையும் வேகத்தையும் அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக திரு மோடி கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு உழைக்கும் என்று அவையில் பிரதமர் உறுதியளித்தார். நல்லாட்சி உதவியுடன் இந்த சகாப்தத்தை  அடிப்படை வசதிகளின் சகாப்தமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறினார். வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வறுமைக்கு எதிராக உறுதியாக நிற்கும் கூட்டுத்திறன் ஏழைகளுக்கு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இந்தியா 3-வது பொருளாதாரமாக மாறுவதன் தாக்கம் குறித்து விவரித்த திரு மோடி, இந்த நிகழ்வு உலகளாவிய காட்சியிலும் முன் எப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். உலகளவில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உயர்வு குறித்து பேசிய அவர், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களும் வளர்ச்சி எஞ்சின்களாக  உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.

தற்போதைய நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் நூற்றாண்டாகத் திகழ்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, பொதுப் போக்குவரத்து போன்ற பல புதிய துறைகளில், புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் பற்றி பேசினார். மருந்து, கல்வி அல்லது புத்தாக்கம் போன்ற துறைகளில் சிறு நகரங்கள் பெரும் பங்கு வகிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

விவசாயிகள், ஏழைகள்,  பெண்சக்தி, இளைஞர்கள் ஆகிய நான்கு தூண்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய பிரதமர், இவற்றின் அரசு கவனம் செலுத்துவது இந்திய வளர்ச்சிப் பயணத்திற்கு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனைகளுக்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மையை விவசாயிகளுக்கு லாபம் அளிப்பதாக மாற்ற அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கினார். கடன்கள், விதைகள், கட்டுப்படியான விலையில் உரங்கள், பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.   “ஒவ்வொரு கட்டத்திலும் நுண் திட்டமிடல் மூலம் விதை முதல் சந்தை வரை விவசாயிகளுக்கு ஒரு வலுவான அமைப்பை வழங்க நாங்கள் பெருமுயற்சி மேற்கொண்டோம்” என்று பிரதமர் தெரிவித்தார்.

உழவர் கடன் அட்டையின் பயன்கள் குறித்து எடுத்துக்காட்டிய பிரதமர்  மோடி, சிறு விவசாயிகள் கடன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை இது எளிதாக்கியிருப்பதாகத் தெரிவித்தார். உழவர் கடன் அட்டையின் பயன்கள், மீனவர்களுக்கும் கால்நடைகளை வளர்ப்போருக்கும் விரிவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சிறு விவசாயிகளுக்கான நலத்திட்டங்களையும் விவரித்த பிரதமர், பிரதமரின் உழவர் கௌரவ நிதி பற்றி எடுத்துரைத்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு 10 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சிகளால் கொண்டு வரப்பட்ட கடன் ரத்துத் திட்டங்களில் நம்பகத்தன்மையும் போதிய அளவும் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசால் செயல்படுத்தப்படும் உழவர் நலத்திட்டங்களின் அவசியம்  குறித்து அவர் விளக்கினார்.

எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்குப் பிறகு தமது உரையைத் தொடர்ந்த பிரதமர், வெளிநடப்பு  குறித்து அவைத் தலைவரிடம் தமது வருத்தத்தை தெரிவித்து பேசத் தொடங்கினார். தாம் மக்களின் சேவகனாக இருக்க கடமைப்பட்டுள்ளதாகவும், தமது நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் தாம் மக்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளதாகும் கூறினார். அவையின் பாரம்பரியத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டதாகப் பிரதமர் விமர்சித்தார்.

உரங்களுக்காக ஏழை விவசாயிகளுக்கு தமது அரசு ரூ.12 லட்சம் கோடி மானியம் வழங்கியிருப்பதாகவும், இது சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட மிக அதிக அளவிலான உர மானியத் தொகை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, தமது அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை சாதனை அளவாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து கொள்முதல் செய்வதில் புதிய சாதனைகளையும் படைத்துள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். முந்தைய அரசுடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒப்பிட்ட அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமது அரசு நெல் மற்றும் கோதுமை விவசாயிகளுக்கு இரண்டரை மடங்கு அதிகப் பணத்தை வழங்கியுள்ளது என்பதை விளக்கினார். இத்துடன் நிறுத்த அரசு விரும்பவில்லை என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பணியாற்றி பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்க்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது உலகின் மிகப்பெரிய உணவு சேமிப்பு இயக்கத்தை அரசு மேற்கொண்டுள்ளதாகவும்  அவர் கூறினார். மத்திய அரசின் ஏற்பாட்டின் கீழ் லட்சக்கணக்கான தானியக் களஞ்சியங்களை உருவாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தோட்டக்கலை விவசாயம் வேளாண்மையில் முக்கியமான துறை என்று குறிப்பிட்ட பிரதமர், அது தொடர்பான உற்பத்தி பொருட்களின்  சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனைக்கான உள்கட்டமைப்பை அதிகரிக்க தமது அரசு அயராது உழைத்து வருகிறது என்றார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது என்று பிரதமர் கூறினார். மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது தற்போது அக்கறை செலுத்தப்படுவது மட்டுமின்றி, அவர்கள் இப்போது மதிக்கப்படுவதாகவும்  பிரதமர் குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டும் இதன் மூலம் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்ற தமது அரசின் லட்சியத்தை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரான திருநங்கைகளுக்கான சட்டத்தை அமல்படுத்த அரசு செயலாற்றி வருவதாக தெரிவித்தார். தற்போது மேற்கத்திய நாடுகள் கூட இந்தியாவின் முற்போக்கான தன்மையை பெருமையுடன் பார்க்கின்றன என்று அவர் மேலும் கூறினார். மதிப்புமிக்க பத்ம விருதுகள் தற்போது திருநங்கைகளுக்கும் தமது அரசால் வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேபோல், நாடோடி சமூகங்களின் நலனுக்கென ஒரு நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். ஜன்மன் திட்டத்தின் கீழ் 24,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள, பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான அம்சங்கள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த அரசு, வாக்கு அரசியலுக்கு பதிலாக வளர்ச்சி அரசியலில் ஈடுபடுகிறது என்பதையே இவை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றி வரும் கைவினைக் கலைஞர்களான விஸ்வகர்மாக்கள் குறித்துப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவர்களின் மேம்பாட்டுக்கென சுமார் 13,000 கோடி ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார். அவர்களது    தொழிலை ஊக்குவிப்பதன் மூலமும், திறன் மேம்பாட்டுக்கான வளங்களை வழங்குவதன் மூலமும் அவர்களின் வாழ்க்கையை இத்திட்டம் மாற்றியமைத்து வருவதாக அவர் தெரிவித்தார். நடைபாதை வியாபாரிகள் வங்கிக் கடன்களைப் பெறவும், தங்கள் வருமானத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளவும் உதவும் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பழங்குடியினர், பெண்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் இந்த அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்தியாவின் அணுகுமுறையை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த விஷயத்தில் வெறும் முழக்கமாக அல்லாமல், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பெண்களின் ஆரோக்கியம் குறித்து திருமதி சுதா மூர்த்தி கூறியதைக் குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, குடும்பத்தில் தாயின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பெண்களின் சுகாதாரம், துப்புரவு மற்றும் நல்வாழ்வுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். கழிப்பறைகளை கட்டுதல், சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல், மகளிருக்கான தடுப்பூசிகள் செலுத்துதல், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் போன்றவை மகளிர் நலனுக்கான முக்கிய நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளிடம் வழங்கப்பட்ட 4 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். முத்ரா மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளித்து, அவர்களை சுதந்திரமாக செயல்பட வைத்திருப்பதாக அவர் கூறினார். சிறிய கிராமங்களில் சுய உதவிக் குழுக்களில் பணிபுரியும் 1 கோடி பெண்கள் இன்று லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அரசின்  தற்போதைய பதவிக்காலத்தில் அவர்களின் எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க அரசு பணியாற்றி வருவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.

வளர்ந்து வரும் ஒவ்வொரு புதிய துறையிலும் பெண்களைத் தலைமை தாங்கச் செய்வதும், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் முதலில் பெண்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுமே தமது அரசின் முக்கிய முன்முயற்சி என்று பிரதமர் தெரிவித்தார். நமோ ட்ரோன் இயக்கம் வெற்றிகரமாக கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் பெண்கள் முன்னணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். ட்ரோன்களை இயக்கும் பெண்கள் 'பைலட் சகோதரிகள்' என்று அழைக்கப்படுவதாகவும், இதுபோன்ற அங்கீகாரம் பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்கிறது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

பெண்களின் பிரச்சினைகளை அரசியலாக்கும் போக்கு மற்றும் குறிப்பிட்ட பிரச்சனைகளை மட்டும்  பேசும் அணுகுமுறை ஆகியவற்றை பிரதமர் விமர்சித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

நாட்டின் புதிய  தோற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், தேசத்தின் வளர்ச்சியில் சந்தேக மற்றும் குழப்ப நிலை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறினார். இந்தியா தனது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச அரங்கில்  இந்திய இளைஞர்களின் திறன் வெளிப்படுத்தப்படுவதாகவும் இந்தியாவின் இன்றைய வெற்றி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். வெளிப்படைத்தன்மையைப் பொறுத்தவரை இன்று பாரதம் ஒரு நம்பிக்கைக்குரிய பூமியாக உருவெடுத்து வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பத்திரிகைகள் மற்றும் வானொலி கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் குரல்கள் முடக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டவும் வாக்காளர்கள் அப்போது வாக்களித்தனர் என்று அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் இன்று, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான இந்த போராட்டத்தில், இந்திய மக்களின் முதல் தேர்வு தற்போதைய அரசுதான் என்று அவர் கூறினார். அவசரநிலை காலத்தின் போது நாட்டில்  நிகழ்ந்த கொடுமைகள் குறித்தும் திரு நரேந்திர மோடி பேசினார். 38-வது, 39-வது, 42-வது அரசியல் சட்டத் திருத்தங்களும், நெருக்கடி நிலையின் போது திருத்தப்பட்ட 12 இதர பிரிவுகளும் அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வை சீர்குலைத்தன என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவுகளை புறக்கணிக்கும் அதிகாரம் கொண்ட தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசி) ஏற்படுத்தப்பட்டதும், நெறிமுறைகளைப் பொருட்படுத்தாமல் ஒரு குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார். அவசரநிலை சகாப்தம் குறித்த விவாதத்தைத் தவிர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் செயல்படும் விதத்தையும் பிரதமர் விமர்சித்தார்.

அவசர நிலை காலம் என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல என்றும், அது இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது என்றும் பிரதமர் கூறினார். சிறையில் அடைக்கப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, விடுதலை செய்யப்பட்ட பிறகு முழுமையாக உடல்நலம் குணமடையாமல்  ஜெய்பிரகாஷ் நாராயண் காலமானதை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவசர நிலைக் காலத்தின் போது முசாபர்நகர் மற்றும் துர்க்மான் கேட் பகுதிகளைச் சேர்ந்த சிறுபான்மையினரின் நிலையை நினைவு கூர்ந்த பிரதமர், அவசர நிலைக்காலத்தின் போது வீட்டை விட்டு வெளியேறிய பலர் அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை என்று  தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது கவலை அளிப்பதாக  பிரதமர் கவலை தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் பல்வேறு அரசுகள் செய்த பல்வேறு ஊழல்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். மத்திய அரசு அமலாக்க முகமைகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பிரதமர் நிராகரித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதையும் அவர் விமர்சித்தார். முந்தைய அரசுகளில் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களையும் அவர் விவரித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் தமக்கு ஒரு தேர்தல் விஷயம் அல்ல என்றும், அது தமக்கு ஒரு கடமை என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். 2014-ம் ஆண்டு புதிய அரசு பதவியேற்றபோது, ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான வலுவான வலுவான போர் ஆகிய இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகின் மிகப்பெரிய ஏழைகள் நலத் திட்டம், ஊழலுக்கு எதிரான புதிய சட்டங்கள், கருப்புப் பணத்திற்கு எதிரான சட்டங்கள், பினாமி மற்றும் நேரடி பயனாளிகள் பரிமாற்றம் மற்றும் தகுதிவாய்ந்த ஒவ்வொரு பயனாளிக்கும் அரசுத் திட்டங்களின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம்  இந்த அரசின் செயல்பாடுகள் தெளிவாக தெரிவதாக அவர் கூறினார். ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புலனாய்வு அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அண்மையில் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் கவலை தெரிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், நமது நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களுக்கு எதிராக தமது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். அத்தகையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் இளைஞர்களுக்கு உறுதியளித்தார். நமது இளைஞர்கள் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்று அவர் கூறினார். இளைஞர்கள் தங்கள் திறனை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேர்வை அமைப்பை முழு அளவில் பலப்படுத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் வாக்குகள் பதிவு பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்த யூனியன் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களின் வாக்குகளை செலுத்தி, கடந்த 40 ஆண்டுகளின் சாதனையை  முறியடித்து இருப்பதாகக் கூறினார். மக்கள் தீர்ப்பைப் பாராட்டிய அவர், “ஜம்மு காஷ்மீர் மக்கள் பாரதத்தின் அரசியல் சட்டத்தையும், அதன் ஜனநாயகத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அங்கீரித்து இருக்கிறார்கள்” என்றார். இந்த நாட்டு மக்கள் வெகு காலமாக காத்திருந்த தருணம் இது என்று திரு மோடி அதனைக் குறிப்பிட்டார்.  இந்த யூனியன் பிரதேச வாக்காளர்களைப் பாராட்டிய பிரதமர், கடந்த சில பத்தாண்டுகளில் பல முழு அடைப்புகள், போராட்டங்கள், குண்டுவெடிப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை முடக்கிவிட்டன என்றார்.  இருப்பினும், ஜம்மு காஷ்மீர் மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது  தங்களின் ஊசலாட்டம் இல்லாத நம்பிக்கையை வெளிப்படுத்தித் தங்களின் எதிர்காலத்தைத் தீர்மானித்துள்ளனர். “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் இறுதி கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். எஞ்சியுள்ள பயங்கரவாத வலைப் பின்னல்களை அழிக்க நாங்கள் கடுமையாகப் பாடுபடுகிறோம்” என்று கூறிய  அவர், இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு இந்த யூனியன் பிரதேச மக்கள் உதவி செய்து வழிகாட்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தேசத்தின் வளர்ச்சியின் நுழை வாயிலாக வடகிழக்கு மாநிலங்கள் வெகுவேகமாக மாறிவருகின்றன என்று பிரதமர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக இந்த திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி  அவர் விவரித்தார்.  வடகிழக்கில் முன்னெப்போதும் இல்லாத அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி பற்றி அவர் குறிப்பிட்டார். இந்த மாநிலங்களின் எல்லைப்பகுதி பிரச்சனைகள் பொதுகருத்துடன் அர்த்தமுள்ள வகையில் கையாளப்படுவதால், இந்தப் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை உறுதிசெய்வதற்கான முயற்சிகளின் தாக்கம் நீடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாநிலங்களவையின் முந்தையை அமர்வில், மணிப்பூர் குறித்த தமது  விரிவான உரையை நினைவுகூர்ந்த திரு மோடி, மணிப்பூரில் நிலைமையை சீராக்க அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மணிப்பூரில் அமைதியின்மை ஏற்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னருமாக 11,000-க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, தவறு செய்த 500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். மணிப்பூரில் வன்முறை சம்பங்கள் தொடர்ந்து குறைந்த வரும் உண்மையை நாம் ஏற்கவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மணிப்பூரில் அமைதி சாத்தியம் என்ற நம்பிக்கையே இதன் பொருள் என்று அவர் கூறினார். மணிப்பூரில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் இயல்பாக நடைபெற்று வருகின்றன என்று அவையில் திரு மோடி தெரிவித்தார். குழந்தைகளின் மேம்பாட்டுப் பயணம் எந்தவகையிலும் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார். மணிப்பூரில் அமைதியையும், இணக்கத்தையும் உறுதி செய்ய  சம்பந்தப்பட்ட அனைவருடனும், மத்திய, மாநில அரசுகள் விவாதித்து வருகின்றன என்பதைப் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மணிப்பூரில் அமைதிக்கான முயற்சிகளுக்கு உள்துறை அமைச்சர் தாமே முன்னின்று செயல்பட்டார் என்பதை அவர் எடுத்துரைத்தார்.  பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அமைதியை உறுதி செய்யவும், மூத்த அதிகாரிகள் வற்புறுத்தப்பட்டு  இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மணிப்பூரில் தற்போதைய சிக்கலான வெள்ள நிலைமை பற்றி கவலை தெரிவித்த பிரதமர், வெள்ள நிவாரணப் பணிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினார். நிவாரண நடவடிக்கைகளில் மாநில அரசுடன் மத்திய அரசு நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று  திரு மோடி தெரிவித்தார். மணிப்பூரில் அமைதியையும், இயல்பு நிலையையும் உறுதி செய்வது அரசியல் ரீதியான, கட்சி ரீதியான அனைத்துத் தரப்பினரின் கடமை என்பதற்கான காலம் இது என்பதை  திரு மோடி கோடிட்டுக்காட்டினார். மணிப்பூரின் பாதுகாப்பு நிலைமையை மேலும் அபாயத்திற்கு உள்ளாக்காமல் இருக்குமாறும், ஆத்திரமூட்டலை நிறுத்துமாறும், அதிருப்பதியாளர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். மணிப்பூரில் சமூக மோதல் என்பது நீண்ட வரலாற்றில் ஆழமாக வேரூன்றி உள்ளது என்பதை நினைவுகூர்ந்த அவர், சுதந்திரத்திற்குப் பின், பத்து முறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்க இது வழிவகுத்தது என்றார். 1993-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டு காலத்திற்கு மோதல் நீடித்தது பற்றி குறிப்பிட்ட திரு மோடி, நிலைமையை  புத்திச்சாலித்தனத்தோடும், பொறுமையோடும் கையாள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை வலியுறுத்தினார். மணிப்பூரில் இயல்பு நிலையையும், அமைதியையும் உறுதி செய்வதற்கான தமது முயற்சிகளில்  உதவி செய்ய ஒத்த கருத்துள்ள அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

மக்களவைக்குள் அடியெடுத்து வைத்து இந்தியப் பிரதமராவதற்கு முன் மாநில முதலமைச்சராகத் தாம் இருந்ததால், கூட்டாட்சி முறையின் முக்கியத்துவத்தை அனுபவத்தில் தாம் கற்றறிந்து இருப்பதாக பிரதமர் கூறினார். ஒத்துழைப்பு மற்றும் போட்டித்தன்மை கொண்ட கூட்டாட்சியை வலுப்படுத்துவதில் தமது நிலையை  எடுத்துரைத்த திரு மோடி, மாநிலத்தின் திறமைகளை உலக அரங்கில் மேம்படுத்துவதற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் முக்கியமான ஜி20 நிகழ்வுகளை  நடத்தியது பற்றி குறிப்பிட்டார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் மத்திய, மாநில அளவில் பல விவாதங்களும், கலந்துரையாடல்களும் நடத்திருப்பதை  அவர் அவைக்குத் தெரிவித்தார்.

மாநிலங்களவை என்பது  மாநிலங்களின் அவை என்று குறிப்பிட்ட பிரதமர், குறைக்கடத்தி,  மின்னணு சாதனங்கள்  ஆகியவற்றை 1உற்பத்தியில் அடுத்த புரட்சிக்கு இந்தியா வழிகாட்டுகிறது என்றார். வளர்ச்சி, நல்ல நிர்வாகம், கொள்கை வகுத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றில் மாநிலங்கள் போட்டியிடுவது ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார். உலகம் இந்தியாவின் கதவுகளை தட்டும் நிலையில், ஒவ்வொரு மாநிலமும், வாய்ப்பைப் பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின்  வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் பங்களிப்பு செய்து, அவற்றின் பயன்களை அறுவடை செய்யவேண்டும் என்று  திரு மோடி வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையேயான போட்டி, இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கப் பேருதவியாக இருக்கும் என்று கூறிய அவர், வடகிழக்கு மாநிலமான அசாமில் அதிவேமாக குறைக்கடத்திகள் தொடர்பான பணி நடைபெற்று வருவதை உதாரணமாக எடுத்துரைத்தார்.

2023-ம் ஆண்டு சிறுதானியங்கள் ஆண்டு என ஐநா அறிவித்தது பற்றி பேசிய பிரதமர், இந்தியாவின் சிறு விவசாயிகளின் சக்தி பற்றி குறிப்பிட்டார். சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் கொள்கைகளை  உருவாக்குமாறு, மாநிலங்களை வலியுறுத்திய அவர், உலகச் சந்தயைில் இதனை இடம்பெறச் செய்வதற்கான திட்டத்தை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  உலகின் ஊட்டச்சத்து சந்தையில் சிறுதானியங்கள் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று கூறிய அவர், ஊட்டச்சத்து குறைவான மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளில் இது முக்கிய உணவாக மாறும் என்றார்.

மக்களிடையே வாழ்க்கையை எளிதாக்குவதற்கான கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்குமாறு பிரதமர் மாநிலங்களை ஊக்கப்படுத்தினார். ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தாசில், வட்ட மற்றும் மாவட்ட அமைப்புகளின் ஊழலை எதிர்த்த போராட்டத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி தெரிவித்த அவர், இதற்கான ஒற்றுமையில் மாநிலங்கள் இணையவேண்டும் என்று  வலியுறுத்தினார்.

21-ம் நூற்றாண்டின் பெருந்திட்டத்துடன் இந்தியாவை மாற்றியமைக்க  அரசின் கொள்கை உருவாக்குதல், வழங்குதல், நிர்வாக மாதிரி ஆகியவற்றில் திறனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்தத் துறைகளில் பணிகளின் வேகம் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அமைப்பு முறையில் வெளிப்படைத்தன்மை திறமையைக்கொண்டு வருகிறது என்றும், இதன் மூலம் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும், வாழ்க்கையை எளிதாக்குவது அதிகரிப்பதாகவும், தயக்கங்கள் அகற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உதவி தேவைப்படுவோருக்கு  அரசு அதனை செய்யும்போது குறுக்கீடுகள் குறைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் பற்றி கவலை தெரிவித்த பிரதமர், இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறினார். அனைத்து மாநிலங்களும் முன்வந்து இதற்கு எதிராகப் போராடுவதை அவர் ஊக்கப்படுத்தினார். அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தவும், அனைவரும் ஒருங்கிணைந்து  பணியாற்றுவது அவசியம் என்று அவர் கூறினார். அரசியல் உறுதிப்பாட்டின் மூலமே, இந்த அடிப்படை இலக்குகளை அடைய முடியும் என்று கூறிய அவர், இதனை அடைவதற்கு ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்கவும், ஒத்துழைக்கவும் வலியுறுத்தினார்.

இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கப்போவதாக கூறிய பிரதமர், இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிடக் கூடாது என்றார். பல வாய்ப்புகளை இந்தியா தவறவிட்டதால், நம்மைப்போன்ற இடத்தில் இருந்த நாடுகள் பல வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சீர்திருத்தங்களைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் முடிவெடுக்கும் அதிகாரத்தைப்  பகிர்ந்தளிப்பது பின்பற்றப்பட  வேண்டும் என்றார்.

“வளர்ச்சியடைந்த பாரதம் என்பது 140 கோடி மக்களின் இயக்கம்” என்று கூறிய பிரதமர், இந்த இலக்கை அடைவதற்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவில் முதலீடு செய்ய உலகம் தயாராக உள்ளது என்று கூறிய அவர், உலகின் முதலாவது தேர்வு இந்தியா என்றும் கூறினார். இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள` வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட விஷயங்களுக்கும் அவரின் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்தும் பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

***

VL/PKV/PLM/SMB/KPG/AG/RS/DL



(Release ID: 2030495) Visitor Counter : 13