பிரதமர் அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில். ரூ.15,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ரூ.11,100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களால் பயனடையும்
"உலகம் ஜனவரி 22 ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறது, நானும் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்"

"நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் இயக்கம் அயோத்தியில் இருந்து புதிய ஆற்றலைப் பெறுகிறது"

"பழங்கால மற்றும் நவீனத்துவம் இரண்டையும் இணைத்து இன்றைய இந்தியா முன்னேறுகிறது"

"அவத் பிராந்தியம் மட்டுமல்லாமல் அயோத்தியா முழு உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் புதிய பாதையை வழங்கும்"

"வால்மீகி மகரிஷியின் ராமாயணம் நம்மை ஸ்ரீராமருடன் இணைக்கும் ஞான மார்க்கம் ஆகும்"

"நவீன அமிர்த பாரத் ரயில்களில் ஏழைகளுக்கான சேவை உணர்வு உள்ளது"

"ஜனவரி 22 அன்று ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீ ராம் ஜோதியை ஏற்றுங்கள்"

"பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் காரணங்களுக்காக, விழா முடிந்ததும் ஜனவரி 22 ஆம் தேதிக்குப் பிறகு அயோத்திக்கு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்"

"மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 முதல் நாடு முழுவதும் உள்ள புனிதத் தல

Posted On: 30 DEC 2023 4:39PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அயோத்தி தாமில் ரூ.15,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நிறைவைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் ரூ. 4600 கோடி மதிப்புள்ள பிற திட்டங்களும் இதில் அடங்கும்.

முன்னதாக பிரதமர் மோடி சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை  கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பல ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தையும் அவர்  திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அயோத்தி தாமில் இருப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தமது பேரணியின் போது உள்ள உற்சாகத்தையும் அவர் குறிப்பிட்டார். ஜனவரி 22-ம் தேதியை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் தானும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நாளுக்காக ஆர்வமாக இருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆம் ஆண்டு இதே நாளில் அந்தமானில் மூவர்ணக் கொடியை ஏற்றியதையும் டிசம்பர் 30 ஆம் தேதியின் முக்கியத்துவத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். சுதந்திர இயக்கத்துடன் தொடர்புடைய புனிதமான நாளில், இன்று நாம் அமிர்த காலத்தின் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்று அவர் மேலும் கூறினார். வளர்ச்சி அடைந்த பாரதம் இயக்கம் அயோத்தியில் இருந்து புதிய ஆற்றலைப் பெறுகிறது என்று கூறிய அவர், வளர்ச்சித் திட்டங்களுக்காக அயோத்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் அயோத்தியை தேசிய வரைபடத்தில் மீண்டும் சிறந்த இடத்தில் நிறுவும் என்று அவர் கூறினார். 

வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுவதற்கு பாரம்பரியத்தை பராமரிப்பது ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று பிரதமர் தெரிவித்தார். பழங்காலப் பாரம்பரியம் மற்றும் நவீனம் இரண்டையும் இணைத்து இன்றைய இந்தியா முன்னேறுகிறது என்று கூறிய அவர், 4 கோடி ஏழை குடிமக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டப்படுவதையும், பிரமாண்டமான கோயில் கட்டப்படுவதையும் எடுத்துரைத்தார்.  டிஜிட்டல் இந்தியாவின் சாதனைகள்,  315-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது, கேதார் தாமை மறுசீரமைத்தல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புத் திட்டம், வெளிநாடுகளில் இருந்து பாரம்பரிய கலைப்பொருட்களைக் கொண்டு வருதல், விண்வெளி மற்றும் கடல் சாதனைகள் எனப் பலவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.

ராமர் கோவில் குடமுழுக்கு விழாவைக் (பிரான் பிரதிஷ்டை) குறிப்பிட்ட அவர், இன்று இப்போது நடைபெறும் முன்னேற்றத்தின் கொண்டாட்டம், சில நாட்களுக்குப் பிறகு பாரம்பரியத்தின் திருவிழாவாக இருக்கும் என்றார்.  இன்று வளர்ச்சியின் பிரம்மாண்டத்தைக் காண்கிறோம் என்றும் சில நாட்களுக்குப் பிறகு பாரம்பரியத்தின் தெய்வீகத்தை உணர்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.  வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் இந்தக் கூட்டு வலிமை 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று அவர் தெரிவித்தார். வால்மீகி மகரிஷி விவரித்த அயோத்தியின் பண்டைய மகிமையைக் குறிப்பிட்ட பிரதமர், அதை நவீனத்துவத்துடன் இணைப்பதன் மூலம் அந்தப் பெருமையை மீண்டும் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

அவத் பிராந்தியம் மட்டுமல்லாமல் அயோத்யா முழு உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் புதிய வழியை ஏற்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். பிரமாண்டமான கோயிலில் வழிபட புனித நகரத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், தேவையை பூர்த்தி செய்ய உள்கட்டமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அயோத்தி விமான நிலையத்திற்கு வால்மீகி மகரிஷியின் பெயர் சூட்டப்பட்டது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வால்மீகி மகரிஷியின் ராமாயணம் நம்மை ஸ்ரீராமருடன் இணைக்கும் ஞான மார்க்கம் என்றார் அவர். நவீன இந்தியாவில் உள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் மற்றும் தெய்வீக-பிரமாண்டமான புதிய ராமர் கோயிலுடன் நம்மை இணைக்கும் என்று கூறினார். முதல் கட்டமாக இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளைக் கையாள முடியும் என்றும், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். அயோத்தி தாம் ரயில் நிலையம் இப்போது  10 ஆயிரம் பேரைக் கையாளுகிறது என்றும், மறுசீரமைப்பு முடிந்ததும் இது 60 ஆயிரத்தை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல், ராம பாதை, பக்திப் பாதை, தர்மப் பாதை மற்றும் ஸ்ரீ ராம் ஜன்மபூமி பாதை, கார் பார்க்கிங், புதிய மருத்துவக் கல்லூரிகள், சரயு நதி மாசுபடுவதைத் தடுப்பது, படித்துறைகளை மேம்படுத்துவது, பழங்காலக் குண்டங்களைப் புதுப்பித்தல், லதா மங்கேஷ்கர் சவுக் ஆகியவை அயோத்திக்கு புதிய அடையாளத்தை வழங்குகின்றன என்றும், புனித நகரத்தில் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை இவை உருவாக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

வந்தே பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்களுக்குப் பிறகு 'அமிர்த  பாரத்' என்ற புதிய ரயில் குறித்து தெரிவித்த பிரதமர், முதல் அமிர்த பாரத் ரயில் அயோத்தி வழியாகச் செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ரயில்களை இன்று பெற்றதற்காக உத்தரப் பிரதேசம், தில்லி, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா மக்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். நவீன அமிர்த பாரத் ரயில்கள் ஏழைகளுக்கான சேவை உணர்வைக் கொண்டவை என பிரதமர் எடுத்துரைத்தார். வேலை நிமித்தமாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்களும், குறைந்த வருமானம் உள்ளவர்களும் நவீன வசதிகளுக்கும், வசதியான பயணத்திற்கும் தகுதியானவர்கள்தான் என்று அவர் தெரிவித்தார். இந்த ரயில்கள் ஏழைகளின் வாழ்க்கையில் கண்ணியத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார். வளர்ச்சியை பாரம்பரியத்துடன் இணைப்பதில் வந்தே பாரத் ரயில்கள் வகிக்கும் பங்கையும் பிரதமர் எடுத்துரைத்தார். நாட்டின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காசியில் இருந்து இயக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டில் 34 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன என்றும் வந்தே பாரத் காசி, கத்ரா, உஜ்ஜைனி, புஷ்கர், திருப்பதி, ஷீரடி, அமிர்தசரஸ், மதுரை என ஒவ்வொரு பெரிய நம்பிக்கை மையத்தையும் இணைக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த வரிசையில், இன்று அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் என்ற பரிசு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 'யாத்திரைகளின்' பண்டைய மரபுகளைப் பட்டியலிட்ட பிரதமர், அயோத்தி தாமில் உருவாக்கப்படும் வசதிகள் தாமிற்கு வரும் பக்தர்களின் யாத்திரையை மிகவும் வசதியாக மாற்றும் என்று கூறினார்.
140 கோடி இந்தியர்களும் ஸ்ரீராம ஜோதியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்த வரலாற்றுத் தருணம் மிகவும் அதிர்ஷ்டவசமாக நம் அனைவரின் வாழ்க்கையிலும் வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  நாட்டிற்காக ஒரு புதிய தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும் என்றும், அதை புதிய ஆற்றலுடன் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். குடமுழுக்கு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் , பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் கண்ணோட்டத்தில் ஜனவரி 22 ஆம் தேதி நிகழ்ச்சிக்குப் பிறகு அயோத்தி பயணத்தைத் திட்டமிடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு அனைவரும் தங்கள் வருகையைத் திட்டமிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். நாம் 550 ஆண்டுகள் காத்திருந்தோம் என்றும், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் எண்ணற்ற யாத்ரிகர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று கூறிய பிரதமர், தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதை மீண்டும் வலியுறுத்தினார். அயோத்தியை நாட்டின் தூய்மையான நகரமாக மாற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்காக, மகர சங்கராந்தி நாளான ஜனவரி 14 முதல் நாடு முழுவதும் உள்ள புனிதத் தலங்களில் தூய்மைக்கான ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
உஜ்வாலா இலவச சமையல் எரிவாயுத் திட்ட இணைப்பின் பயனாளியுடனான தமது அனுபவத்தையும் பிரதமர் விவரித்தார். உ.த்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் 2016 மே 1-ம் தேதி தேதி தொடங்கப்பட்ட உஜ்வாலா திட்டம் பல பெண்கள்  புகையிலிருந்து விடுபட உதவியுள்ளது என்றும், அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அதற்கு முந்தைய 50 முதல் 55 ஆண்டுகளில் வெறும் 14 கோடி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி இலவச இணைப்புகள் உட்பட  18 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
தனது முழு சக்தியுடனும் மக்களுக்கு சேவை செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இப்போதெல்லாம் மோடியின் உத்தரவாதத்திற்கு ஏன் இவ்வளவு பலம் என்று சிலர் கேட்கிறார்கள் எனவும் மோடி சொல்வதைச் செய்வதால் மோடியின் உத்தரவாதத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இன்று நாடு மோடியின் உத்தரவாதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.  ஏனெனில் உத்தரவாதங்களை நிறைவேற்ற மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். இந்த அயோத்தி நகரமும் இதற்கு சாட்சி. என்று அவர் தெரிவித்தார். அயோத்தி மக்களுக்கு மீண்டும் ஒரு உறுதியளிப்பதாகவும் இந்த புனித இடத்தின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் கைவிடப் போவதில்லை என்றும் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார். 

திட்டத்தின் விபரங்கள்

அயோத்தியில் மேம்பட்ட  உள்கட்டமைப்பு

அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, அயோத்தியில் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட, அகலப்படுத்தப்பட்ட மற்றும் அழகுபடுத்தப்பட்ட நான்கு சாலைகளை பிரதமர் திறந்து வைத்தார். ராம்பாத், பக்திபாத், தரம்பாத் மற்றும் ஸ்ரீ ராம் ஜன்மபூமிபாத் ஆகியவை அந்த சாலைகள் ஆகும்.

குடிமை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பொது இடங்களை அழகுபடுத்தவும் பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் தொடக்க திட்டங்களில் ராஜரிஷி தஷ்ரத் தன்னாட்சி மருத்துவக் கல்லூரியும் அடங்கும்; அயோத்தி-சுல்தான்பூர் சாலை-விமான நிலையத்தை இணைக்கும் நான்கு வழிச்சாலை, நகரம் முழுவதும் பல அழகுபடுத்தப்பட்ட சாலைகள் மற்றும் அயோத்தி புறவழிச்சாலை,   தேசிய நெடுஞ்சாலை 330 ஏ-ன் ஜகதீஷ்பூர்-பைசாபாத் பிரிவு, மஹோலி-பராகான்-தியோதி சாலை, ஜசார்பூர்-பாவ்பூர்-கங்காராமன்-சுரேஷ்நகர் சாலையை அகலப்படுத்தி வலுப்படுத்துதல் திட்டம், பஞ்சகோசி பரிக்ரமா மார்க்கில் உள்ள பாடி புவா ரயில்வே கிராசிங்கில் ரயில்வே மேம்பாலம், பிக்ரௌலி கிராமத்தில் திடக்கழிவு சுத்திகரிப்பு நிலையம், டாக்டர் பிரஜ்கிஷோர் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்டவை பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்களில் அடங்கும்.  

அயோத்தியில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டங்கள்

அயோத்தியில் குடிமை வசதிகளை மறுசீரமைக்க மேலும் உதவும் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதே நேரத்தில் நகரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வலுப்படுத்தவும் உதவும்.  அயோத்தியில் உள்ள நான்கு வரலாற்று நுழைவாயில்களைப் பாதுகாத்தல் மற்றும் அழகுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். குப்தர் படித்துறை மற்றும் ராஜ்காட் இடையே புதிய கான்கிரீட் படித்துறைகள் மற்றும் முன்பே கட்டப்பட்ட படித்துறைகளை புனரமைத்தல், நயா படித்துறை முதல் லக்ஷ்மண் படித்துறை வரை சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்துதல். ராம் கி பைடியில் தீபோத்சவ் மற்றும் பிற கண்காட்சிகளுக்காக பார்வையாளர் காட்சியகம் கட்டுதல், ராம் கி பைடி முதல் ராஜ் காட் மற்றும் ராஜ் காட் முதல் ராமர் கோயில் வரையிலான யாத்ரீக பாதையை வலுப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

அயோத்தியில் ரூ.2180 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்டு வரும் கிரீன்ஃபீல்டு டவுன்ஷிப் மற்றும் சுமார் ரூ.300 கோடி செலவில் உருவாக்கப்படும் வசிஷ்ட குஞ்ச் குடியிருப்பு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தேசிய நெடுஞ்சாலை 28 (புதிய தேசிய நெடுஞ்சாலை-27) லக்னோ-அயோத்தி பிரிவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே உள்ள என்.எச் -28 (புதிய என்.எச் -27) அயோத்தி புறவழிச்சாலையை வலுப்படுத்துதல் மற்றும் மாற்றியமைத்தல், அயோத்தியில் சிப்பெட் மையத்தை நிறுவுதல் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் அயோத்தி மற்றும் அயோத்தி மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தின் கட்டுமானப் பணிகள் ஆகியவையும் அடங்கும்.
உத்தரப்பிரதேசம் முழுவதும் பிற திட்டங்கள்
இந்தப் பொது நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் முழுவதும் பிற முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கோசைன் கி பஜார் பைபாஸ்-வாரணாசி (காக்ரா பாலம்-வாரணாசி) (என்.எச்-233) நான்கு வழி அகலப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்; தேசிய நெடுஞ்சாலை 730-ன் குதார் முதல் லக்கிம்பூர் வரை பலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்; அமேதி மாவட்டம் திரிசூண்டியில் உள்ள எல்பிஜி ஆலையின் திறன் அதிகரிப்பு; பன்காவில் 30 எம்.எல்.டி மற்றும் கான்பூரின் ஜஜ்மாவில் 130 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; உன்னாவ் மாவட்டத்தில் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை தடுத்து திருப்பி விடுதல்; மற்றும் கான்பூரில் உள்ள ஜஜ்மாவுவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை குழுமத்திற்கான சி.இ.டி.பி. ஆகியவை அடங்கும்.
ரயில்வே திட்டங்கள்
மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  மேலும் பல ரயில்வே திட்டங்களையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தின் முதல் கட்டம் - அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இது ரூ. 240 கோடிக்கு மேல் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் கொண்ட நவீன ரயில் நிலைய கட்டிடத்தில் லிப்ட், எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பூஜை தேவைகளுக்கான கடைகள், பொருள் பாதுகாப்பு அறைகள், குழந்தைகள் பராமரிப்பு அறைகள், காத்திருப்பு அறைகள் என அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. இந்த நிலைய கட்டிடம் 'அனைவரும் அணுகக்கூடியது' மற்றும் 'ஐ.ஜி.பி.சி சான்றளிக்கப்பட்ட பசுமை நிலைய கட்டிடம்' ஆகும்.

அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டின் புதிய வகை அதிவேகப் பயணிகள் ரயில்களான அமிர்த பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமிர்த பாரத் ரயில் குளிர்சாதனப் பெட்டிகளைக் கொண்ட எல்.எச்.பி புஷ் புல் ரயில் ஆகும். இந்த ரயிலின் இரு முனைகளிலும் சிறந்த முடுக்கத்திற்காக லோகோக்கள் உள்ளன. இது அழகான மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைக்கப்பட்ட இருக்கைகள், சிறந்த லக்கேஜ் ரேக், பொருத்தமான மொபைல் ஹோல்டருடன் மொபைல் சார்ஜிங் பாயிண்ட், எல்இடி விளக்குகள், சிசிடிவி, பொது தகவல் அமைப்பு போன்ற மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல், மால்டா டவுன்-சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினஸ் (பெங்களூரு) ஆகிய இரண்டு புதிய அமிர்த  பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அமிர்த பாரத் ரயில்களின் தொடக்கப் பயணத்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது தில்லி ; அமிர்தசரஸ்-தில்லி ; கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட்; மங்களூர்-மட்கான் ; ஜல்னா-மும்பை , அயோத்தி-ஆனந்த் விஹார் டெர்மினல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை அந்த ரயில்கள் ஆகும்.

அந்தப் பிராந்தியத்தில் ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 2300 கோடி மதிப்புள்ள மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்களில் ரூமா சகேரி-சந்தேரி மூன்றாவது பாதை திட்டம் அடங்கும். ஜான்பூர்-துளசி நகர், அக்பர்பூர்-அயோத்தி, சோஹாவல்-பத்ராங்கா மற்றும் சப்தர்கஞ்ச்-ரசௌலி பிரிவுகள் ஜான்பூர்-அயோத்தி-பாராபங்கி இரட்டை ரயில் பாதை திட்டத்தின்; மற்றும் மல்ஹௌர்-தலிகஞ்ச் ரயில்வே பிரிவின் இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் திட்டம் ஆகியவையும் இதில் அடங்கும். 

மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் - அயோத்தி தாம்

புதிதாக கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரூ.1450 கோடி செலவில் அதிநவீன விமான நிலையத்தின் முதல் கட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முனைய கட்டடம் 6500 சதுர மீட்டர் பரப்பளவில், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் இருக்கும். முனையக் கட்டடத்தின் முகப்பு அயோத்தியின் ஸ்ரீ ராமர் கோயிலின் கோயில் கட்டடக்கலையை சித்தரிக்கிறது. முனையக் கட்டடத்தின் உட்புறங்கள் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் உள்ளூர் கலை, ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அயோத்தி விமான நிலையத்தின் முனைய கட்டிடத்தில் இன்சுலேட்டட் கூரை அமைப்பு, எல்இடி விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, நீரூற்றுகளுடன் கூடிய நிலத்தோற்றம், நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் நிலையம் போன்ற பல்வேறு நிலைத்தன்மை அம்சங்கள் உள்ளன. இந்த விமான நிலையம் பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். இது சுற்றுலா, வணிக நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

Release ID: 1991752
 



(Release ID: 1991843) Visitor Counter : 121