குடியரசுத் தலைவர் செயலகம்
மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் குடியரசுத்தலைவரைச் சந்தித்தனர்
நீர்வளப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்தைத் திறம்பட நிர்வகிப்பது முக்கியம்: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
இடுகை இடப்பட்ட நாள்:
21 AUG 2023 1:47PM by PIB Chennai
மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் இன்று (21.08.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், வாழ்க்கைக்கு தண்ணீர் அடிப்படைத் தேவை என்றும், நீர் மேலாண்மை என்பது அனைத்து தலைமுறையினருக்கும் ஒரு முக்கியமான மற்றும் சவாலானப் பணியாகும் என்றும் கூறினார். பொறியியல் தீர்வுகளின் மூலமாக நீர்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். இயற்கையாக ஏற்படும் மற்றும் மனிதர்களால் உருவாகும் நீர் தொடர்பான நெருக்கடிகளிலிருந்து நாட்டை பாதுகாப்பதிலும் இந்த அதிகாரிகளின் சேவை முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.
நீர் வளங்களின் மேம்பாடு மற்றும் நீரை திறம்பட மேலாண்மை செய்வது ஆகியவை நீர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அம்சங்கள் என குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பொருளாதார மேம்பாடு மற்றும் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் சூழலில் இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். பருவநிலை மாற்றத்தால் ஏற்கனவே நீர்வளம் பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். பல்வேறு பகுதிகளைக் கொண்ட நமது நாடு வெவ்வேறு நில மற்றும் பருவநிலைத் தன்மைகளைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். தற்போதுள்ள சவால்கள் மற்றும் புதிதாக ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவதில் மத்திய நீர்வளப் பொறியியல் சேவை அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். நீர் ஆதாரங்களின் மேம்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பான நடைமுறைகளில் மேலும் அதிகக் கவனம் செலுத்துமாறு திருமதி திரௌபதி முர்மு அறிவுறுத்தினார்.
***
ANU/AP/PLM/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1950794)
வருகையாளர் எண்ணிக்கை : 175