குடியரசுத் தலைவர் செயலகம்

பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்திருந்த 'தூய்மை மற்றும் ஆரோக்கிய சமூகத்திற்கான ஆன்மீக அதிகாரமளித்தல்' என்ற தேசிய அளவிலான அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் கலந்து கொண்டார்

Posted On: 27 MAY 2024 2:22PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று (மே 27, 2024)  நடைபெற்ற பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்திருந்த 'தூய்மை மற்றும் ஆரோக்கிய சமூகத்திற்கான ஆன்மீக அதிகாரமளித்தல்' என்ற தேசிய அளவிலான அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், உலக வரலாற்றின் பொன்னான அத்தியாயங்கள் மற்றும் நாடுகளின் வரலாறு எப்போதும் ஆன்மீக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறினார். ஆன்மீக விழுமியங்களைப் புறக்கணித்து, உலக வாழ்க்கயின் முன்னேற்றத்திற்கான பாதையை மட்டுமே பின்பற்றுவது இறுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலக வரலாறு சாட்சியாகும் என்று அவர் தெரிவித்தார். ஆரோக்கியமான மனநிலையின் அடிப்படையில்தான் முழுமையான நல்வாழ்வு சாத்தியமாகும் என்றும், உண்மையில் ஆரோக்கியமான நபர் உடல், மனம், ஆன்மீகம் ஆகிய மூன்று பரிமாணங்களையும் எதிர்கொள்கிறார் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய நபர்கள் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை, நாட்டை மற்றும் உலக சமூகத்தை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார்.

 

ஆன்மீக அதிகாரமளித்தல்தான் உண்மையான அதிகாரமளித்தல் என்று குடியரசுத்தலைவர் கூறினார். எந்தவொரு மதத்தையும் அல்லது பிரிவையும் பின்பற்றுபவர்கள் ஆன்மீகத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்லும்போது, அவர்கள் மதவெறிக்கு பலியாகி, ஆரோக்கியமற்ற மனநிலையால் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார். ஆன்மீக விழுமியங்கள் அனைத்து மதத்தினரையும் இணைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

சுயநலத்திற்கு அப்பாற்பட்டு, பொது நல உணர்வுடன் பணியாற்றுவது, உள்ளார்ந்த ஆன்மீகத்தின் சமூக வெளிப்பாடாகும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். பொது நன்மைக்காக தர்மம் செய்வது மிக முக்கியமான ஆன்மீக விழுமியங்களில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

 

அச்சம், பயங்கரவாதம் மற்றும் போரை ஊக்குவிக்கும் சக்திகள் உலகின் பல பகுதிகளில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். இத்தகைய சூழலில், பிரம்ம குமாரி நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல மையங்கள் மூலம் மனிதகுலத்திற்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. ஆன்மீக மதிப்புகளை வளர்ப்பதன் மூலம் உலகளாவிய சகோதரத்துவத்தை பலப்படுத்துவதற்கான விலைமதிப்பற்ற முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.

 

பிரம்ம குமாரிகள் நிறுவனம் உலகிலேயே பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனம் என்று குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த அமைப்பில் பிரம்ம குமாரிகள் முன்னணியிலும், அவர்களை சார்ந்தவர்கள் பின்னணியிலும் பணியாற்றுவதாகவும் அவர் கூறினார். அத்தகைய தனித்துவமான நல்லிணக்கத்துடன், இந்த நிறுவனம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதன் மூலம், ஆன்மீக முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் தனித்துவமான உதாரணத்தை உலக சமுதாயத்திற்கு இது வழங்கியுள்ளது என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

 

*****

(Release ID: 2021784)

SMB/IR/RR/KR



(Release ID: 2021795) Visitor Counter : 48