பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

கேரள கடற்பகுதியில் 6 இந்தியர்களுடன் சென்ற ஈரான் படகை இந்தியக் கடலோரக்காவல் படை பறிமுதல் செய்தது

Posted On: 06 MAY 2024 4:49PM by PIB Chennai

2024, மே 05, அன்று பிற்பகுதியில் கேரள கடற்பகுதியில் பேப்பூருக்கு மேற்கே ஆறு இந்தியர்களுடன் சென்ற ஈரானிய மீன்பிடி படகை இந்தியக் கடலோரக் காவல்படை பறிமுதல் செய்தது. இந்நடவடிக்கையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பல்களும், விமானங்களும் ஈடுபட்டன.

படகை பறிமுதல் செய்த பின், அப்படகில் ஏறிய இந்தியக், கடலோரக் காவல் படையினர், தேச விரோத நடவடிக்கைகளில் அப்படகு ஈடுபடுகிறதா என்பது குறித்து விசாரித்தனர். படகின் உரிமையாளர் ஈரானியர் என்பதும், அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை ஒப்பந்தம் செய்து ஈரான் கடலோரப் பகுதியில் மீன்பிடிக்க ஈரானிய விசாக்களை வழங்கியிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்களை, அவர்கள் மோசமாக நடத்தியதாகவும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அடிப்படை வாழ்வுரிமையை பறித்ததாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து அதே படகில் ஈரானிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவர  முடிவு செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகு மேல் விசாரணைக்காக 2024, மே 06, அன்று பாதுகாப்பாக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

****

ANU/AD/IR/KPG/RR/DL



(Release ID: 2019763) Visitor Counter : 65