குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய விமானப்படையின் நான்கு பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவர் கொடி விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 08 MAR 2024 1:07PM by PIB Chennai

இன்று (மார்ச் 8, 2024) ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் (உத்தரப்பிரதேசம்) நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 ஸ்குவாட்ரன் மற்றும் 221 ஸ்குவாட்ரன்களுக்கு குடியரசுத் தலைவரின் ஸ்டாண்டர்டு  விருதையும், 11 பேஸ் பழுதுபார்க்கும் கிடங்கு மற்றும் 509 சிக்னல் யூனிட்டுக்கு குடியரசுத்தலைவரின் கொடி விருதுகளையும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது நாட்டைப் பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 1948, 1965, 1971 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் விமானப்படை வீரர்கள் வியக்கத்தக்க தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அவர்கள் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். நமது துணிச்சலான விமானப்படை வீரர்கள் தங்களது கடமை உணர்வையும், உறுதியையும் வெளிப்படுத்தியது குடிமக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது என்றார அவர்.

இந்திய விமானப் படை நாட்டின் விண்வெளியைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கும் முக்கியப் பங்களிப்பை அளித்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இஸ்ரோவின் ககன்யான் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்கள் விமானப்படை அதிகாரிகள் என்பது விமானப்படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் மிகுந்த பெருமை அளிக்கிறது என்றார் அவர்.

வேகமாக மாறிவரும் இந்தச் சகாப்தத்தில், பாதுகாப்புத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளும் வேகமாக மாறி வருகின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். மற்ற துறைகளைப் போலவே, பாதுகாப்புத் துறையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய விமானப்படை நவீனத் தொழில்நுட்பத்தை பின்பற்றி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்திய விமானப் படையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். அவர்கள் விமானப்படையில் ஒரு வாழ்க்கையை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், அதிகமான பெண்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். விமானப் படையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பது இந்தப் படையை மேலும் உள்ளடக்கியதாக மாற்றும் என்று அவர் மேலும் கூறினார்.

***

KASI/RS/KV

 



(Release ID: 2012760) Visitor Counter : 56