பிரதமர் அலுவலகம்

சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் தொடங்கி வைத்தார்

‘கால் பிஃபோர் யு டிக்’ செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்

பொருளாதாரத்தை வளர்க்க டிஜிட்டல் மாற்றத்தை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாகும்: சர்வதேச தொலைத்தொடர்பு சங்க பொதுச் செயலாளர்

“நம்பிக்கை மற்றும் அளவு ஆகிய இரண்டு முக்கிய ஆற்றல்களை இந்தியா கொண்டுள்ளது. இவை இல்லாமல் தொழில்நுட்பத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் நம்மால் கொண்டு செல்ல இயலாது”

“இந்தியாவுக்கான தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அதிகார செயல்முறை அல்ல, அது அதிகாரமளித்தல் இயக்கமாகும்”

“டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது”

“இன்று சமர்ப்பிக்கப்பட்ட தொலைநோக்கு ஆவணம் அடுத்த சில ஆண்டுகளில் 6ஜி துவங்குவதற்கான மிகப் பெரிய அடித்தளமாக மாறும்”

“5ஜி-யின் வலிமையுடன் மொத்த உலகத்தின் பணிக் கலாச்சாரத்தை மாற்ற பல நாடுகளுடன் சேர்ந்து இந்தியா உழைத்து வருகிறது”

“சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின், உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவைக் கூட்டம் தில்லியில் அடுத்த ஆண்டு அக்டோபரில

Posted On: 22 MAR 2023 2:11PM by PIB Chennai

இந்தியாவில் புதிய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ஐடியு) பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாரத் 6ஜி தொலைநோக்கு ஆவணம் மற்றும் 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைத் தளத்தையும் தொடங்கி வைத்தார். ‘கால் பிஃபோர் யு டிக்’ செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் என்பது தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஐ.நா.-வின் சிறப்பு முகமையாகும். இந்த முகமை இந்தியாவில் பகுதி அலுவலகத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த அலுவலகம் இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு சேவை புரியும். இந்த நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பதுடன், பிராந்தியத்தில் பரஸ்பர பயனுள்ள பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.

இந்தியா மற்றும் ஐடியு-வின் நீண்ட கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைக் குறிக்கும், புதிய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை உருவாக்க உதவியதற்காக பிரதமருக்கு, சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் திருமிகு. டொரீன் – பொக்தான் மார்டின் நன்றி தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தில் ஐடியு அலுவலகம் அமைவது நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும், மேம்பாட்டுத் திறனை முன்னேற்றவும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கவும் பெரிதும் உதவும் என்று கூறிய அவர், டிஜிட்டல் சேவைகள் திறன்கள், இணையவெளி பாதுகாப்பு, உள்ளடக்கிய டிஜிட்டல் ஆகியவற்றுக்கு தளமாக இது செயல்படும் என்றார். “பொருளாதாரத்தை வளர்க்க டிஜிட்டல் மாற்றத்தை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாகும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா மிகப் பெரிய ஸ்டார்ட்அப் சூழலைக் கொண்ட நாடாக திகழ்கிறது என்று கூறிய அவர், டிஜிட்டல் பரிவர்த்தனை சந்தையாகவும், உலகிலேயே தொழில்நுட்ப பணியாளர்கள் நிறைந்த நாடாகவும் விளங்குகிறது என்றார். பிரதமரின் தலைமையின் கீழ் ஆதார், யுபிஐ போன்ற தொழில்நுட்ப முன்முயற்சிகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியா அறிவு சார்ந்த பொருளாதாரமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்,  இன்று இந்து நாட்காட்டியின்படி புத்தாண்டைக் குறிக்கும் சிறப்பான நாளாகும் என்று கூறியதுடன் விக்ரம் சம்வாத் 2080 தினத்தையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப பல்வேறு நாட்காட்டிகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், உதாரணத்திற்கு தமிழ் நாட்காட்டி, மலையாளம் நாட்காட்டியை சுட்டிக்காட்டினார். விக்ரம் சம்வாத் நாட்காட்டி 2080 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். கிரிகோரியன் நாட்காட்டி 2023 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், விக்ரம் சம்வாத் அதற்கும் 57 ஆண்டுகள் முந்தயது என்றும் தெரிவித்தார். இந்த புனிதமான தினத்தில் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை புதிய தொடக்கத்தை கண்டுள்ளது என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகமும், புத்தாக்க மையமும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 6ஜி சோதனைத்தளம் தொடங்கப்பட்டதையும், இந்த தொழில்நுட்பம் சார்ந்த தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், டிஜிட்டல் இந்தியாவில் இவை புதிய ஆற்றலை வழங்குவதுடன் உலகளாவிய தெற்குப் பகுதிக்கு புத்தாக்கங்களையும், தீர்வுகளையும் வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழிற்சாலைகள், ஸ்டார்ப்அப்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். இந்த முன்முயற்சி தெற்காசிய நாடுகளுக்கு இடையே கூட்டுறவை வலுப்படுத்துவதுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

ஜி20 தலைமைத்துவத்தின் பொறுப்புகளை  இந்தியா நிறைவேற்றி வருவதாகவும், பிராந்திய வேறுபாடுகளை களைவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் நடைபெற்ற உலகின் தென்பகுதி நாடுகளின் உச்சி மாநாடு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும், உலகின் தென்பகுதி நாடுகளின் தேவைகளுக்கேற்ப வடிவம் மற்றும் தரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்ததாகக் கூறினார். ஏனெனில் உலகின் தென்பகுதி நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பப்   பிரிவினைக்கான அத்துமீறலை உருவாக்குதற்கான முயற்சி அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். தென்பகுதி  நாடுகளுக்கு இடையே, பொதுவான இணைப்பை உருவாக்க இந்தியா, தொடர்ச்சியாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இன்றைய நிகழ்வான சர்வதேச தொலைத்தொடர்பு சங்க அலுவலகத்தின் திறப்பு மற்றும் புத்தாக்க மையம், அதற்கான  கோணத்தில் இந்தியா சென்று கொண்டிருப்தை உறுதிப்படுத்துவதாகவும்  குறிப்பிட்டார்.

உலக நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை  களைந்து அவற்றை இணைக்கும் பாலமாக இந்தியா திகழும் என உலக நாடுகள் எதிர்பார்ப்பது இயற்கையான ஒன்று என்று குறிப்பிட்ட பிரதமர் இந்தியாவின் வல்லமை, புத்தாக்கக்  கலாச்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான மனிதசக்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மத்திய அரசின் கொள்கைகள் ஆகியவையே உலக நாடுகளின் எதிர்பார்ப்பிற்கு காரணமாகத் திகழ்வதாகவும் கூறினார். விசுவாசம் மற்றும் அளவுகோல் என இரண்டு விதமான வலிமையை இந்தியா கொண்டு இருப்பதாகக்  குறிப்பிட்டார். இந்த விசுவாசம் மற்றும் அளவுகோல் இல்லாமல் தொழில்நுட்பங்களை அனைத்து மூலை முடுக்கிலும் நம்மால் கொண்டு செல்ல  இயலாது, எனவேஇந்த கோணத்தில் இந்தியாவின் முயற்சிகளை ஒட்டுமொத்த உலக நாடுகள்  வியந்து பாராட்டி வருவதாகப் பிரதமர் கூறினார்.

இந்தியாவின் இந்த தொடர்ச்சியான முயற்சிகள்உலக நாடுகள் அனைத்திலும் பேசும் பொருளாக மாறியிருப்பதாகக்  கூறிய அவர், இந்தியா தற்போது உலகில் ஒருங்கிணைந்த ஜனநாயகமாக  திகழ்வதாகவும் குறிப்பிட்டார். 100 கோடிக்கும் அதிகமான செல்போன் இணைப்புகளைக் கொண்டு இருப்பதற்கு மிகக்  குறைவான விலையில ஸ்மார்ட் போன்களும், இணையதள வசதிகளும் வழங்கப்படுவதே காரணம் என்றும் கூறினார்இந்தியாவில் ஒவ்வொரு மாதமும், 800 கோடிக்கும் அதிகமான மின்னணு பணப்பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் கோ-வின் செயலி மூலம் 220 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகக்  கூறினார். கடந்த சில ஆண்டுகளில் நேரடி வங்கிப் பணப்பரிமாற்றம் மூலம், குடிமக்களின் வங்கிக்கணக்கில்   ரூ.28 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை செலுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் அமெரிக்காவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விட, அதிகமான வங்கிக்கணக்குகளை ஜன்தன் வங்கிக்கணக்குத் திட்டத்தின் மூலம் இந்தியா வெற்றிகரமாக தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் என்பதை இந்தியா புதிய சக்தியாகப் பார்க்காமல் அதிகாரம் அளிப்பதற்கான இயக்கமாக  கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதுடன், அனைவருக்குமானதாகக் கருதப்படுவதாகக்  கூறினார். டிஜிட்டல்மயமாக்கல் நடவடிக்கைகள் கடந்த  சில ஆண்டுகளில்  இந்தியாவில் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப் பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு முன்பு 60 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டு இருந்த அகண்ட அலைவரிசை  இணைப்பு தற்போது 800 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதேபோன்று, கடந்த 2014-ம் ஆண்டுக்கு  முன்பு 25 கோடியாக இருந்த இணையதள இணைப்புகள் தற்போது, 85 கோடியாக அதிகரித்திருப்பதையும் நினைவு கூர்ந்தார்.

நகர்ப்பகுதிகளை மிஞ்சும் அளவுக்கு, கிராமங்களில் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பது, நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் மின்னணு சக்தி  சென்று சேர்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றார். கடந்த 9 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு வசதிக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம்  25 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு கண்ணாடி இழை பதிக்கப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்த பிரதமர், 2 லட்சம் கிராம பஞ்சாயத்துக்கள் கண்ணாடி இழை தொலைத் தொடர்  மூலம்  இணைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.  5 லட்சம் பொதுச் சேவை மையங்கள் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருவதாகவும்இதன் காரணமாக மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டரை மடங்கு வேகமாக வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் அல்லாத துறைகளுக்கும்  ஆதரவு  அளித்து வருவதாகவும், இதற்கு பிரதமரின் கதி சக்தி மெகாத் திட்டம் உதாரணமாக திகழ்வதாகவும் பிரதமர் கூறினார்.

டிஜிட்டல் புரட்சி என்ற அடுத்த இலக்கை நோக்கி தற்போது இந்தியா, வேகமாக முன்னேறி வருவதாகக்  குறிப்பிட்ட பிரதமர், உலக நாடுகளில் 5ஜி அலைவரிசை சேவையை வேகமாக அமல்படுத்திய நாடாக இந்தியா திகழ்வதாகவும், தோராயமான 350 மாவட்டங்களில் உள்ள 125 நகரங்களில் வெறும் 120 நாட்களில் 5ஜி அலைவரிசை சேவை கொண்டு சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.  5ஜி அலைவரிசை சேவை நிறைவடைந்த 6 மாதங்களுக்கு பிறகு, 6ஜி  அலைவரிசை சேவைக்குறித்து இந்தியா விவாதித்து வருவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் 6ஜி அலைவரிசை சேவையை அமல்படுத்த, இன்றையக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முக்கிய பங்காற்றும் எனவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்துள்ளது, உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், 4ஜி தொழில்நுட்பத்திற்கு முன்பாக தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஒரே நாடு இந்தியா என்று கூறினார். ஆனால் இன்று உலகின் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்பதை நோக்கி சென்று கொண்டிருப்பதாக  அவர் தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்ப சக்தியுடன் அனைத்து நாடுகளின்  பணி கலாச்சார மாற்றத்திற்காக பல்வேறு நாடுகளுடன் இந்தியா செயல்பட்டு வருவதாக கூறினார். 5ஜி தொடர்புடைய வாய்ப்புகள், வர்த்தக மாதிரிகள், வேலைவாய்ப்பு திறன்களை உணர்வதற்கு தொலைதூர  வழி உள்ளதாக அவர் தெரிவித்தார்.  இந்த 100 புதிய ஆய்வகங்கள் இந்தியாவின் தனித்துவத் தேவைகளுக்கு ஏற்ப 5ஜி செயலிகளை வடிவமைப்பதற்கு உதவும் என்று அவர் கூறினார். 5ஜி நவீன வகுப்பறைகள், பண்ணைகள், நுண்ணறிவு போக்குவரத்து முறைகள் அல்லது சுகாதார சேவைகள் ஆகியவற்றில் இந்தியா விரைவாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.  இந்தியாவின் 5ஜி தொழில்நுட்ப தரங்கள் உலகளாவிய 5ஜி தொழில்நுட்ப முறைகளின் ஒரு பகுதி என்று அவர் கூறினார்.  எதிர்கால தொழில்நுட்பங்களின் தரத்திற்காக சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்துடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.  புதிய இந்திய சர்வதேச தொலைத்தொடர்பு சங்கப் பகுதி அலுவலகம் 6ஜி தொழில்நுட்பத்திற்கான சரியான சூழலை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்தும், உலகில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் உலக தொலைத்தொடர்பு தரங்கள் கூட்டம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தில்லியில் நடைபெறவுள்ளது என்பதை பிரதமர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிறைவாக பேசிய பிரதமர், சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் சுட்டிக்காட்டினார். இந்த 10 ஆண்டுகள் இந்தியாவின் தொழில்நுட்பத்தை சார்ந்தது என்று அவர் கூறினார். இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு மாதிரி இலகுவானது, பாதுகாப்பானது, வெளிப்படையானது என்று கூறிய அவர், தெற்காசியாவின் அனைத்து நட்பு நாடுகளும் இதன் மூலம் பயனடைவதாக கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 இந்நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், மத்திய தொலைத்தொடர்புத்துறை இணையமைச்சர் அமைச்சர் திரு தேவ்சிங் சவுகான், சர்வதேச தொலைத் தொடர்பு சங்க தலைவர் திருமதி டோரின்-போக்டன் மார்ட்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் என்பது தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான ஐநாவின் சிறப்பு முகமையாகும். இதன் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது.  இதற்கு கள அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. பகுதி அலுவலகத்தை அமைப்பதற்கு  கடந்த 2022 மார்ச் மாதம் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவில் இந்த பகுதி அலுவலகம் புதுதில்லியில் உள்ளது.

••••••

(Release ID: 1909491)

MS/PKV/IR/ES/RR/AG/RS/KRS



(Release ID: 1909579) Visitor Counter : 189