பிரதமர் அலுவலகம்

தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மே 11 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்


ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார்

நவி மும்பையில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை கட்டிடத்தையும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்

நவி மும்பையில் உள்ள தேசிய ஹாட்ரான் பீம் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் ஆராய்ச்சி பிரிவை நாட்டிற்கு அர்ப்பணித்தார்

மும்பையில் ஃபிஷன் மாலிப்டெனம்-99 உற்பத்தி நிறுவனம், விசாகப்பட்டினத்தில் அரிய புவி நிரந்தர காந்த நிறுவனம் ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தார்

மும்பை டாடா நினைவு மருத்துவமனையின் பவளவிழா கட்டடம், ஜாட்னியில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டினார்

லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு - அலை கண்காணிப்பகம் இந்தியா (எல்ஐஜிஓ- இந்தியா)-வுக்கு அடிக்கல் நாட்டினார்

25-வது தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி நினைவு தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்

இந்தியாவின் வெற்றிகரமான அணு சோதனை குறித்து அடல் அவர

Posted On: 11 MAY 2023 12:57PM by PIB Chennai

தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை  நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம்  பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.

ஹிங்கோலியில் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு - அலை கண்காணிப்பகம் இந்தியா (எல்ஐஜிஓ- இந்தியா,) ஒடிசா மாநிலம் ஜாட்னியில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை டாடா நினைவு மருத்துவமனையின் பவளவிழா கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மும்பையில் ஃபிஷன் மாலிப்டெனம்-99 உற்பத்தி நிறுவனம், விசாகப்பட்டினத்தில் அரிய புவி நிரந்தர  காந்த நிறுவன, நவி மும்பையில் தேசிய ஹாட்ரான் பீம் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் ஆராய்ச்சி பிரிவு, நவி மும்பையில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த கண்காட்சியை பிரதமர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். நினைவு தபால்தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மே 11-ம் நாள் இந்திய வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க நாள் என்று கூறினார். இந்நாளில் ஒட்டுமொத்த தேசமே பெருமைப்படும் வகையில் இந்திய விஞ்ஞானிகள் பெக்ரானில் அணு சோதனை நடத்தியதாக குறிப்பிட்டார். இந்தியாவின் வெற்றிகரமான அணு சோதனை குறித்து அடல் அவர்கள் அறிவித்த நாளை என்னால் மறக்க இயலாது என்று பிரதமர் கூறினார். பெக்ரான் அணுசோதனை இந்தியாவின் அறிவியல் திறன்களை மட்டும் நிரூபிக்காமல், நாட்டின் உலகளாவிய நிலைக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

அடல் அவர்களின் சொற்களின்படி, நாம் நமது பயணத்தை நிறுத்தவில்லை நமது வழியில் வரும் எந்தஒரு சவால்களுக்கும் அடிபணிந்ததில்லை என்று தெரிவித்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி அனைத்து குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இன்று தொடங்கப்பட்ட எதிர்கால திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர் நவி மும்பையில் உள்ள தேசிய ஹாட்ரான் பீம் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் ஆராய்ச்சி பிரிவு, மும்பையில் ஃபிஷன் மாலிப்டெனம்-99 உற்பத்தி வசதி, விசாகப்பட்டினத்தில் அரிய புவி நிரந்தர  காந்த ஆலை அல்லது பல்வேறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைகள், அணு தொழில்நுட்ப உதவியுடன் நாட்டின் வளர்ச்சிக்கு  உதவிடும் என்று கூறினார். எல்ஐஜிஓ- இந்தியா குறித்து குறிப்பிட்ட பிரதமர், எல்ஐஜிஓ 21-ம் நூற்றாண்டின் மிகமுக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னெடுப்புகளில் ஒன்று என்று தெரிவித்தார். கண்காணிப்பகம் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஆராய்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்று அவர் கூறினார்.

அமிர்த காலத்தின் தொடக்க நிலையில் 2047-ம் ஆண்டிற்கான குறிக்கோள்கள் நம்மிடம் தெளிவாக உள்ளன என்று கூறிய அவர் நாட்டை நாம் வளர்ச்சியடைந்ததாகவும், தற்சார்புடையதாகவும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், நிதி வளர்ச்சிக்கான நோக்கங்கள் ஆகியவற்றுக்கு  உகந்த சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர்  வலியுறுத்தினார். ஒவ்வொரு நிலையிலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். அந்தவகையில் இந்தியா ஒட்டுமொத்த அணுகுமுறை என்றவகையில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  நாட்டின் வளர்ச்சிக்கான கருவியாக தொழில்நுட்பத்தை இந்தியா கருதுகிறது என்றும் அதன் ஆதிக்கத்தை வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

‘பள்ளியில் இருந்து ஸ்டார்ட்அப்- இளையோரின் மனங்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு தயார்படுத்துதல்’ என்ற இந்நிகழ்ச்சியின் இன்றைய கருப்பொருளை அவர் பாராட்டினார்.  இந்தியாவின் எதிர்காலத்தை இன்றைய இளைஞர்களும் குழந்தைகளும் தீர்மானிப்பார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். இன்றைய குழந்தைகள், இளைஞர்களின் ஆர்வம், சக்தி மற்றும் திறன் இந்தியாவின் பெரிய வலிமை ஆகும். டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கூறிய கருத்துக்களை குறிப்பிட்ட பிரதமர், கூடுதல் அறிவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இந்தியா அறிவுசார் சமூகமாக வளர்ச்சியடைந்து வருவதாக கூறினார்.  இளையோரின் மனங்களை தயார்படுத்துவதற்கு  கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வலிமையான அடித்தளங்கள் குறித்து அவர் விவரித்தார்.

700 மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடல் ஆய்வகங்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான பண்ணைகளாக திகழ்கின்றன என்று பிரதமர் தெரிவித்தார். இதில் 60 சதவீத ஆய்வகங்கள் அரசு மற்றும் ஊரகப்பள்ளிகளில் உள்ளதாக அவர் கூறினார். அடல் ஆய்வகத்தில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பு திட்டங்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாற்றி வருவதாக கூறினார். பள்ளிகளில் இருந்து இளம்விஞ்ஞானிகள் வெளிவருவதன் அடையாளம் இது என்று அவர் தெரிவித்தார். அவர்களின் திறமைகளை கண்டறிந்து கைகோர்த்து அவர்களுடைய சிந்தனைகளை அமல்படுத்தி உதவுவது அனைவருடைய கடமை என்றும் கூறினார். அடல் புத்தாக்க மையங்களில் நூற்றுக்கணக்கான ஸ்டார்டப் நிறுவனங்கள் உள்ளதாக குறிப்பிட்டார். புதிய இந்தியாவின் புதிய ஆய்வகங்களாக இது உருவாகி வருவதாக அவர் கூறினார். இந்தியாவின் தொழில்முனைவோர் விரைவில் உலகின் முன்னணி தொழில்முனைவோராக இருப்பார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடின உழைப்பின் முக்கியத்துவம் குறித்த மகரிஷி பதஞ்சலியின் கருத்துக்களை சுட்டிக்காட்டிய பிரதமர், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஸ்டார்டப் இந்தியா இயக்கம், டிஜிட்டல் இந்தியா, தேசிய கல்விக்கொள்கை ஆகியவை இத்துறையில் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல உதவுவதாக கூறினார்.  புத்தகம் என்ற நிலையை கடந்து ஆராய்ச்சி மூலம் காப்புரிமை என்ற நிலையை அறிவியல் அடைந்ததை அவர் சுட்டிக்காட்டினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 4000 காப்புரிமைகள் என்றிருந்த தற்போது 30,000-க்கு மேலான காப்புரிமைகள்  என்று இருப்பதாக அவர் தெரிவித்தார். அதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வடிவமைப்பு எண்ணிக்கை 10,000 லிருந்து 15,000 ஆக  அதிகரித்துள்ளது என்று கூறினார். வர்த்தக முத்திரைகளின் எண்ணிக்கை 70,000-க்கும் குறைவாக இருந்தநிலையில், அது தற்போது 2,50,000-த்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா இன்று அனைத்து திசைகளிலும்  முன்னேறி வருவதாகவும் இது தொழில்நுட்ப தலைவராக  மாறுவதற்கு தேவையானது என்றும் திரு மோடி கூறினார். 2014-ல் ஆண்டில் சுமார் 150-ஆக இருந்த தொழில்நுட்ப ஆய்வு மையங்களின் எண்ணிக்கை தற்போது 650-ஆக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் இளைஞர்கள் தங்களின் சொந்த டிஜிட்டல் தொழில்களையும், புத்தொழில்களையும் தொடங்குவதால், உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக்கான  குறியீட்டு தரவரிசையில் இந்தியா 81-ல் இருந்து 40-வது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு தகவல்களை முன்வைத்த பிரதமர், அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை நூறிலிருந்து இருந்து ஒரு லட்சம் வரை அதிகரித்துள்ளது என்றார். இதனால், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் தொழில்களை கொண்டதாக இந்தியா மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்பத்தின் சமூக சார்பை மனதில் கொண்டு நாம் முன்னேறி வருகிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்பம் என்பது  அதிகாரம் அளித்தலுக்கு சக்திவாய்ந்த கருவியாக உள்ளது என்றார். பாகுபாட்டை களைவதற்கும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கும் இது ஒரு கருவியாக மாறியுள்ளது. சாமானிய மக்களுக்கு தொழில்நுட்பம் சென்றடையாத காலத்தையும், பணம் எடுத்தல், கடன் பெறுதல் ஆகியவற்றுக்கான அட்டைகள் போன்றவை அந்தஸ்தின் அடையாளங்களாக இருந்த காலத்தையும் நினைவு கூர்ந்த பிரதமர், தற்போது எளிதாக கையாளும் நடைமுறை காரணமாக யுபிஐ இயல்பான ஒன்றாக மாறியுள்ளது என்றார். ஜிஇஎம் இணையப்பக்கம், கோ வின் இணையப்பக்கம், இ-நாம் போன்றவை அனைவரையும் உள்ளடக்கும்  முகமையாக தொழில்நுட்பங்கள் மாறியுள்ளன என்று அவர் கூறினார்.

சரியான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சமூகத்திற்கு புதிய பலத்தை வழங்குகிறது  என்றும், வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் சேவைகள் வழங்க தற்போது  தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். இணைய தளம் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள், இ-கற்றல் தளங்கள், படிப்புதவி இணையப்பக்கம், மருத்துவ சிகிச்சைக்கான இ-சஞ்சீவினி, மூத்த குடிமக்களுக்கான  ஜீவன் பிரமாண் போன்றவை அனைத்து நிலைகளிலும் குடிமக்களுக்கு உதவுவதாக பிரதமர் குறிப்பிட்டார். சமூக நீதியை உறுதி செய்யவும், வாழ்க்கையை எளிதாக்குவதை விரிவுபடுத்தவும், எளியமுறையில் பாஸ்போர்ட்கள், டிஜி யாத்திரை, டிஜி லாக்கர் போன்ற அரசின் முன்முயற்சிகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் அதிவேகமாக ஏற்பட்டு வருவதை குறிப்பிட்ட பிரதமர், இந்திய இளைஞர்கள் இந்த வேகத்திற்கு ஈடுகொடுப்பதோடு, அதனைக் கடந்தும் செல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் தற்சார்பு இலக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், ஐடெக்ஸ் அல்லது பாதுகாப்பு மேன்மைக்கான புதிய கண்டுபிடிப்பு பற்றி கூறியதோடு, ரூ.350 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 14 புதிய கண்டுபிடிப்புகளை ஐடெக்ஸிடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் கொள்முதல் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். செமி கண்டக்ட்டர்கள் போன்ற புதிய வழிமுறைகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் போன்ற கொள்கை அளவிலான முன்முயற்சிகள் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார்.

பாதுகாப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பில்  ஹேக்கத்தான்களின் பங்களிப்பு பற்றி எடுத்துரைத்த பிரதமர், புதிய சவால்களை மேற்கொள்ளும் மாணவர்களிடையே ஹேக்கத்தான் கலாச்சாரத்தை தொடர்ந்து அரசு ஊக்குவித்து வருவதை கோடிட்டு காட்டினார். அடல் டிங்கரின் சோதனை கூடங்கள் பற்றி தெரிவித்த பிரதமர், வேறுபட்ட துறைகளில் இதுபோன்ற நூறு சோதனைக் கூடங்களை நாம் கண்டறிய முடியுமா என்று வினவினார்.  தூய எரிசக்தி, இயற்கை வேளாண்மை போன்ற துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதை எடுத்துக்காட்டிய பிரதமர், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது பற்றியும் வலியுறுத்தினார். இதற்கான சாத்தியங்களை நனவாக்க தேசிய தொழில்நுட்ப வாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பின்னணி:

மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில் உருவாக்கப்பட்டுள்ள லிகோ- இந்தியா என்பது உலகின் லேசர் தொழில்நுட்ப புவியீர்ப்பு கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றாகும்.  கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற மிகப்பெரிய பௌதிக பொருட்கள் இணையும் போது உருவாகும் புவியீர்ப்பு அலைகளை உணரும் திறன் கொண்டது இது. லிகோ- இந்தியா என்பது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹான்ஃபோர்ட், லூசியானாவில் உள்ள லிவிங்ஸ்டன்  ஆகிய கண்காணிப்பு மையங்களுடன் ஒத்திசைந்தும் செயல்படும்.

***

AD/SMB/RS/IR/AG/KPG



(Release ID: 1923414) Visitor Counter : 117