பிரதமர் அலுவலகம்

தியோகரில் மக்கள் மருந்தக மையத்தை நடத்துபவர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்


பாபா தாமில் 10,000ஆவது மக்கள் மருந்தகம் தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்

குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவையாகும்: பிரதமர்

Posted On: 30 NOV 2023 1:23PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியா சபத  யாத்திரையின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000ஆவது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் அர்ப்பணித்தார்.

மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000ஆக உயர்த்தும் திட்டத்தையும் திரு. மோடி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்குதல், மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000ஆக உயர்த்துதல் ஆகிய இந்த இரண்டு முன்முயற்சிகளையும் பிரதமர் இந்த ஆண்டின் தனது சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை இந்த நிகழ்வு குறிக்கிறது.

தியோகரில் உள்ள எய்ம்ஸ் மக்கள் மருந்தகப் பயனாளி மற்றும் மருந்தகத்தைத் தொடங்கியுள்ள ருச்சி குமாரியுடன் பிரதமர் கலந்துரையாடலைத் தொடங்கினார். 10,000ஆவது மக்கள் மருந்தக மையத்தைத் தொடங்கியதற்காகப் பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பாபா தாம் தியோகரில் இந்த மைல்கல் எட்டப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மக்கள் மருந்தக மையம் அமைக்கும் முடிவு குறித்து ருச்சி குமாரியிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது ஏழை, நடுத்தர மக்களுடனான தனது உரையாடலை விவரித்த அவர், சந்தையில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் மருந்து பெரும்பாலும் 10 முதல் 50 ரூபாய்க்கு மக்கள் மருந்தகத்தில் கிடைப்பதால் குறைந்த விலை மருந்துகளின் தேவையைத் தீவிரமாக உணர்ந்ததாகக் கூறினார். இப்பகுதியில் மக்கள் மருந்தக மையங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து தாம் உணர்ந்ததாகவும், இதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து ருச்சி தெரிவித்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மக்கள் மருந்தக மையங்களின் பயனாளி திரு சோனா மிஸ்ரா, மக்கள் மருந்தக மையங்களில் குறைவான விலையில் மருந்துகளை வாங்குவதன் மூலம் மாதத்திற்கு சுமார் 10,000 ரூபாயை சேமிக்க முடிந்தது என்று பிரதமரிடம் தெரிவித்தார். மக்கள் மருந்தக அனுபவங்கள் குறித்து கடையில் ஒரு பலகை வைக்குமாறு திரு மிஸ்ராவைப் பிரதமர் அறிவுறுத்தினார். மேலும் குறைவான விலையில் மருந்துகள் கிடைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்தத் திட்டங்கள் பற்றி உள்ளூர் மக்களுக்குத் தெரியும் என்பது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். "தரமான, குறைந்த விலை மருந்து விற்பனை ஒரு பெரிய சேவை" என்றும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

***

ANU/SMB/IR/RR/KPG



(Release ID: 1981137) Visitor Counter : 108