நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி தலைமையிலான இந்திய நாடாளுமன்ற நல்லெண்ணக் குழுவின் உருகுவே பயணம்

Posted On: 17 JUN 2023 9:09AM by PIB Chennai

இந்தியா – உருகுவே இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி ஆழப்படுத்தும் நோக்கத்துடன் உருகுவே குடியரசின் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அழைப்பின்பேரில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி  மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி தலைமையிலான 10 உறுப்பினர் இந்திய நாடாளுமன்ற நல்லெண்ணக் குழு 2023 ஜூன் 14-17   உருகுவேயில்  பயணம் மேற்கொண்டது.

பல்வேறு கட்சிகளைக்  கொண்ட இந்தக் குழுவில் மக்களவையைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் மாநிலங்களவையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு ஜி. ஸ்ரீநிவாசும் இடம்பெற்றனர்.

உருகுவே  தலைநகர் மான்டேவிடியோவில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் மார்பளவு சிலைக்குத் தூதுக்குழு உறுப்பினர்களுடன் அமைச்சர் மலரஞ்சலி செலுத்தியதுடன் ஜூன் 15 அன்று அதிகாரபூர்வ பயணம் தொடங்கியது. இந்தச் சிலையின் அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரம்ப்லா கடற்கரை சாலையின் ஒரு பகுதிக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியத் தூதுக்குழுவினருடன் உருகுவே நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உருகுவே நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திரு செபாஸ்டின் அண்டுஜார் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள திரு ஜோஷி அழைப்புவிடுத்தார். இதையடுத்து 2023 இறுதிக்குள் உருகுவே நாடாளுமன்ற தூதுக்குழுவின் இந்தியப் பயணத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

பின்னர் உருகுவேயின் முதலாவது பெண் குடியரசு துணைத்தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான திருமதி பீட்ரிஸ் ஆர்கிமோனை இந்தியத் தூதுக்குழுவினர் சந்தித்தனர். தூதுக்குழுவினரை வரவேற்ற அவர், சில ஆண்டுகளுக்கு முன் தமது பயனுள்ள, மறக்க முடியாத இந்தியப் பயணத்தை நினைவு கூர்ந்தார். துடிப்ப்பு மிக்க  இரண்டு ஜனநாயக நாடுகளுக்கிடையேயான உறவுகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இரண்டு சந்திப்புகளிலும், அமைச்சர் திரு ஜோஷி, பிரதமர் நரேந்திர மோடியின்  அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை முயற்சிகள் காரணமாக இந்தியாவின் விரைவான சமூக-பொருளாதார வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தார்.

உருகுவேயில் வசிக்கும் இந்தியர்களின் சங்கமான உருகுவே-இந்திய கலாச்சார சங்கம் நடத்திய சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் இந்திய தூதுக்குழு பங்கேற்றது. இதுதவிர, உள்ளூர் உருகுவே யோகா ஆசிரியரால் வழிநடத்தப்படும் தியான அமர்வும் இடம்பெற்றது.

மான்டேவிடியோவில் இந்திய சமூகம் மற்றும் இந்தியாவின் நண்பர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை அமைச்சரும் தூதுக்குழுவினரும் பெற்றனர். உருகுவேயில் 800க்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர்.

2020-ல் 60 ஆண்டுகால தூதரக உறவுகளைக் கொண்டாடிய இந்தியா - உருகுவே இடையேயான வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது 2022-23-ல் 350 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இரு ஜனநாயக நாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன.

 

***

AD/SMB/DL


(Release ID: 1933022)