தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை கோடிக் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது – இந்த யாத்திரையின்போது பிரதமரின் இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தில் பயன்பெற 9.47 லட்சம் பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

Posted On: 03 JAN 2024 3:48PM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் பலன்கள் மக்களை முழுமையாகச் சென்றடையச் செய்யவும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாடு முழுவதும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்  யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த  யாத்திரையை  பிரதமர் திரு நரேந்திர மோடி  நவம்பர் 15, 2023  அன்று  ஜார்க்கண்டின் குந்தியில்  கொடியசைத்துத் தொடங்கி  வைத்தார்.  நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் பல தகவல்,  செய்தி  மற்றும்  தொடர்பு  (ஐ.இ.சி)  வாகனங்கள் இயக்கப்பட்டன. ஜனவரி 25, 2024-க்குள், இந்த யாத்திரை நாடு முழுவதும் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 4000க்கும் மேற்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த யாத்திரை  நாட்டின்  கடைக்கோடி மூலைகளையும் சென்றடைந்துள்ளது. மத்திய அரசின் சமூக நலத் திட்டங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரையும், தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களையும் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதை இந்த யாத்திரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக, பிரதமரின் இலவச சமையல் எரிவாயுத் திட்டப் பதிவு, மை  பாரத் தளத்தில் தன்னார்வ பதிவு, ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம் போன்ற பல்வேறு  உடனடி சேவைகளும் வழங்கப்படுகின்றன. யாத்திரையின் போது, கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் பல்வேறு அரசுத் திட்டங்களில் பயன்பெற்றுள்ளனர். அத்துடன் யாத்திரையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.  

யாத்திரையின் போது, பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் 9.47 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு   இணைப்பு வழங்குவதற்கான பதிவு மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

யாத்திரையின் ஒரு பகுதியாக, பிரதமரின்  சுரக்ஷா  பீமா யோஜனா  திட்டத்தின் கீழ் 18.15 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டுக்கான பிரதமரின்  ஜீவன் ஜோதி பீமா யோஜனா  திட்டத்தில் இந்த யாத்திரையின்போது 10.86 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு திட்டங்களும் இந்தியா முழுவதும் காப்பீட்டு நிதி  சேர்க்கையை  அதிகரிப்பதில் முக்கியப் பங்களிக்கின்றன.

அத்துடன் இந்த யாத்திரையின் போது 6.79 லட்சத்துக்கும் அதிகமான சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் செயல்பாட்டு மூலதன கடன் வழங்கப்பட்டுள்ளது. 'மை பாரத்' என்ற தளத்தில், 27.31 லட்சத்துக்கும்  அதிகமான  இளைஞர்கள்  தங்களைப் பதிவு செய்துகொண்டுள்ளனர். இந்த நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரைக்கான ஆதரவும் அதில் மக்களின் ஈடுபாடும்   மிக அதிக அளவில் உள்ளது.

   

    

***

ANU/PKV/PLM/KPG/KRS

Release ID: 1992721



(Release ID: 1992836) Visitor Counter : 112